-->

அண்மை

மோலார் அடையாளங்களும், மூலக்கூறுகளின் உருவாகுதலும் - பாலின அடிமைகள் பற்றிய கதையாடல் - ஜமாலன்

”பாலினப் பிரிவு தற்கால பண்பாட்டிற்குள் உள்ள “மனிதமாகிய” தனியர்களின் பகுதியாக உள்ளது; அதனால், யார் தங்களது பாலின உரிமையை நடைமுறைப்படுத்துவதில் தோல்வியடைகிறார்களோ அவர்கள் தொடர்ந்து தண்டிக்கப்படுகிறார்கள். ஏனெனில், பாலினம் எந்த “சாரத்“-தையும் வெளிப்படுத்துவதும் அல்லது புறநிலைப்படுத்துவதும்மில்லை, எந்த ஒரு ஆதர்ச லட்சியத்திற்காக  ஏங்குவதுமில்லை; ஏனெனில் பாலினம் என்பது ஒரு உண்மை அல்ல, பல்வேறுவிதமான பாலின நடவடிக்கைகள் பாலினம் என்ற கருத்தை படைக்கின்றன, இந்த நடவடிக்கைகள் இல்லாமல், பாலினம் என்கிற ஒன்றே இல்லை.  பாலினம் என்பது ஒரு கட்டமைப்பு அது தொடர்ந்து தனது தோற்ற மூலத்தை மறைத்தபடியே உள்ளது.”  - ஜீதித் பட்லர்[1]

1. பாலின அலைதல்

கண்ணம்மா என்கிற சொல்லிலிருந்து இதனை துவங்கலாம். கண்ணம்மா மஹாகவி பாரதியால் பரவலாக்கப்பட்ட ஒரு சொல். அதற்குமுன்பு அச்சொல் இருந்திருக்கலாம். ஆனால் பாரதிக்குபின்தான் அது பரவலாக அறியப்பட்டுள்ளது. பாரதி தமிழ் மொழிக்குள், தமிழ் உடலுக்குள் பாய்ச்சிய பல ஆற்றல்களில் ஒன்று. அதனுள் காதல், அனுக்கம், நேசம், நட்பு, அன்பு என உணர்வீர்ப்பான சொற்களின் பொருள் அடுக்கப்பட்டு உள்ளது.  ஆனால், எனக்கோ இச்சொல் இளம் வயதில் என்னை பயமுறுத்திய ஒரு திருநம்பியை குறிக்கும் சொல். அவரை அன்று வழங்கிய “அலி“ “ஒம்பது” போன்ற சொற்களால்கூட சொல்ல அஞ்சுவோம். அவர் பற்றிய பல கதைகள் காற்றில் பரவிக்கொண்டிருக்கும் அதை “மித்“ என்றுதான் சொல்லவேண்டும்.

அவரை எங்கள் ஊரில் குறிப்பாக எங்கள் தெருவில் அனைவருக்கும் தெரியும். எனது கிராமத்தில் பிளஸ்-டு இல்லை என்பதால் எங்கள் ஊரிலிருந்து 3 கி.மி. தூரத்தில் இருந்த ஊரில்தான் பெரும்பாலோர் படித்தோம். காலையிலும், மாலையிலும் கருங்கல்சாலையில் நடைதான். பேருந்து கிடையாது. சாலையின் இருமருங்கிலும் தோட்டங்கள், வயல்கள். மாணவர்கள், மாணவிகள் என கும்பல் கும்பலாக போவோம். எங்கள் தெருமுடியும் பள்ளிவாசலுக்கு பின்புற சாலையில் நடந்தால் குளம், அதன்பின் பத்ரகாளி கோவில், அதைதாண்டினால் கிறித்தவர்களின் இடுகாடு, அப்புறும் இருபுறமும் நஞ்சை வயல்கள் முடிந்து வரும் புஞ்சைமேடு.  அதில் வேலி அடைக்கப்பட்ட ஒரு பெரிய தோட்டம். அதன் நடுவில் ஒரு குடிசை. அக்குடிசைதான் கண்ணம்மாவின் வீடு. அந்த வீட்டிலிருந்து கால் கி.மீ. நடந்தால் ரயில்வே கேட் அதன்பின் ஒரு சின்ன ஊர் அதை தாண்டினால் எங்கள் பள்ளி.  இரவில் எந்த வெளிச்சமும் இல்லாமல் இருண்டு கிடக்கும் அந்த சாலையில், தன்னந்தனியாக அந்த குடிசையில் வாழ்ந்தவர்தான் கண்ணம்மா.

நல்ல உயரமான, திரளான தோள்களை உடைய, எப்போதும் மடித்துக் கட்டிய வேட்டி, கைவைத்த பனியன், தலையில் முண்டாசு, அதற்குள் அவரது கூந்தல் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும், ஆணாக தோற்றம் தரும் ஆணுடைக்குள் ஒரு பெண். வயது அப்போதே 50 முதல் 60க்குள் இருக்கலாம். நாங்கள் அந்த வயலைத் தாண்டியவுடன் தயராகிவிடுவோம். அவரது தோட்டம் முடிந்து ரயில்வே கேட்டை அடையும் வரை திரும்பிகூட பார்க்காமல் ஒரே ஓட்டம். அந்த கண்ணம்மா ஒரு கொலைகாரர், முரடர், பிள்ளை பிடிப்பவர் இப்படியாக பல ”பூச்சாண்டி” பயங்கள்தான் காரணம். நான் ரகசியமாக அவரை அவர் அறியாமல் சிலமுறை பார்த்து உள்ளேன். தடை செய்வதை அறிவது மனதின் ஒரு அடிப்படை இயக்கம்தானே. இத்தனைக்கும் எனது தாத்தாவிற்கு அவரை நன்றாகத் தெரியும். ஒருமுறை எனது தாத்தாவை பார்க்க வீட்டிற்குகூட வந்தார். அப்போ அவரை வீட்டிற்குள்ளிருந்து எட்டி எட்டிப் பார்த்தோம் நாங்கள். ஆனாலும், அவர் ஒரு பெண் ஏதோ ஒரு காரணம் பொருட்டு ஆணாக இருக்கிறார். தனியாக அந்த இருள் அடர்ந்த பகுதியில் என்பது மட்டும் தெரியும்.

அப்போது பாரதி கவிதைகளை படித்து காற்று வெளியிடை கண்ணம்மாக்களை (பன்மைதான், காரணம் ஒரு கண்ணம்மாவை வெளியூரில் வைத்துக்கொண்டு பள்ளியில் மற்றொன்று தேடுவதால்) தேடிக்கொண்டிருந்த காலகட்டம். இடைக்கிடை இந்த கண்ணம்மா பயம்வேறு. அவர் கையில் எப்போதும் ஒரு ஆயுதத்துடன்தான் இருப்பார். இடுப்பில் திருக்கைவால் கட்டியிருப்பார். பிச்சுவா எனப்படும் கத்தி வைத்திருப்பார். பல பஞ்சாயத்துகளையும் தீர்த்துவைப்பார். களவாடுவார். கள்ளுகுடிப்பார். இப்படி பலநூறு கதைகள். சிலநேரங்களில் இளைஞர்கள் வயதானவர்கள் அவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அவருடன் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். எப்போதும் தனது தோட்டத்தில் எதாவது வேலைகள் செய்து கொண்டிருப்பார். ஒருமுறை நாங்கள் ஓடியதை பார்த்து, “ஏம்பா இப்படி ஓடுகிறீர்கள், இங்க வாங்க மாங்காய் தருகிறேன்“ என்று கூப்பிட்டு உள்ளார்.  ஒருமுறைகூட எங்களை அவர் மிரட்டியதில்லை. ஆனால் அவர்பற்றிய பயம் போனதே இல்லை. ஊரில் குழந்தைகளை பயமுறுத்த கண்ணம்மாவிடம் பிடித்து கொடுத்துவிடுவேன் என்று அம்மாக்கள் மிரட்டுவது உண்டு. பலவருடங்கள் கழித்து நான் திரும்ப ஊருக்கு போனபோது கண்ணம்மா இறந்துவிட்டதாக சொன்னார்கள். அந்த வீடு சிதிலமடைந்துவிட்டிருந்தது. தோட்டம் வெறிச்சோடி இருந்தது. வேறுயாரோ அவரது உறவினர்கள் அதை வைத்திருப்பதாக சொன்னார்கள். ஆனால் 25 ஆண்டுகள் கழித்து இதை எழுதும்போதும் எனக்கு அவரது அந்த வெள்ளை உடையுடன் தனது நீண்ட கூந்தலின் கொண்டையை மறைக்கும் முண்டாசுடன் கற்பு, கன்னிமை, வீரம், அச்சம் தருதல் உள்ளிட்ட எல்லாவற்றிலும் புராதனத் தாய்போன்று ஒருவித உக்கிரமும், சாந்தமும் கலந்த முகத்துடன் தோற்றம் தருகிறார்.

இன்று அவரது அந்தத் தனிமையின் காரணம் புரிகிறது. அது ஒரு சமூகப் புறக்கணிப்பு. பெண் ஆணாக மாறி வாழும் வேட்கையால் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கலாம்[2]. ஒரு பெண்ணாக தனிமையில் வாழ ஆணுடை தரித்து ஆணாக மாறி வெளிப்பாடு கொண்டிருக்கலாம். ஆனால், அவரது வீரமும் துணிச்சலும், அந்தப் பகுதியில் ஒரு அச்சத்தை உருவாக்கி இருந்தது உண்மை. புறக்கணிப்பின் துயரமே அவரிடம் வீரமாக மாறிவிட்டது. சமூகம் ஏற்படுத்திய அச்சத்தை, அதற்கு எதிராக பாவித்தார் போலிருக்கிறது.

எங்கள் தெருவில் இருவர் இருந்தனர். அதில் ஒருவர் எனது தூரத்து உறவினர். மற்றொருவர் தெருவில் உள்ளவர். இருவரும் ஆண்கள்தான். இஸ்லாமியர்கள். ஊர் ஜமாத்தை[3] சேர்ந்தவர்கள். அவர்களுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். ஆனால், இருவரும் பெண்மையாக அல்லது பெண்பாலினமாக அறியப்பட்ட பாவனைகளைக் கொண்டவர்கள். இன்றுவரை அப்படித்தான் உள்ளனர். சென்றமாதம் அவரை சந்தித்தபோதுகூட, அவர் வந்து ”மச்சான், மச்சான்” என்று அதே பெண்மை நாடகத்தின் நளினத்துடன்தான் பேசிவிட்டு போனார். பேச்சில் பேண் குரல், நளினம், நடை, எல்லாம் பெண்மையின் நிகழ்த்துதலாகவே அவர்களிடம் உள்ளது. ஊரில் தனித்தன்மை கொண்ட அவர்கள் இருவரும், கொஞ்சகாலம் ஒன்றாக திரிந்தார்கள். ஆனால் அவரவர் குடும்பத்தில்தான் இருந்தனர். ஆண்கள் அனைவரையும் மச்சான் என்று விளிப்பார்கள். இளைஞர்கள் அவர்களிடம் வம்பளந்தால், நடுவீதியில் அவர்களது குறிகளைப் பிடிக்க முயல்வார்கள். வெட்கம் கெட்டவர்கள் என்று மற்றவர்கள் அவர்களை வசைபாடுவார்கள். அவர்களுக்கு பிற ஆண்கள் மீது ஈர்ப்பு இருந்ததே காரணம். பெண்களுடன் அதிகம் புழங்கமாட்டார்கள். ஆனால் உடைகள் மற்றவை எல்லாம் ஆண்களுக்கானவைதான். மாற்றுப்பால் உணர்வை உள்ளுக்குள் கொண்ட வெளித்தோற்றத்தில் ஆண்பாலாக உள்ளவர்கள். இவர்களது பிரச்சனை உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா? என்பது புரியாத புதிர். இன்றுவரை அது புரியாத புதிராகவே வைக்கப்பட்டுள்ளது.

இப்புதிரை மருத்துவத்துறைச் சொல்லாடல்கள்தான் உருவாக்கின. அதற்கு கீழ்கண்டவாறு விதிமுறைகளையும் வகுத்தன. அதாவது, இருபாலுமைக் கொண்டவர்களை (intersexuality) சரியான மனமும், தவறான/குழப்பமான உடலும் கொண்டவர்களாக கருதி, உடல்ரீதியான பிரச்சனை உரியவர்களாகவும், மாறியப்பாலினத்தை (transsexuality) சேர்ந்தவர்கள், குழப்பமான/தவறான மனமும், சரியான உடலும் கொண்டவர்களாக கருதி மனம்ரீதியான பிரச்சனைக்கு உரியவர்களாகவும்  கருதப்பட வேண்டும் என்பதே. அதாவது, நவீன மருத்துவத்துறை, இவர்களது உடல்களை மாற்றுப்பாலின அறுவைச் சிகிச்சைகள் மூலம் இரு-பாலின உடலமைப்பிற்குள் ஒழுங்கமைக்க முயல்கிறது. 

இவ்வாறு, இன்றைய பாலின உடல்கள் மருத்துவ-உடல்களாக (medicalized body) கட்டப்பட்டது. அதாவது உடல்பற்றிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட உயிர்மருத்துவம் உருவாக்கிய உடல்[4]. இது நமது மூதாதைகளிடம் இருந்த, அல்லது அவர்களது உடலாக இருந்த, உடலல்ல. நவீனத்துவம் உருவாக்கிய மருத்துவ உடல். உலகின் மருந்து நிறுவனங்களிற்கான நுகர்வு உடல்.  மாற்றுப்பாலுணர்வு கொண்டவர்களை நோயாளிகளாக, மருத்துவத்தால் குணப்படுத்த வேண்டியவர்களாக கருதப்படுவது இதனால்தான். இது மேற்கத்தியப் பண்பாடு உருவாக்கிய உடல்-மருத்துவ-விதியாகும். உடல் ஒரு பாலுமையாக, பாலினமாக கட்டப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து விலகியவர்களை நோயாளிகளாக காணும் போக்கு உருவாகுகிறது. பாலியல் சிறுபான்மையாக உள்ள இத்தகையவர்களை பெரும்பான்மைப் பாலியலுக்குள் கட்டுப்படுத்தும் போக்கும் சரிசெய்யும் போக்கும் நிலவுகிறது. இவர்களைக் கோணல்கள் (queer) என்றும், எதிர்பாலின-வேட்கை கொண்டவர்களை நேராளர் (straight) என்றும் வகைப்படுத்தும் போக்கு உருவாகுகிறது. இந்த வகைப்பாட்டிற்குள், லெஸ்பியன், கே எனப்படும் தன்பால் விரும்பிகள், டிரான்ஸ்செக்ஸவல் எனப்படும் மாற்றப்பாலுணர்வாளர்கள், டிரான்ஸ்ஜென்டர் எனப்படும் மாறியபாலினத்தார், எல்லோரையும் அடக்குகிறார்கள். மாறியப்பாலினத்தார்[5] பற்றிய இந்த உரையாடலில் இந்தப் புதிரின் அரசியலை விளங்கிக்கொள்ள முயலலாம். அதற்கு முன்பாக நான் பார்த்த மற்றொரு நிகழ்வையும் விவரித்துவிடலாம்.

ஒருமுறை சென்னையில் ஒரு பஸ்ஸில் பிரயாணித்துக் கொண்டிருந்தபோது, கடைசி சீட்டிற்கு முன்பு உள்ள பெண்கள் இருக்கையில் நானும் மற்றொருவரும் அமர்ந்திருந்தோம். அப்பொழுது இரண்டு திருநங்கைகள் ஏறினார்கள். அவர்கள் எனது சீட்டு அருகில் வந்தவுடன், பெண்கள் இருக்கை என்பதால் நான் எழுந்துவிட்டேன். என் அருகில் அமர்ந்தவர் எழவில்லை. அவர்கள் இது பெண்கள் சீட்டு எழுந்து இடம்விடும்படி கூறினார்கள். அவர் எடக்காக அது பெண்களுக்குத்தான் உங்களுக்கில்லை என்றார். அவர்கள் நடத்துனரிடம் சொன்னார்கள். நடத்துனர் அதை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் விடுவதாக இல்லை. அத்தனைபேர் மத்தியிலும், அந்த சீட்டை பெறுவது தங்கள் உரிமை என்பதாக அவர்கள் அவருடன் சண்டையிட்டார்கள். அவன் நீங்கள் பெண்கள் இல்லை என்பதாக வாதாடிக்கொண்டிருந்தான். அங்க உள்ளவர்கள் யாரும் இவர்களுக்கு ஆதரவு தரவில்லை. நான் உட்பட. சென்னை இன்றுவரை கிராமங்களைச் சேர்ந்த எனக்கு ஒரு பேரச்சம் தரும் நகரம் மற்றும் என்னைப் போன்றவர்களின் நாகரீக நடுத்தரவர்க்க மொன்னைத்தனம் என்பதும் காரணம். பேச்சு முற்றியதுடன் தாங்கமுடியாத கோபம் வந்த அவர்களில் ஒருவர் நாங்கள் பெண்கள் இல்லாமல் யார்? பார்த்துக்கோ எங்களிடம் என்ன இருக்கிறது என்று தங்கள் பாவாடையை தூக்கி தங்கள் குறி உள்ள இடத்தை அத்துனை கூட்டத்தின் மத்தியில் காட்டி நல்லா பார்ரா நான் ஆம்பளயா என்றார்கள்.

கூட்டம் உறைந்துபோக, அவமானமாகக் கருதிய அவன் அனைத்து சென்னை வசவுகளிலும் அவர்களை திட்டிக்கொண்டே எழுந்து, அடுத்து வந்த நிறுத்தத்தில் இறங்கியவன் வண்டி புறப்படும் தருணத்தில் சன்னல் வழியாக அவர்களில் ஒருவர் முகத்தில் ஓங்கி ஒரு குத்து குத்தி தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டான். அவர் வலி பொறுக்காமல் அவனை திட்டிக்கொண்டே வந்தார். இதை யாரும் ஒரு ஆணிடமோ, பெண்ணிடமோ பொது இடத்தில் செய்யமுடியாது. அங்கு உள்ளவர்கள் அதற்காக எதாவது செய்வார்கள். இவர்கள் அடிவாங்கியும் யாரும் கண்டுகொள்வதாக இல்லை. அந்த வன்முறை எனக்கு நீண்டநாட்கள் மனதில் உறைந்துபோய் இருந்தது. அது ஒரு அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆணாக அந்த நிர்வாணத்தை நான் பார்த்த்தும், ஆணாக மற்றொருவன் அதை வன்முறையாக எதிர்கொண்ட விதமும். அவர்களது நிர்வாணம் ஒரு ஆணை அம்மணமாக்கிவிட்டதை பொறுக்காத தன்முனைப்பு, இயலாமை, ஆண் என்கிற அகங்காரம், எல்லாம் அவனது அந்த ஒரு குத்தின் வன்முறையில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது.

ஆணிய லிங்க அதிகாரம் தனது வன்முறையை பிற உடல் மீது செலுத்துவதற்கான அனைத்து உரிமைகளையும் பெற்றதாக உள்ளது. பொது வெளிகளை தனக்கு உரியதாக அது அதிகாரம் செய்கிறது. தனிவெளிகளை பெண்களின் இருப்பியல் புலமாக ஆக்கி உள்ளது. இந்த பொது/தனி வெளி பிரிவினை நவீன சமூக உருவாக்கத்தில் கட்டமைக்கப்பட்ட ஆண்-பெண் எதிர்பாலின விதியமைப்பின் விளைவாக உருவானது. ஆணுடல் பொதுவெளியிலும், பெண்ணுடல் தனிவெளியிலும் செயல்படுவதற்கான விதிமுறைகளை வகுத்து வைத்து உள்ளது. இந்த இரண்டு வெளிகளும் மறுக்கப்பட்டவர்களான மாறியப்பாலினத்தினர், தங்களுக்கென்று தனிப்பட்ட வெளிகள் அற்றவர்களாக உள்ளனர். அல்லது புதிதான வெளிகளை உருவாக்கிக்கொண்டு உள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட இருபாலியலுக்கு அப்பால் உள்ளதை, இருபாலியலில்கூட மற்றொரு பாலினமான பெண்களை தனது அதிகார எல்லைக்குள் வைத்துக்கொள்வதன்மூலம், ஆணுடல் தன்னை அடையாளப்படுத்தி இன்புற்றுக்கொள்கிறது.  ஆண் தன் உடலை மையமாக வைத்துக்கொள்வதற்காக பெண் மற்றும் இருபால் (பை-செக்ஸ்வல்ஷ) உடல்களை விளிம்பில் வைக்கிறது. ஆணுடலை உருவமைக்க இந்தவகை உடல்கள் பற்றிய கதையாடல்கள பல்கிப் பெருக்கி, சமூகத்தில் புறக்கணிப்பின் விளிம்பில் வைக்கப்படுகின்றன. இவற்றினை ஒரு திட்டமிட்ட ஆணிய சதியாக கருதிக்கொள்ள வேண்டியதில்லை. இருபாலின-எதிர்வை அடிப்படையாகக் கொண்ட சமூகம் கட்டப்பட்டு அதன் இயக்கத்தின் போக்கில் ஏற்பட்ட அதிகாரச் செறிவிற்கான நுட்பமாக உருவானவையே இவை. இரண்டு பாலினங்களே இயற்கையானது மற்றது இயல்பற்றது, குறைபாடுடையது என்ற அதிகாரம் உருவாக இந்த சமூக செயலியக்கம் நிகழ்கிறது. மற்றொருவகையில் இந்த மற்ற பாலினங்களின் இருப்பில்தான், தனது இருப்பு உள்ளது என்பதால், அந்த இருப்புக்களை ஒவ்வொரு கணத்திலும், நிகழ்விலும் அதற்கான அடையாளச் செயல்களை வெளிப்படுத்தியப்படி உள்ளது ஆண் என்ற பெரிருப்பு.

இவ்வாறான, ஆணியம் என்கிற லிங்கத்தின் அதிகாரம் பரவிய ஒரு சமூகவெளியில்தான் மூன்றாம் பாலாக அறியப்படும் இவர்கள் தங்கள் வாழ்தலை நிகழ்த்த வேண்டி உள்ளது. உடை தோலாக மாறிவிட்ட ஒரு சமூகத்தில், தோலையே உடலாக கொண்டவர்கள்தான் இத்தகையவர்கள். ஒருவகையில் சமூகத்தின் மையஅச்சாக உள்ள கிரேட்-பேலஸ் எனப்படும் மஹா-லிங்கத்தை பகடி செய்து அதை வெட்டி எறிந்துவிட்டு, தனது நிர்வாணத்தின் மூலம் சமூகத்தின் அம்மணத்தை அம்பலப்படுத்துபவர்கள். குறிகளால் இணைக்கபட்ட பாலின-சமூகத்தில், குறிகளை வெட்டி எறிவதன்மூலம், சமூகத்தில் தங்களது இணைப்புச் சங்கிலியை அறுத்துவிடுகிறார்கள்.  சமூகத்தின் பாலுமை மற்றும் பாலின பேரெந்திரத்தை பகடி செய்து அதன் இயக்கத்தை முட்டி நிறுத்துபவர்களாக உள்ளனர். இருபாலின இயக்கவிதிகளுக்கு உட்படாத இவ்வுடல்களைக் கண்டு திகப்படையும், பாலின எந்திரம், தான் இயங்க, இத்தகைய உடலிருப்பை புறக்கணித்து ஒதுக்கிவைத்து சமூகத்தின் உடலெந்திரங்களை ஒழுங்கமைத்தபடி உள்ளது.

இந்தியாவில் இவர்கள் ஹிஜ்ரா[6]க்கள் என்கிற அரபு-உருது சொல்லால் அழைக்கப்பட்டாலும், நபும்சகர், அரவாணிகள் என்கிற சமஸ்கிருதப் பெயரைக்கொண்டிருந்தாலும், திருநங்கை-திருநம்பி என்கிற அழகான தமிழ்ச்சொல்லால் அழைக்கப்பட்டாலும், அல்லது அலி என்கிற பழக்கச்சொல்லால் அழைக்கப்பட்டாலும், பேடி, பொட்டை என்கிற வழக்குச்சொல்லால் அழைக்கப்பட்டாலும் இவர்களது தோற்றம் பற்றிய தொன்மங்கள் இன்றைய ஆண்-பெண் என்கிற அங்கீகரிக்கப்பட்ட இருபால்-உடல் என்கிற கட்டமைப்பின் மையமாக உள்ளதை விளக்குவதாக உள்ளது. அதாவது, இருபாலாக இருந்த பூர்வீக உடலிலிருந்தே இன்றைய ஒருபாலாக உள்ள ஆண் பெண் உடல்கள் தோற்றம் கொண்டதாக மேற்கத்திய தத்துவத்தின் ஊற்றுக்கண்ணாக உள்ள கிரேக்க தோற்றவியல் தொன்மம் ஒன்று விவரிக்கிறது.

2. மேலைத்தேய தொன்மக்கதை

கிரேக்க தத்துவஞானியான பிளேட்டோவின் சிம்போஸியத்தில் உரையாடும் அரிஸ்டோபென் காதலின் வரலாற்றை அறியும் முன் உடல்கள் ஆதிகாலத்தில் தோன்றிய வரலாற்றை விவரிக்கிறார். அதில் உடல்கள் இன்றுபோல் ஒன்றாக இல்லை எல்லாம் இரட்டையாக இருந்தது. உடல்கள் உருளைவடிவமாக இரண்டு தலைகள் நான்கு கைகள் நான்கு கால்கள் என இருந்தன. அன்று மூன்று பாலுமை இருந்தது. இரட்டை ஆண்கள், இரட்டை பெண்கள் மற்றும் ஆண்ட்ரோஜைனஸ் எனப்படும் ஆண்-பெண் கலந்த உடல்களாக இருந்தது. ஆண்கள் சூரியனின் சந்ததி, பெண்கள் பூமியின் சந்ததி, மூன்றாம் பாலினர் சந்திரனின் சந்ததியைச் சேர்ந்தவர்கள். எந்த திசையில் வேண்டுமானாலும் நடக்கும் ஆற்றல் பெற்ற இவ்வுடல்கள், கடவுளையே சண்டைக்கு அழைக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்தவையாக இருந்தன. இவ்வுடல்களது பேராற்றலைக்கண்ட கடவுள் இவ்வுடல்களை அழித்துவிடலாம் என தனது தேவதைகள் அடங்கிய குழுவில் தீர்மானிக்கிறார் அப்போது சீயஸ் தேவதை, இவ்வுடல்களை அழிக்காமல் ஆற்றலைக் குறைக்க ஒரு திட்டம் இருப்பதாக கூறுகிறது. அவ்வுடல்களை இரண்டாக பிரித்துவிடலாம் என்கிறது.  அதன்படி, அவர்களை இரண்டாக பிரித்து, அப்போலா தெய்வத்திடம் வெட்டப்பட்ட திறந்த பகுதியை தோளால் மூடி முடிச்சிட சொல்கிறது. அவர்களது தலையை திருப்பி வைத்துவிடும்படி சொல்கிறது. அதாவது அந்த முடிச்சிட்ட பகுதிதான் தொப்புழ் ஆகவும், பின்புறம் இருந்த தலை முன்புறமாக திருப்பவும் படுகிறது. இப்படி செய்வதன் வழியாக திரும்ப அவர்கள் இணையமுடியாத நிலையை சீயஸ் உருவாக்கிவிடுகிறது.

அதாவது ஒரு தோளிற்குள் இருந்த உடல்களை இரண்டாக பிளந்து முடிச்சிட்டு, தலையை திருப்பி வைப்பதன்மூலம், அதன் சம்சீர் குலைந்து இணையமுடியாத நிலை உருவாகிவிடுகிறது. தொடர்ந்து தான் இழந்த பாதியோடு இணைய மறுபாதியை தேடி அலைகிறது. ஒரு உடல் இறந்தவுடன் மற்றொரு உடலை தேடி ஒட்டிக்கொள்வது நடக்கிறது. இந்நிலையில் அவர்கள்மீது பரிவுகொண்ட சீயஸ், அவர்கள்து பழைய உடலில் முன்புறமும், புதிய உடலில் பின்புறமும் உள்ள ஆண், பெண் குறிகளை முன்புறம் மாற்றி திருப்பிவிடுகிறது. அதன் பின் அவ்வுடல்கள் ஆண் பெண் என்கிற எதிர்பாலினத்துடன் இணைவது நடக்கிறது. ஆணிலிருந்து பிரிந்த ஆண்உடல், ஆண்உடலான தனது பாதியை தேடுவதால் அது ஹோமோசெக்ஸ் எனப்படும் ஆண்-தன்பால் விருப்புடையதாகவும், பெண் உடலிலிருந்து பிரிந்த பெண் உடல், தனது பாதியாக பெண் உடலை தேடுவதால் லெஸ்பியன் என்கிற பெண்-தன்பால் விருப்புடையதாகவும், ஆண்டிஜைனஸ் என்கிற ஆண்-பெண் இருபாலின உடல்களில் இருந்து பிரிந்த உடல்கள் ஆண்-பெண் உடலை தேடும் ஹெட்ரோசெக்ஸ்வல் எனப்படும் எதிர்ப்பால்-புணர்ச்சியில் விருப்புடையதாகவும் உருவானது. உடல் மீதான காதல் உருவான கிரேக்கத் தொன்மைக்கதை இதுதான். இறுதியாக இக்கதையை சொல்லிய அரிஸ்டோபென் ஒரு எச்சரிக்கையை விடுகிறார். கடவுளை புறக்கணிப்பவர்கள் இப்படி கடவுளால் பிரிக்கப்பட்டு தண்டனைக்கு ஆளாவார்கள் என்று.

இத்தொன்மத்தை வாசித்தால், இதில் இன்றைய பாலியலில் உள்ள மூன்று முக்கிய பாலியல் நடவடிக்கையும், ஒரு உடல் மற்றொரு உடலைத் தேடுவது தனது மூலாதார உடலை தேடுவதே என்கிற இயல்புணர்ச்சியின் வடிவமைப்பு பற்றிய தொன்மத்தை அடையலாம். இதில் நாம் கவனம் கொள்ள வெண்டியது என்னவென்றால், இன்றைய ஆண்-பெண் எதிர்ப்பால் வேட்கை (ஹெட்ரோசெக்சுவல்) உள்ள இயல்பானவர்களாக சமூகம் அறுதியிட்டு உள்ள உடல்கள், ஆதியில் கலப்புப் பாலினமாக அதாவது இருபால் உறுப்புகளைக்கொண்ட இரட்டை உடல்களாக கதையாடப்பட்டு உள்ளது என்பதே. மூன்றாம் பால் என்பது தொன்மரீதியாக உடல்களின் உற்பத்தியான பாலற்றதாக இருந்து உள்ளது. இன்றைய உலகெங்கிலும் பாலியலாக அங்கீகரிக்கப்ட்ட எதிர்பாலியல் மோகம் என்பது இருபாலியல் உடல்களிலிருந்தே உருவாகி வந்துள்ளது என்பதே இத்தொன்மத்தின் அடிப்படை. இந்த அடிப்படைக்குள், பாலினம் என்பதற்கான கட்டுமானக்கதையாடல் உள்ளதை அறியலாம். அதாவது பாலினம் என்பதற்கான தோற்ற மூலமான ஒரு வரலாற்றை கட்டுகிறது.  பாலினம் என்பது இயல்பானது என்பதாக அது கடவுளின் தோற்றத்தில் உருவானது என்பதும், உடலின் தோற்றத்தில் தங்கி உள்ளது என்பதாகவும் சொல்கிறது. பாலினம் என்பது ஒரு கலாச்சார கட்டமானம் என்பதை மறைக்க, அது மூலமுதலானது, வரலாறு கொண்டது, ஒரு உடலின் பிறப்போடு உருவானது என்பதாக விளக்க முனைகிறது. அல்லது பாலுமை வேறுபாட்டை பாலினமாக்கிய தொன்மக்கதையாடல் எனலாம்.

3. கீழைத்தேய தொன்மக்கதை

பிராஜபதி என்பது பாலற்ற ஒன்றாகவும் அதிலிருந்து ஆண், பெண் உடல்கள் பிரிந்தன என்பதும் இந்திய வேதமதத்தின் தொன்மங்களில் ஒன்றாகும். இது கிரேக்க ஆண்ட்ரோஜைன் தொன்மத்தை ஒத்த ஒன்று.  அதேபோல் இருபாலின உடலைக்கொண்ட கிரேக்க ஹெர்மோபுரோடைட் என்கிற தொன்மத்திற்கு இணையான ஒரு தொன்மமாக அர்த்தநாரீஸ்வரத் தொன்மத்தை கூறலாம். படைப்புக்கடவுளான பிரம்மன் தொடர்ந்து கடவுள் மற்றும் ஆண்களை படைக்க, அவர்களால் மறுஉற்பத்தி செய்யமுடியவில்லை. பிரம்மன் பெண்கடவுள் தன்மையை பிரிக்கும்படி சிவனிடம் வேண்ட, சிவன் பிரம்மனின் முன்பு பெண்ணியத்தன்மையை வெளிப்படுத்துகிறார். அதிலிருந்து பிரம்மன் பெண்ணிய ஆற்றலைப்பெற்று மனித உடலை உற்பத்தி செய்கிறார் ஆண், பெண் என. அதன்பின் ஆண், பெண் உடல்கள் பிற உடல்களை உற்பத்தி செய்யத் துவங்குகின்றன. சிவனிற்குள் உள்ள இந்த பெண்மைய ஆற்றலே, அர்த்தநாரீஸ்வரத்தின்[7] அடிப்படை ஆகும்.

இப்புராணக்கதையாடலில், ஆண் பெண் என்கிற இரண்டு பாலுமைகளும், சிவன் என்ற ஒற்றை உடலுக்குள்தான் உள்ளன என்பதும், உற்பத்தியின் பொருட்டு இரண்டு பாலுமையாக வடிவமைவதையும் சொல்கிறது. இதில் ஆண்மை என்பதும் பெண்மை என்பதும் பாலினம் சார்ந்தவை. இவை தனித்த உடலாக மாறும்போது ஆண், பெண் என்கிற பாலுமைகாளக மாறுகின்றன. அதாவது பாலுமையே பாலினத்தால் கட்டப்படுவதாக, பாலினமாதல் விதிக்கு எதிரானதாக இப்புராணக்கதையாடல் உள்ளது.  பாலுமையால் பாலினம் குறிக்கப்படுவதில்லை, பாலினத்தால்தான் பாலுமை குறிப்பிடப்படுகிறது என்பதே. ஆதிகாலங்களில் பாலினத்தை உருவாக்க அல்லது பாலுமையை புரிந்துகொள்ள இத்தகைய தொன்மங்கள் கட்டப்பட்டுள்ளன. இத்தொன்மங்கள் வழிதான் பாலினம் என்பது உடலின் ஆண்-பெண் குறிசார்ந்த பாலுமையுடன் இணைத்து அடையாளப்படுத்தப்பட்டது. ஒன்றின் தோற்ற வரலாற்றை கதையாடுவதன்மூலம், அது இயற்கையானதாக, இயல்பானதாக சாராம்சப்படுத்தப்படுகிறது. இச்சாராம்சங்கள், தன்னிலையாக்கத்தின் வழியாக அடையாளமாகிவிடுகிறது. இந்த அடையாளங்கள் சமூகத்தின் அங்கமாக உடல்களை மாற்றிவிடுகிறது. இவ்வாறாக நிலையான அடையாளங்கள் வழியாக உடல் சமூகவயப்படுத்தப்படுகிறது. சமூகத்தின் மிகப்பெரும் அச்சுறத்தல் உடல்கள் அடையாளமற்று இருப்பதே. காரணம் அடையாளமற்ற உடல் சமூகத்தின் அங்கமற்ற உடல்களாக உள்ளது. அது சமூக அங்கத்தை குலைப்பதற்கான அச்சத்தை கதிர் வீச்சைப்போல பரப்பியப்படி உள்ளது.

உலகின் புராணங்கள் மற்றும் கடவுள் பற்றிய பல தொன்மங்களில் திருநங்கைகள் பற்றிய கதையாடல்கள் உள்ளன. அக்கதையாடல்கள் திருநங்கைகளை சமூகவயப்படுத்தும் நோக்கினையே கொண்டிருக்கிறது. அவர்களைப் பாலினமாகவோ அல்லது அவர்களது பாலற்ற தன்மையினால் உருவாகும், சமூக ஒழுங்கின்மைக்கு அஞ்சி, அவர்களை சமூக அமைப்பிற்குள் இருத்தும் நோக்கையே கொண்டிருக்கின்றன. திருநங்கைகளுக்கு இருபாலின-அடையாளத்தில் ஒன்றை வழங்குவதன்மூலம் அவர்களை சமூகவயப்படுத்துவதே அத்தொன்மங்களின் நோக்கமாக உள்ளது.

சான்றாக, பகுச்சரமாதா கதையில் குஜராத்தில் இருந்த சரன் இனத்தை சேர்ந்த பகுச்சரா என்பவளும் அவளது தங்கையும் ஒருநாள் தேரில் செல்லும்போது, பாப்பியா என்பவனால் தாக்கப்படுகிறார்கள். எதிரிகள் தாக்கும்போது அவர்களை எதிர்த்து வெல்லமுடியாத நிலையில், சகோதரிகள் இருவரும் தங்கள் இன வழக்கப்படி தங்களை அழித்துக்கொள்ளும் முகமாக தங்களது முலைகளை அறுத்துக் கொள்கிறார்கள்.  இப்படி முலை அறுப்பதன் வழியாக தெய்வநிலையை அடைகிறார்கள் கண்ணகிப்போல. முலைஅறுத்தல் என்பது பெண்மையால்கட்டப்பட்ட பாலின அடையாளத்தை துறந்து வெளியேறுதலே. இப்படி வெளியேறுபவர்கள் தெய்வமாக்கப்பட்டு சமூகத்தின் கருத்தியல் அங்கமாக ஆக்கப்படுகிறார்கள். பாப்பியா ஆண்மையற்றவனாக சபிக்கப்படுகிறான். பகுச்சரமாதாவை பெண் உடையிலும், பெண்ணாக செயல்பட்டும் வழிபட்டால் சாபம் நீக்கப்படுவான் என்பதால் அவன் தன்னை ஒரு திருநங்கையாக மாற்றிக்கொண்டு வழிபடுகிறான். அதனால் திருநங்கைகள், தங்களது மாதாவாக பகுச்சரமாதாவை இன்றும் வழிபடுகிறார்கள். இதனால் அவர்களது சாபம் நீக்கப்படும்.

அதாவது திருநங்கையாகப் பிறத்தல் சபிக்கப்பட்டது என்பதையும், அது ஒரு குற்றத்தின் விளைவு என்பதையும் இத்தொன்மக் கதையாடல் சமூகத்திற்குச் சொல்கிறது. இதில் பெண் என்பதால் ஒரு உடல் மீது பாலியல் வன்முறை செய்பவன் அந்தப் பெண்ணாக மாறி அதன் வலியை உணர்வதற்கான நாடகமும் உள்ளது. திருநங்கையாதல் என்பது ஒரு பாலினத்தேர்வு அதை சாபமாக மாற்றுகிறது இக்கதையாடல். பகுச்சரமாதா பற்றிய பல தொன்மங்கள் உள்ளது. எல்லா தொன்மங்களிலும், ஆண்மையற்றவன், ஆண்மை பெறுதல் என்கிற ஒரு முடிவே எட்டப்படுகிறது. ஆண்மையை அளிக்கும் தாயாக இருக்கிறது இக்கடவுள். திருநங்கைகளை ஆண்மை இழந்தவர்கள் என்பதாக பாலினமாதலின் அரசியலுக்குள் வைப்பதே இத்தொன்மங்களின் நோக்கமாக உள்ளது. அதாவது ஆண்-பெண் பாலின-இருமை எதிர்வாக கட்டப்பட்ட சமூக அமைப்பில், சமூகவயமாக வேண்டுமானால் எதாவது ஒரு பாலினத்திற்குள் அடக்கப்பட வேண்டும், அப்படி அடங்காதவர்கள் சபிக்கப்பட்டவர்களாக, பாவப்பட்டவர்களாக. குறையுடையவர்களாக மாற்றப்படுகிறார்கள். இப்படி அவர்களை வகைப்படுத்துவதன் மூலம், அல்லது அடையாளப்படுத்துவதன் மூலம், பாலின-இருமை-எதிர்வு சமூகத்திற்குள் ஒரு பாலின தேர்விற்குள் அடக்கப்படுகிறார்கள். அதற்குக் கடவுள்கள் வழியாக தெய்வீகமாக்கப்படுதலும், புனிதப்படுத்தலும் சடங்காதலும் நிகழ்த்தப்படுகிறது.   

ராமாயணத்தில் ராமன் காட்டிற்குப் போகும் முன் அயோத்தியின் எல்லையில் தன்னை வழி அனுப்ப வந்தவர்களிடம் ஆண்களும், பெண்களும் இல்லத்திற்கு திரும்பும்படி அறிவிக்கிறான். 14 ஆண்டுகள் வனவாசம் கழிந்து நாடு திரும்பும்போது, அந்த எல்லையில் ஒரு திருநங்கை நிற்கிறார். ராமன் ஆண், பெண் என்று சொன்னதால், தான் ஆணுமல்ல, பெண்ணுமல்ல என்பதால் ராமனின் வாக்குபடி வீடு திரும்பமுடியாமல் நின்றுவிடுகிறார். அவரது அந்த உணர்வை மதித்து ராமன் அவரை ரட்சித்ததால், திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சடங்குகளில் அவர்களிடம் ஆசி பெறுவது புனிதமாக கருதப்படுகிறது. மஹாராஷ்டிராவில் இன்றும் இப்பழக்கம் உள்ளது[8]. இதிலும், பாலின குழப்பம் என்பது ராமனின் வாக்கை கையாள்வதில் உள்ள குழப்பத்தை சுட்டுகிறது. இதில் உள்ள மற்றொரு உட்பொருள் சட்டம், வாக்கு, மொழி எல்லாம் பாலினத்தன்மை கொண்டது என்பதுதான். அது ஆண்-பெண் இருமை எதிர்வு பாலின ஒழுங்குசார் தன்மைக் கொண்டது என்பதால், அதற்குள் திருநங்கைகள் என்கிற பாலின மற்றவர்கள் அடங்கமாட்டார்கள் என்பதுதான். அவரைப் புனிதப்படுத்தி சமூகவயத்திற்குள் அடக்கவேண்டியதேவை உள்ளதையே இப்புராணக்கதையாடல் விளக்குகிறது.

மகாபாரத அரவான் கதைப்படி, பாண்டவர்கள் வெற்றியடைய, காளியின் சக்தியைப்பெறவேண்டி அரவானை பலியிடுகிறார்கள். அரவான் இறக்குமுன் திருமணம் செய்ய ஆசைகொள்கிறான், அதன்படி நாளை இறக்கப்போகும் அவனை பெண்கள் திருமணம் செய்ய தயாரற்ற நிலையில், கிருஷ்ணன் மோகினியாக மாறி அரவானைத் திருமணம் செய்துகொள்கிறார்.  மோகினி என்பது மோகத்தை வெளிப்படுத்தும், ஒரு பெண் யட்சி. இக்கதையின்படி, திருநங்கைகள் மோகினியாக, கிருஷ்ணனின் ஒரு மாற்று வடிவமாக, அவதாரமாக உள்ளவர்கள் என்பதால் கடவுளின் மறுவடிவமாக மாற்றப்படுவதும், ஆண் பெண்ணாக மாறி திருமணம் செய்வதால், இந்தத் திருநங்கைகள் சமூக நிறுவனமான குடும்பம் என்கிற அமைப்பின் திருமண பந்தத்திற்குள்ளும் வைக்கப்படுகிறார்கள். இதன்மூலம் தன்உடல்மீது செலுத்தப்பட்ட சமூகவலியை தெய்வீக இதமாக ஆக்கிக்கொள்கிறார்கள். ஆண் பெண்ணாக மாறி ஆணைப்புணர்தல் என்பது ஐயப்பன் பற்றிய கதையாடலிலும் உள்ளது. இவற்றில் திருநங்கைகளின் பாலற்ற தன்மை அல்லது பாலின அமைப்பிற்குள் தங்களை இறுத்திக்கொள்ளாத தன்மை, சமூகமீறலாக மாறிவிடாமல் சமூக அமைப்பிற்குள் இருத்தப்படுகிறது. அதாவது பாலற்ற உடல்களின்மீது பாலின சமூகவிதிகள் எழுதப்படுகிறது. இத்தகைய புராணங்கள் உலகின் எல்லா இனங்களின் தொன்மங்களிலும் வெவ்வேறு வடிவில் உள்ளன. இது குறித்து விரிவாக மாறியப்பாலினங்கள் பற்றி தொகுக்கப்பட்ட களைக்களஞ்சியங்களில் வாசித்தறியலாம்.

4. பாலின நிகழ்தல்

பாலினமாதலின் அரசியலில் அல்லது இருபாலின உடல் உருவாக்கத்தில் திருநங்கைகளின் உடல் என்பது ஒரு முரணாக இருபாலின உடல் உருவாக்கத்தை கவிழ்த்துவிடக்கூடியதாக இருப்பதால், அதனைப் பல தொன்மங்கள், புராணங்கள், கதையாடல்கள் வழியாக புனிதமாக, சடங்காக, பாவமாக, நோயாக, குறையாக, தண்டனையாக, சாபமாக பல வடிவங்களில் சமூகத்தின் உடலியல் தளங்களில் எழுதி வைத்து உள்ளன. பாலற்றதான உடல்களின் மீது ஆணையும் பெண்ணையும் எழுத, ஆணும் பெண்ணுமற்றதான இந்த உடலை விலக்கி வைக்கவேண்டிய தேவையும், அதே நேரத்தில் இவற்றின் இருப்பைக் கண்டு அஞ்சி அதனை ஒழுங்கமைத்து தனது கண்காணிப்பில் வைக்க வேண்டிய தேவையும் அதிகாரத்திற்கு அவசியப்படுகிறது.    

ஆண், பெண் என்கிற பாலுமையில் ஆண்மை, பெண்மை என்கிற பண்பாட்டுக் கருத்தாக்கம் கட்டமைக்கப்பட்டால் அது பாலினமாகக் கருதப்படுகிறது. பாலுமை என்பதை பிறப்புறுப்புகள் அடிப்படையில் தீர்மானிப்பதாக உள்ளது. தொடைகளுக்கிடையில் என்ன உள்ளது? என்பது பாலுமையை தீர்மானிப்பதாகவும், நடை, உடை, பாவனைகளில் என்ன உள்ளது என்பது பாலினத்தை தீர்மானிப்பதாகவும் கருதப்படுகிறது. 2000 த்திற்கு ஒருவர் என்கிற வீத்த்திலும், உலகில் வருடத்திற்கு  65,000 பேர் மாற்றுப்பாலினமாக பிறக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம். பிறப்பின் அடிப்படையில் மாற்றுப்பாலினத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக பிறக்கின்றனர். இத்தகையவர்களை ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்க வேண்டிய ஒரு அழுத்தநிலைக்கு ஆளாக்குகிறது சமூகம்.

பாலுமை(sex) மற்றும் பாலினம்(gender) என்கிற சொற்கள் ஒரு குழுப்பமான நிலையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தோற்றம் பற்றிய மூன்றுவிதமான கருத்தாக்கங்கள் நிலவுகிறது.

  1. பாலுமை, பாலினம் இரண்டும் உடலின் பிறப்பில் உள்ளது என்ற கருத்து. இது சாராம்சவாதிகளின் கருத்து. ஒரு உடல் பிறக்கும்போதே பாலுமையுடன் பிறக்கிறது. ஆண் பெண் வேறுபாடு சாராம்சமானது அடிப்படையானது என்பது இதன் அரசியல். பாலின அடையாளங்கள் இயல்பானது, இயற்கையானது என்பது. நவீன சமூகத்தின் முதலாளித்துவ அரசியல்.
  2. பாலுமை பிறப்பிலேயே ஒரு உடலில் உள்ளது. பாலினம் மட்டும் பண்பாட்டுக் கட்டுமானம் என்ற கருத்து. இது சிமோன்-தி-போவாவின் “பெண் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறாள்”  துவங்கிய பெண்ணியலாளர்களின் அரசியல். பெண் என்பது ஒரு கலாச்சாரக்கட்டுமானமாக தந்தைவழி சமூக நோக்கில் கட்டமைக்கப்பட்டது என்பது. ஆண் பெண் பாலின அடையாளங்கள் கட்டமைக்கப்பட்டதுதான், ஆனால், பெண் என்கிற அடையாளம் அதில் மறுக்கப்பட்டு உள்ளது. அதனை கட்டமைப்பதற்கான போராட்டங்களை முன்னெடுப்பது. நவீனத்துவத்தின் பெண்ணிய அரசியல்.
  3. இரண்டுமே கட்டுமானம்தான், ஒரு உடலில் பாலுமை என்பதும் இல்லை பாலினம் என்பதும் இல்லை இரண்டுமே ஒரு உடலின் உருவாக்க போக்கில் அதன் நிகழ்வுகளைக்கொண்டு கட்டமைக்கப்படுவதே என்கிற கருத்து. இது பிரஞ்சு சிந்தனையாளர் பூஃக்கோ துவங்கி ஜீதித் பட்லர் மற்றும் தெல்யுஸ்-கத்தாரி போன்ற சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் இந்தப் பாலினமாதல் அரசியலை அடையாள அரசியலுக்கு எதிராக விரிவுபடுத்தி மாறியப்பாலினத்தினர் பற்றிய “குயிர் தியரி“ எனப்படும் ”கோணல்கள் கோட்பாடு” (தமிழில் குயிர் என்பதை எப்படி சொல்வது என்பது சிக்கலாக உள்ளதால் கோணல்கள் என்கிற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது.) வரை விரிவுப்படுத்தியுள்ளனர்.  நவீனத்தை மறுத்த அதற்கு பிந்தைய அரசியல்.

யுத-கிறித்துவ-இஸ்லாமிய மூலக்கதைகளில் உள்ள ஆதாம்-ஏவால் என்கிற தொன்ம அடிப்படையில், ஆண் பெண் என்கிற இருபாலின ஒழுங்கமைப்பாக இன்றைய உலகலாவிய சமூகம் கட்டப்படுகிறது. அதாவது இருமை எதிர்வாக இது கட்டப்பட்டு உள்ளது. இது ஒருவகையான மத விதிமுறைகளின் ஆழ்தள கட்டமைப்பு. உலகின் அனைத்து உடல்களையும் இந்த இரு பாலினத்திற்குள் அடக்க முனைவதால், இந்த எதிர்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பே வரலாற்றுரீதியானது, அங்கீகரிக்கப்பட்டது, இயல்பானது, இயற்கையானது என்ற நிலை உருவாகியுள்ளது. பண்டைய காலங்களில் தன்பால்-புணர்ச்சியாளர்கள் ஒரு பாலினவகையாக அல்லது தனிப்பாலுமையாக இருந்தனர். அவர்களை இன்றைய எதிர்பால்-வேட்கை கொண்ட ஆண்-பெண்-இருமை-எதிர்வு-சமூக அமைப்பிற்குள் ஆணாகவும், பெண்ணாகவும் வகைப்படுத்தி, தன்பால்-வேட்கையை குற்றமாக மாற்றியது நவீன சமூகம். மாற்றுப்பாலியளார்களையும், தனியானதொரு பாலுமை கொண்டவர்களாக இல்லாமல், இருமை-பாலினத்திற்குள் அடக்கவே முனைகிறது.

17-ஆம் நூற்றாண்டிற்கு பிறகான கிறத்துவ-விக்டோரியன் அறமதிப்பீடுகள் வழியாக, பாலியல் சொல்லாடல்கள் கட்டப்படுவதையும், பாலியல் ஒழுங்கமைக்கப்படுவதையும் விவரிக்கிறார் பூக்கோ தனது பாலியல் வரலாறு என்கிற நூலில். 200 ஆண்டுகளுக்கு முன்பாக ”கே” எனப்படும் தன்பால் விருப்புடையோர்கள் என்கிற வகைத்திணையே இல்லை, இரண்டு ஆண்களுக்கு இடையிலான பாலுணர்வை ”சோடமி” என்ற சொல்லால்தான் குறித்தனர். அதன்பின் மருத்துவம் மற்றும் உளவியல் சொல்லாடல்கள் வழியாக கட்டப்பட்டதே ”ஹோமோசெக்சுவாலிட்டி” எனப்படும் தன்பால் விருப்பம்  என்ற சொல். பிறகு அது சிறிது சிறிதாக குற்ற உணர்வாக கட்டமைக்கப்பட்டு, எதிர்பாலின வேட்கை மட்டுமே இயல்பானதாக வடிவமைக்கபட்டது என்கிறார் பூக்கோ.

மாற்றுப்பாலுணர்வாளர்கள் இந்த இரு-பாலின-அமைப்பிற்குள் விடுதலை வேண்டுபவர்களாகவும், மாறியப்பாலினத்தினர் இந்த இரு-பாலின-அமைப்பிலிருந்து விடுதலை வேண்டுபவர்களாகவும் உள்ளனர். உடல்கள் பாலுமை கொண்டவையாக மாற பாலினமாக்கல் என்பது அவசியப்படுகிறது. பாலின அரசியலை ஆராய்ந்த ஜீதித் படலர் பாலினம் என்பது சொல்லாடல்களான மொழி, இயக்கம், மொழியற்ற பரிமாற்றம், நடத்தை, நிறுவன அமைப்புகள், வழக்கப்படுத்தப்பட்ட செயல்பாடுகள் போன்றவற்றால் கட்டப்பட்டது என்கிறார். பாலுமை என்பது உடலுக்கு கொடுக்கப்பட்டு அதனால் பாலினம் செயற்கையாக உட்செலுத்தப்பட்டு கட்டப்படுவதல்ல மாறாக பொருளியல் ரீதியாக உடல்கள் ஆளப்படுவதற்கான ஒரு கலாச்சார விதி என்று பட்லர் கருதுகிறார். இதனை அவர் தனது நூல்களில் விரிவாக விளக்கிச் செல்கிறார்.

பாலினம் என்கிற அறிதல் சட்டகத்தின் கட்டமைப்பினால் கண்டடையப்படும்  உடல்சார்ந்த பாலுமையால்தான், பாலியல் சார்ந்த உடல்கள் (sexed bodies) இருப்படைகின்றன. பாலுமையை அறிவதற்கே பாலினம் என்கிற அடிப்படையான அறிதல் தேவைப்படுகிறது. அதாவது ஆண் பெண் என்கிற பாலினம் கட்டமைக்கப்பட்டு, அதை வைத்து பிறக்கும் உடலை ஆண் பெண் என்கிற பாலுமை கொண்ட உடலாக அடையாளப்படுத்தப்படுகிறது. பாலுமைக்கு முன்பாகவே பாலினம் என்பது உருவாகியுள்ளது. பாலுமையை அடையாளப்படுத்துவது பாலினம்தான். அதாவது பாலினம் என்கிற Gender தான் பாலுமை என்கிற Sex ஐ தீர்மாணிக்கிறது. ஒரு குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பதில்லை. பிறந்தபின் பெண்ணாகவும் ஆணாகவும் சமூகத்தால் பாலினமாக்கப்படுகிறது. அதன் வளர்ப்பில் அப்பாலினம் உணர்வுகளாக, உடலாக வடிவமைகிறது. ஆண் பெண் குறிகளான லிங்கமோ, யோனியோ ஆண் பெண்ணை தீர்மானிப்பதில்லை. ஆண் பெண் என்கிற கலாச்சாரக் கட்டமைப்பே குறிகளை தீர்மானிப்பதாக உள்ளது.

கலாச்சார கருவிகளாக மாறிவிட்ட பாலினமாதல் என்பதன் அரசியலே ஆண், பெண் என்கிற இரு-பாலின-சமூகத்தின் அடிப்படையாக உள்ளது. அதனால்தான் இந்த இருபாலினமற்ற அடையாளத்தைக்கொண்ட மாறியப்பாலினத்தினரான திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த சமூகத்தின் தனித்த இருப்பற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களையும் இந்த பாலினமாதல் அரசியலுக்குள் உள்ளடக்கி சமூகவயப்படுத்துவதே நிகழ்கிறது.   

5. பாலின கிளைத்தல்

பாலினமாதல் அரசியல் என்பது அடையாள அரசியலுடன் உறவுடையது. அடையாள அரசியல் என்பது இன்றைய சமூக அமைப்பிற்குள் வாழ்வதற்காக உற்பத்தி செய்யப்பட்ட பல அடையாளங்களுக்குள் உடல்களை வகைப்படுத்துவது. அடையாளம் என்பது தெல்யுஸ்-கத்தாரி கூறுவதைப்போல ஒரு மோலார் நிலை. அதாவது ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒரு உடல் நிலைநிறுத்தப்பட்டு, அதிலிருந்து அது இயங்காமல் அந்த நிலையிலிலேயே தேங்கி செயல்படுவது. பாலுமை மற்றும் பாலினம் என்பது மோலார்நிலை. நிலையான இருப்பை கொண்டவை. எப்போதும் மாறாத, மாற்றங்களை நிறுத்திவிட்ட நிலை. தன்னை மையமானதாக மாற்றிக் கொண்டுவிட்ட நிலை.

மாறாக, ”உருவாகுதல்” எனபது மூலக்கூறு நிலை என்கிறார்கள். இந்நிலை ஒரு பன்மைநிலை, சல்லிவேர்களைப்போல படரும் நிலை (ரைசோமேட்டிக்), படைப்பாக்க நிலை, தேக்கமற்ற நிலை, மையமற்ற நிலை. தன்னிலையாக்கத்திற்கு உட்படாத நிலை. இந்நிலையில் ஒரு உடல் எதுவாகவும் உருவாகும் தன்மை கொண்டதாக இருக்கும். தனது மோலார் அடையாள நிலைக்கு மற்றமையை உட்படுத்தி அதன்மீது அதிகாரம் செலுத்துவமாக இருக்காது.

பாலற்றதாக உள்ள மாறியபாலினத்தினர் ஒரு அடையாள அரசியலுக்குள் சிக்காமல் தங்களை உருவாகுதல் என்கிற நிலையில் வைத்துக்கொள்வதற்கான விடுதலை பெற்ற உடல்களாக உள்ளனர். இவர்கள் சமூகத்தின் அங்கமாக உள்ள மதம், சாதி, பால், பாலினம், நிறம் உள்ளிட்ட எந்த மோலார் அடையாளத்திலும் இல்லாதவர்கள். இவர்கள் எதுவாக வேண்டுமானாலும் உருவாகும் தன்மையில் தங்களை வைத்துக்கொண்ட விடுதலைப்பெற்றவர்களாக உள்ளனர். அதனால்தான் இந்த இரு-பாலின-நிறுவனமாகவிட்ட சமூகம் இவர்களை இல்லாதொழிப்பது, புறக்கணிப்பது அல்லது உள்வாங்கி ஒரு பாலினமாக தனது அடையாள எல்லைக்குள் வைப்பது என்கிற நிலையை எடுக்கிறது.

அதாவது மாற்றுப்பாலினத்தவர்களை கண்டு சமூகம் அச்சம் கொள்ளவோ அல்லது அவர்களை புனிதப்படுத்தவோ காரணம், அவர்கள் சமூகத்தின் அடிப்படை உடலமைப்பு விதியான இரு-பாலின விதியை பகடி செய்து, அதை இல்லாதொழித்துவிடக்கூடிய அபாயம் இருப்பதால்தான். அல்லது இரு-பாலின வேட்கை என்பதில் ஒரு உடைசலை உருவாக்கி பாலின அடையாளத்தை சிதைத்துவிடக்கூடியவர்களாக அவர்களது செயல்கள் இருப்பதால்தான்.


முடிவுரையாக..

 

  1. சமூக பாலினவிதிகளுக்கு எதிரான ஒரு உடல்சார் நாடகத்தை அவர்கள் நிகழ்த்தி சமூகம் எப்படி பாலியலை பாலினம் வழியாக கட்டமைத்தது என்பதை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
  1. உடலிற்குள் உள்ள பாலின்பம் என்பது பிற உடல் வேட்கைதானே ஒழிய அது எதிர்பால் உடல் வேட்கை அல்ல என்பதை வெளிப்படுத்தியப்பபடி உள்ளனர். 
  1. ஆண் பெண் இன்கிற இறுகிய அமைப்பிற்குள்ளான உடல்களை போலச்செய்து அதன் சாராம்சத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறார்கள்.
  1. ஆண்-பெண் என்கிற தெளிவான அடையாளத்தை தெளிவற்றதாக ஆக்கிவிடுகிறார்கள்.

இருபாலின உடல் 1. சமூகவிதி 2. குடும்ப விதி 3 சட்ட விதி என்ற மூன்று விதமான அமைப்பு விதிகளுக்கு உட்பட்டதாக உள்ளது.


  1. சமூகவிதி என்பது ஒரு உடல் ஆண்-பெண் இருமை எதிர்வு பாலினமாக இருத்தல். பைனரி எனப்படும் இருமை எதிர்வு என்பது போர் எந்திரக் கட்டமைப்பிற்கான அடிப்படை சமூகவிதி. இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பு இந்த முரணியக்க விதியை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. எப்போதும் இணக்கமற்ற முரணில் சிக்கியிருப்பது. எதிரெதிரான இரண்டு அடையாளங்களை நிலைநிறத்தி இரண்டிற்குமிடையில் ஒரு பதற்றத்தை வைத்திருப்பது. இந்த முரணிண் அடிப்படையில் இரண்டு சக்திகளை மோதவிடுவது. இவர்கள் இந்த இருபாலின-கட்டமைவிற்குள் வருவதில்லை. போர் எந்திரத்திற்கு வெளியில் நிற்பவர்கள்.
  1. குடும்பவிதி எனபது சமூக உற்பத்திக்கான அமைப்பு.  இது தந்தைமை ஆதிக்கத்தை உருவாக்கும் இடிபலாக்க காதல் எந்திரத்தினை அடிப்படையைக் கொண்டது. இது அதிகாரத்தை ஏற்பதற்கான இணக்கத் தன்னிலையாக்கத்தினை உருவாக்குவது. இவர்கள் தாய் ஆதிக்கத்தை முன்வைத்து தந்தமையை காலவதியாக்கி வேறு ஒரு குடும்பமற்ற கூட்டமைப்பை உருவாக்குகிறார்கள். இதில் குருதிவழி என்கிற வரலாறு கலாச்சார பாரம்பரியம் இல்லை. இதற்குள் நெகிழ்வான சமூக உறவுகளை பகடி செய்யும் உறவுமுறைகள் உள்ளன. அந்த உறவுமுறைகள் பிறப்படிப்படையிலான குடும்ப அமைப்பை கொண்டதல்ல. எப்போதும் நெகிழ்வான, சுதந்திரமான ஒரு உறவைக் கொண்ட அமைப்பு அது. இவர்கள் இதனை ஜமாத் என்கிறார்கள். இந்த ஜமாத்திற்குள் சிறுசிறு நிர்வாக வசதிக்கான குடும்பமாக உள்ளனர்.
  1. சட்டரீதியான விதிமுறைப்படி இருபாலின உறவிற்கான சட்டங்கள் இவர்களை தனது நீதிபரிபாலன எல்லைக்குள் கொண்டு வர முயல்கிறது. சட்டத்தை மீறிய உறவுகளை உருவாக்கும் அதிகாரம் இவர்களிடமே உள்ளது. குடும்பத்திற்கான சட்டவிதிகள் இவர்களிடம் இல்லை.  இவர்கள் சட்டத்திற்கு வெளியே நிற்பதால் சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறார்கள். சட்டத்தினை முற்றிலுமாக இல்லாமல் ஆக்கிவிடுகிறது இவர்களது உடல்.   சட்டம் என்பது ஆண்-பெண்-பாலின-குடும்ப அமைப்பிற்கானதாக உள்ளதால் இவர்களை அது உள்ளடக்கமுடியாததாக உள்ளது.  
இவர்கள் ஒரு பொருண்மையான சமூக குழுவாக உள்ளனர். அதில் முழுமையான உடல் பாலியல் சுதந்திரம் உள்ளது.  அந்த கட்டுபாடற்ற தன்மை நிறுவன அங்கங்களான சமூகத்தில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்கிற அச்சம் உள்ளது. சமூகம் இவர்கள்மீது உள்ள தனது அச்சத்தால், இவர்களது இருப்பை இல்லாதொழிப்பதில் மூர்க்கமான வன்முறையை செலுத்துகிறது. சமூகத்தின் அங்கமற்ற உடல்களாக இவர்கள் இருப்பதே இப்போதைய அரசிற்கான அதிகாரத்திற்கான சிக்கல். உண்மையில் மாறியப்பாலினத்தினர்தான் விடுதலைபெற்ற பாலினத்தினர். இருமையெதிர்-பாலினத்தை ஏற்றவர்கள் ஒருவகையில் சமூகத்தின் பாலின விதிக்கு அடிமைப்பட்டவர்களே. பாலினத்திற்கு அதன் இருமைவிதிகளுக்கு அடிமையாகிவிட்டவர்கள்.  மாறியபாலினத்திற்கு இருமை இல்லை. ஒருமை மட்டுமே உள்ளது அதுதான் அவர்களது பன்மையாக உள்ளது.


[1] Discrete genders are part of what “humanizes” individuals within contemporary culture; indeed, those who fail to do their gender right are regularly punished. Because there is neither an “essence” that gender expresses or externalizes nor an objective ideal to which gender aspires; because gender is not a fact, the various acts of gender create the idea of gender, and without those acts, there would be no gender at all. Gender is, thus, a construction that regularly conceals its genesis.” - Judith Butler, “Performative Acts and Gender Constitution: An Essay in Phenomenology and Feminist Theory” (1988)

[2] மகராசன் என்பவரால் தொகுக்கப்பட்ட அரவாணிகள் உடலியல் உளவியல் வாழ்வியல்தோழமை வெளியீடு 2007 என்கிற நூலில் திருநங்கைகள் பற்றிய பல தகவல்கள் உள்ளன. அவர்களது உடலியல், அறிவியல், உளவியல் பற்றிய இந்தியா சார்ந்த தொன்மங்கள் மற்றும் அவர்களது அன்றாட வாழ்வியல், சடங்குகள், இலக்கியங்கள் வரை தொகுக்கப்பட்டு உள்ளது என்பதால் அவற்றை தவிர்த்த வேறு ஒரு தளத்தில், கோணத்தில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. தொகுப்பு என்பதால் அந்நூலில்கூட கூறியதுகூறலாக பலரும் திருநங்கைகள் பற்றிய வரலாற்று, தொன்ம, வாழ்வியல் குறிப்புகளை கூறுகிறார்கள். எல்லோரும் திருநங்கைகள் பற்றிய வரலாற்றை அரவாண் பலியிலிருந்தே துவங்குகிறார்கள் அதில்.

[3] ஜமாத் என்கிற அரபிச் சொல், சமூகக் குழுவாக வாழ்வதை குறிப்பதாகும். இஸ்லாமியர்களது குழு அமைப்பை குறிக்கும் சொல். மாறியப்பாலினத்தை சேர்தவர்களும் ஜமாத்தாகத்தான் வாழ்கிறார்கள். அவர்களது குழுவாழ்வை குறிப்பதும் இந்த ஜமாத் என்கிற சொல்தான். வடஇந்திய இஸ்லாமிய சமூகம் இவர்களை அரவணைத்ததால் இந்த சொல் வந்திருக்கலாம். இக்குழுவினர் பயன்படுத்தும் பல சொற்கள் அரபு-உருதுச் சொற்கள். ஓரமைவாக்க இஸ்லாமிய அடிப்படைவாதம் இவர்களை நிராகரிக்கிறது என்பதையும், சவுதி அராபியா போன்ற இஸ்லாமிய நாடுகள் கடுமையான தண்டனைகளை இவர்களுக்கு எதிராக சட்டமாக்கி வைத்து உள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

[4] பக்-218 Encyclopedia of Sex and Gender – Men and Women in the World’s Culture – edited by Carol R. Ember and Melviln Ember - ©2003 Kluwer Academic/Plenum Publishers,New York “நீரின்றி அமையா உலகு“ என்பதைப்போல “மருந்தின்றி வாழா உடல்“ என்ற நிலை உருவாகி உள்ளது.

[5] Transgender எனப்படும் ஆங்கிலச்சொல்லையே இங்கு மாறியப்பாலினத்தார் என்றும், Transsexual என்பதை மாறியப்பாலுணர்வாளர் என்ற சொல்லாலும் குறிக்கிறேன்.  Gender என்பது பாலினம் என்ற சொல்லாம், Sex பாலுமை என்ற சொல்லாலும் குறிக்கப்படுகிறது.

[6] ஹிஜர் என்கிற அரபிச்சொல்லின் வேரடியாக உருதில் உருவாகி உள்ள சொல் இது. அரபி மூலத்தில் இச்சொல்லிற்கு பொருள் வெளியேற்றப்படுதல், இனக்குழுவிலிருந்து வெளியேறுதல் இப்படி பலபொருட்கள் உள்ளது. மூன்றாம் பாலினமாக இவர்கள் பாலியல்-நில-எல்லைகள (sexual territory) விட்டு வெளியேறுதலை குறிப்பதாகவும், தாங்களது வாழ்நிலை குழு அல்லது அமைப்பிலிருந்து வெளியேறுவதையும் குறிப்பதாகக் கொள்ளலாம். http://en.wikipedia.org/wiki/Hijra_(South_Asia)#cite_note-4 முகமது நபி அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு வெளியேறியதை குறிப்பதற்கான சொல் ஹிஜ்ரத் என்பதும், இஸ்லாமிய ஆண்டு துவக்கமாக இது கொள்ளப்படுவதும் இச்சொல் மூலத்தைக்கொண்டதே. வெளியேறுதல் என்பதை குறிப்பதே.

[7] பக். 43 - Encyclopedia of Hinduism - Constance A. Jones and James D. Ryan J. Gordon Melton, Series Editor 2007 - Facts On File, Inc. An imprint of Infobase Publishing

[8] இப்பழக்கத்தை திருநங்கைகள் பற்றிய ஆவணப்படங்களிலும், தமிழில் திருநங்கைகள் பற்றி வெளிவந்த நர்த்தகி என்கிற திரைப்படத்திலும் காணலாம். திருநங்கைகள் பற்றிய மற்றொருபடம் நவரசா. இவ்விரு படங்களும் திருநங்கைகள் பற்றிய தமிழில் வந்த முழுநீளப்படங்கள். இவற்றின் கதையாடல் ஒத்த தன்மையைக் கொண்டிருந்தாலும், இரண்டும் இரண்டு வேறுபட்ட சூழலில் உருவாகும் திருநங்கைகள் பற்றியது. நவரசா, ஒரு சிறுமியின் பார்வையில், அவர் புரிந்துகொள்வதை பெரியவர்கள் புரிந்துகொள்ளமுடியாத சூழலை நுட்பமாக அம்பலப்படுத்தும் படம்.

Author Picture

ஜமாலன்

மார்க்சியம், இலக்கியம், அரசியல், பின்காலனியம், பின் நவீனத்துவம், சினிமா போன்ற பல துறைகளில் தொடர்ந்து எழுதி இயங்கி வருபவர். கோட்பாடு சார்ந்த திறனாய்வுகள் மற்றும் தமிழியல் ஆய்வுகளில் கவனம் செலுத்தி வருபவர்.

மின்னஞ்சல் - jamalan.tamil@gmail.com

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு