-->

அண்மை

திருநங்கை இலக்ஷயா மன்னார் கவிதைகள்


பெண் ஆண் என்ற இருமையின்
எப் புறவடிவத்திலும் எனைப் பொருத்திக்கொள்ளாது
நான் "இவளாகி"
யார் முன்பெல்லாம்
நின்றேனோ.
அவர்களில்
எவர் குரலெல்லாம்
அக்கா, அம்மா, தோழி, மகளென்று எனை விளித்ததோ
அதை விடவா
குழலும் யாழும் இனிதெனத்தோன்றும்...!
________

உங்கள் பெரும்பான்மைப் பாலீர்ப்பின் வரையறைக்குள்
பொருந்தவில்லை என்பதாலே
என் காதல்
(பொருந்தாகாமம்)
பெருந்திணையாகிவிடுமோ..?
________

கூத்தாண்டவர் கோவிலில்
கட்டிக்கொண்ட தாலியுடன்
"கடவுளையே கணவனாக
வாய்க்கப்பெற்றவர்கள் நாம்"
என்று சிலாகிக்கிறாள் தோழி.

கடவுளே என்றாலும்
மறுநாளே கைவிட்டுச் செல்ல ,
திருநங்கை என்ற ஒற்றைக் காரணம்
போதாதா..

இதில்
ஆடவன் ஆகினும்
அரவான் ஆகினும்
ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
________

பாலாதிக்க முட்களால்
நித்தம் நித்தம்
குத்தும் நீங்கள்
என்னிடம் எதிர்ப்பார்ப்பதென்னவோ
ஒரு ரோசாவின் மென்மையை.
________

எனக்கான எல்லாவற்றையும்
பிடுங்கிக்கொண்டு
ஆசிர்வதிக்கக் கோருகிறார்கள்.

நானோ இழைக்கப்பட்ட
அநீதி மறந்து
"நல்லாரு சாமி"யென வாழ்த்தி நகர்கிறேன்
சன்மானமாய் சில சில்லறைகளோடு.
________

கேலி கிண்டல்களால்
என் கல்வியைக்
காவுவாங்கியவர்கள் கேட்கிறார்கள்.
"நீ ஏன் போலீஸ் ஆவல..?
உங்காளுங்கல்லாம் எப்படி சாதிக்குறாங்க தெரியுமா..?"
________

உங்கள் பரிதாபத்தில்
விளைந்த அன்பை
எனக்கு விருந்தாக்காதீர்கள்.

முடியுமெனில்
தெருவோரத்து நாய்கட்கு
நான்கு ரொட்டித்துண்டுகளைப்
பரிசளியுங்கள்.

அது வேண்டுமானால் வாலாட்டும்.
நானல்ல.
________

ஒரு நாள் மழைபோதும்
காளானுக்கு.
குறிஞ்சிக்குத்தான்
மாமாங்கம் வேண்டும்.
________

"நீயெல்லாம் தெய்வப்பிறவிம்மா" என்றார்.
பஸ்தியின் போது எதிர்பட்ட பெரியவர்.
"உங்கள் வீட்டிலும் என்னைப்போலொரு தெய்வப்பிறவி பிறகட்டுமென"
ஆசிர்வதித்து நகர்ந்தேன்.

Author Picture

திருநங்கை லக்ஷயா மன்னார்

திருநங்கை எழுத்தாளர். கலை இலக்கிய இயக்கச் செயல்பாட்டாளர், அரங்கக் கலைஞர், திவ்ய பாரதி இயக்கத்தில் வெளிவந்த 'ஜில்லு' திரைப்படத்தில் நடித்திருப்பவர்.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு