என்னுடைய
கண்கள் அழகானவை என்று அம்மா சொல்லுவாள். கண்களில்
மையிட வேண்டும் என்கிறாள். ‘உன்னுடய பச்சிளம் கன்னத்தின் நடுவில் வட்டமாகக் கருப்பு
மையிடுவதும், வெண்மையான கண்களின் இமைகளில் மையிடுவதும்
பார்ப்பதற்கு எவ்வளவு கலை நயத்துடன் அழகாக இருக்கிறது’ என்று அண்ணி கூட சொல்லுகிறாள்.
உண்மையில் என் கண்கள் பெரியதே - ஆனால்
என்ன லாபம்? அவர்களுடைய இராமனின் கண்கள் புளிய மரத்தின் விதை போன்ற கண்கள். எனக்கும் அவனுக்கும் பத்து வயதே. இன்னும் சொன்னால் நானே அவனைவிட பத்து நாட்கள் மூத்தவள். ஆனால் என்னைவிட அவனே ஊரில் நடந்த வினோதமான விசயங்கள் நூற்றுக்குமேல் பார்த்துள்ளான். அதில் நான் ஒருபங்கு கூட பார்க்கவில்லை. அப்படித்தான் ஒருநாள்
என்னுடைய வீட்டுவாசலில் பெரிய சண்டை நடந்தது. நானும் வீட்டிலிருந்து ஓடிப் போய், அந்தச் சண்டையை வேடிக்கை பார்த்த கும்பலில் கலந்து கொண்டு வேடிக்கை பார்த்தேன். என்னுடைய அண்ணன் எங்கிருந்து வந்தானோ என்னமோ தெரியவில்லை. என்னைப்
பறபறவென இழுத்துக் கொண்டு போய் வீட்டிற்குள்ளே தள்ளிவிட்டான்.
“பெண்பிள்ளை பயமே இல்லாமல் எப்படிப் போய்ப் பார்க்கலாம். அதற்கு அம்மாவும், அந்த அலறல் சத்தத்தை வீட்டில் இருந்து கேட்கும்போது
இதயம் பயத்தில் தடதட என அடிக்கிறது” என்கிறாள்.
“எனக்கு எந்த பயமும் வரவில்லை”
என்று சொன்னால் எல்லோரும் என்னைத் திட்டுவார்கள். என்னுடைய அண்ணியின் கோழைத்தனத்தைப் பார்த்தால் அண்ணனுக்கு மனதிற்குள் எவ்வளவு மகிழ்ச்சி. அண்ணியைப் பயங்காட்டி,
அவள் பயந்து போனால் அதைப்பார்த்து அண்ணன் கலகலவென சிரிப்பான். அண்ணியும் அதுக்கேத்த மாதிரி நடந்து கொள்வாள்.
பேசும்போது பயந்து கொண்டு கண்களை மூடிக்கொள்வாள். கண்ணைத் திறந்து பேசு என்றாலும் “அம்மோ பயம்” என்று மூடிக்கொள்வாள். அண்ணியின் கண்கள்கூட பெரிய கண்களே. ஆனால் என்ன லாபம்? அண்ணிக்கு அந்தக் கண்களை மூடிக்கொண்டே இருப்பதே பிடித்திருக்கிறது. தெருக்களில் நடக்கும்போது அம்மாவும் அண்ணியும் தலையை நிமிர்ந்து நடப்பதில்லை. நடக்கும்போது தரையைப் பார்த்தே நடப்பார்கள். அப்படித் தரையில் என்னதான் இருக்குமோ தெரியாது. ஒருவேளை தரையில் ஏதாவது இருந்தாலும் அதையே தினமும் எப்படி பார்க்க முடியும்? தெருக்களில் என்ன இருக்கிறது என்று சரியாகப் பார்ப்பதே இல்லை. இந்த இலட்சணத்தில் அம்மா என்னைத் திட்டுகிறாள்.
‘என்ன அப்படி தலை நிமிர்ந்து பார்க்கிற’, தலையை நிமிர்ந்து நடக்காத. தலை குனிந்து நட என்று தலையில் கொட்டுவாள்.
ஆனால் உண்மையில் நான் அம்மா சொல்லுவது போல் நடப்பது இல்லை. தெருக்களில் வரும்போது அங்கும் இங்கும் பார்க்கவில்லை என்றால் எனக்கு எப்படித் தெரியும் அங்கு நடப்பவை. இருபத்தி நான்கு மணிநேரமும் தெருக்களில் திரிகிறான் இராமன். என்னை மட்டும் திட்டுகிறார்கள்.
ஆனாலும் அவனுக்கு அதிகமாகத் தெரியவில்லை. பெண்கள் சிலவற்றை மட்டும் பார்த்தால் போதுமென அவனுக்கு எண்ணம். இவை அனைத்தும் அம்மாவிற்கு நன்றாகத் தெரியும்.
நாம் பெண்கள், எதையும் பார்க்கக் கூடாது. பார்த்தால்
என்ன பார்க்கிறாய் என்று அம்மா திட்டுவாள். வயதுக்கு வரும் ஆண்களைப் பார்க்கவே கூடாது. இப்போது நான் இராமனுடன் விளையாடுகிறேன். இரண்டு வருடங்கள் போனால் இராமன் கூட விளையாடக்
கூடாது. அவன் வருவது தெரிந்தால் வீட்டிற்குள்ளே ஓடிப்
போகவேண்டும். தெருக்களில் எங்கு பார்த்தாலும் பார்க்காதது போன்று தலைகுனிந்துகொண்டு போய்விட வேண்டும். என்னுடைய பக்கத்து வீட்டு பத்மா அக்கா கூட அப்படியே பார்க்கிறாள். ஏன் அக்கா அப்படிப் பார்க்கிற என்று கேட்டால் அப்படிப் பார்த்தால்தான் அழகாக இருக்கும் என்றாள். அப்படி எனக்கு இன்னும் தெரியவில்லை. எப்போது பழக்கம் வருமென கூட தெரியாது. ஆனால் இராமனுக்கு மட்டும் செத்தாலும் அப்படி வராது.
பெண்களின் கண்களில் சீக்கிரமாகக் கண்ணீர் வர வேண்டும். முந்தாநாள் அம்மா பக்கத்து வீட்டு பெண்ணை “கல் நெஞ்சுகாரியே உன் கண்களில் ஒருதுளி கண்ணீர்கூட வரவில்லை” என்று திட்டினாள். பெண்களுக்குப் பொசுக்கு பொசுக்கு என்று அழவேண்டும். எனக்கு
என்னமோ கோபம் மட்டும் வருகிறது அழுகை வரவில்லை.
என்னைத் திட்டினால் கோபம் வருமே ஒழிய அழுகை வருவதில்லை. அண்ணியைத் திட்டினால் அழுகையே வருகிறது. அப்போதுதான் அண்ணனின் கோபம் தணியும்.
“அழுததுபோதும் நிறுத்து என்பான். ஆனாலும்சரி அழுகையை நிறுத்தாமல் குலுங்கிக் குலுங்கி அழுவாள் அண்ணி.
அண்ணனும் அண்ணியும் சண்டை போட்டுக்கொண்டால் எப்போதும் அண்ணியே அழுவாள். அண்ணன் ஒருதடவை கூட அழுதது இல்லை. அதே போல அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக் கொண்டால் அங்கே
அம்மாவே அழவேண்டும். எனக்கு மட்டும் அழுகையென்றால் பிடிக்கவே பிடிக்காது. அழுதால் என்னுடைய கண்கள் நன்றாக இருக்காது. கண்ணில் போட்ட மை முகத்துலபட்டு கருப்பாக
ஆயிடும். அதனால் நான் எப்போதும் அழுவதில்லை.
நாம் என்ன பார்த்தாலும்
சரி அதை நாம் சொல்லவும் கூடாது,
செய்யவும் கூடாது. என்னுடைய தந்தையின் கையிலுள்ள கூடையில்
மாம்பழங்கள் இருப்பதைப் பார்க்கிறாய் என்று நினைத்துக்கொள். உடனே ஒ! மாம்பழங்கள் எனக்
கத்த புத்திச் சொல்கிறது. அப்போது கத்தக் கூடாது சாப்பிடவேண்டுமாம். மாம்பழங்களைப் பார்த்தப் பிறகு குதிக்காமல் இருந்தால் அதைப் பார்த்தற்கான பலன்தான் என்ன?
அதே போல
கோபம் வந்தாலும்
கத்தக் கூடாது என்கிறார்கள். ஒருநாள் இப்படித்தான் என்ன நடந்தது என்று தெரியுமா. கல்யாணி அக்கா கல்லூரியில் இருந்து வந்துகொண்டு இருக்கும்போது ஒரு பையன் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டான். அவனுடைய கால்கள் கீழே விழுந்ததில் சுளுக்கிக் கொண்டன. அவனால் எழுந்திருக்க முடியாமல் கிடந்தான். அந்த நேரம்பார்த்து சாலையில் யாரும் இல்லை. கல்யாணி அக்கா சைக்கிளைத் தூக்கிப் பக்கத்தில் இருக்கும் கம்பத்தில் சாய்த்து நிறுத்தி வைத்தாள். அந்தப் பையனின் கால்கள் சுளுக்குக் கொண்டதால் எழுந்திருக்கும்
போது நடுங்கின. அவன் கீழே விழுந்து விடாமல் கல்யாணி தாங்கிப் பிடித்துக் கொண்டாள். இதை எல்லாத்தையும் பக்கத்து வீட்டு மாமா ஒருவர் பார்த்து கல்யாணியின் அப்பாவிடம் சொல்லிவிட்டார். அங்கேயே கல்யாணியை அவர் நன்றாக அடித்தார். யாரென தெரியாத ஆண்பிள்ளையை ரோட்டின் மீது தொடுவாயா எனத் திட்டிக்கொண்டே அடித்தார். விழுந்து விட்டதைப் பார்த்தால், பார்த்தும் பார்க்காதது போல் உன் வழியில் நீ வர வேண்டியதுதானே. உனக்கு என்ன தேசச்சேவை செய்யவேண்டி இருக்கிறது என்று திட்டினார்.
கல்யாணியின் தந்தையாக இருந்தாலும் சரி மாமாவாக இருந்தாலும் சரி அப்படி கல்யாணியை அடித்தது எனக்குக்
கோபமே வந்தது. அதனால் மாமாவுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டேன். பார்த்தப் பிறகு எதாவது செய்ய வேண்டும்தானே. பிறகு பார்ப்பது எதற்கு? பார்ப்பதற்கு முன்பும் பார்த்தப் பின்பும் ஒரே விதமாக இருக்க வேண்டும் என்றால்
ஏன் பார்க்க வேண்டும்? என்று அம்மாவிடம் கேட்டால் அவளுக்கும் புரியப்போவதுமில்லை. வாயைமூடு என்றே சொல்லுவாள்.
கண்களை மூடிக்கொள்ளவேண்டும். வாயை மூடிக்கொள்ள வேண்டும். என்னுடைய அண்ணனின் அலுவலகத்தில் வேலைசெய்யும் பெண் வந்திருந்தாள். அவள் எவ்வளவு நன்றாகச்
சிரிக்கிறாள். ஆனால் அவள் நெற்றியில் பொட்டு வைத்துகொள்ள வில்லை. கண்களுக்கு மை பூசுவதில்லை. இருந்தாலும்சரி அவள் மிகவும் அழகாக இருக்கிறாள். அந்தப் பெண் அங்கு இருக்கும்வரை நன்றாகச் சிரித்துக்கொண்டே இருந்தாள். இந்த மாதிரி பெண்களை அம்மாவுக்கும் அண்ணிக்கும் பிடிப்பதில்லை. முகத்தில் பொட்டு வைக்கவில்லை என்றாலும், காலில் கொலுசு போடவில்லையென்றாலும் அந்த முகம் அசிங்கமாக இருக்குமாம். உண்மையில் ‘நல்லா இல்லையா அம்மா, நல்லா இல்லையா அம்மா’ என்று எத்தனை தடவை கேட்டிருப்பேன். அதற்கு அம்மா சொல்கிறாள் எனக்குப்
பொட்டு இல்லாத முகம் ரொம்ப அசிங்கமாகத் தோன்றுகிறது. அதை என்னால் பார்க்க முடியாது என்கிறாள். அப்படியென்றால் அம்மாவின் வயது ஆகும்போது என்னுடைய கண்கள் கூட அம்மாவின் கண்கள் போல மாறிப்போகுமோ?
அம்மு! அப்படி என்னுடைய கண்கள் மாறிப் போனால் என் கண்களுக்கும் எதுவும் தெரியப்போவதில்லை.
எங்கெங்கோவெல்லாம் இருப்பது உன் கண்களுக்கு மட்டும் எப்படித்தான்
தெரிகிறதோ என்று கேட்கிறாள் அம்மா. அம்மாவின் கண்களுக்கு எதுவும் தெரிவதில்லை. தெரிகின்றவற்றை குறித்தும் அம்மா கண்டுகொள்ள மாட்டாள். பெண்களின் கண்கள் ஏன் இப்படி இருக்கிறதோ?
(ஓல்காவின் ராஜகீய கதலு என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ள கல்லு என்னும் சிறுகதையின் தமிழாக்கம்)