எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எழுத்தறிவித்தவன் இறைவன்.
எழுத்தையும் எழுத்தாளரையும் போற்றி வளர்த்தது தமிழ் மரபு. இறைவனையும்
கேள்விகளால் துளைத்தெடுத்து நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்கிற
நக்கீரர் மரபு. நமது மரபு.
சாதி இரண்டொழிய வேறில்லை.
சாதிப் பிரிவினிலே தீ மூட்டு!
சாதியாவதேதடா? சமயமாவதேதடா?
கோயிலாவதேதடா? குளங்கள் ஆவதேதடா?
சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே! என்றெல்லாம் சமத்துவத்தைக்
கொண்டாடிய மரபு தமிழ் மரபு.
இந்தியக் கிறிஸ்தவம் சாதியக் கட்டமைப்பால் கடைநிலைக்குத்
தள்ளப்பட்டு மனிதராய்ப் பிறந்தும் மனிதராய் வாழ முடியாத அளவிற்குக் கொடுமைகளுக்காளான மனிதரைக் கடைத்தேற்ற வந்தது.
இந்து மதத்தில் சாதிக் கொடுமை இருக்கிறது என்பதால்தான் இசுலாமும்
கிறிஸ்தவமும் விளிம்பு மக்களின் விருப்பத்
தேர்வாயின. கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு கிறிஸ்தவம் கல்வியளித்தது. வணிகம்
மறுக்கப்பட்ட மக்களை இசுலாம்
வணிகர்களாக்கியது.
எட்டி நில்! கூனிக் குறுகிக் கையைக் கட்டி நில்! அடிபணிந்து கிட! என் மலத்தை உன் கையால்
வழித்தெறி! எனது எச்சில் சோற்றை புழக்கடையில் வாங்கிக் கொண்டு என் குப்பைகளைக்
கூட்டிப் பெருக்கு! என்று மனிதரை மண்டியிடச் செய்த ஆணவச் சாதியத்தை கிறிஸ்தவமும்
இசுலாமும் கேள்விக்குட்படுத்தின.
ஈராயிரமாண்டுகள்
தங்களுக்கு அடிமைகளாக இருந்தோரை விடுவித்த மதங்களின் மீது சனாதனம் இன்றுவரை
வெறுப்பை விதைக்கிறது. பகைமையைப் பரப்புகிறது. கொடுமைகளுக்குக் கோபுரம்
கட்டுகிறது. நாங்கள் குப்பைக்குத் தள்ளியவர்களுக்கு நீ எதற்கு கல்வி கொடுத்தாய்
என்பதே சனாதனத்தின் கேள்வி.
இவ்வாரான விவாதங்களின் தொடர்ச்சியாகத் தோழர் நிவேதிதா லூயிஸின்
கிறிஸ்தவத்தில் ஜாதி என்ற நூல் முக்கியமானதாக அமைகிறது.
இன்று கிறிஸ்தவம் தடம் மாறிவிட்டது. ஆதிக் கிறிஸ்தவம் வேறு.
சாதிக் கிறிஸ்தவம் வேறு. எல்லோரும் ஓர் நிறை. அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றது ஆதிக்
கிறிஸ்தவம். உழைப்பின் கனிகளைப் பொதுவில் வை. சமத்துவ சரிநிகர் மானுடம் கொண்டாடு
என்றது. அன்பையும் நீதியுணர்வையும் விட
உயர்ந்த பண்பு எதுவும் இல்லை என்பதே ஆதிக் கிறிஸ்தவம்.
இயேசு கிறிஸ்து
அனைவருக்குமானவர். எல்லோருக்குமான கருணையுள்ளம் கொண்டவர். குறிப்பாக மேல்
சாதியெனத் தங்களைக் கருதிக் கொண்டு தங்கள் சொந்த இனத்தைச் சேர்ந்த சமாரியரை
யூதர்கள் ஒதுக்கி வைத்தனர். சமாரிய ஊர்கள் பக்கம் செல்வதையும் அவர்களோடு
உரையாடுவதையும் உணவருந்தலையும் மணமுடித்தலையும் அறவே தவிர்த்தனர்.
இத்தகைய ஒதுக்கலையும் ஒடுக்கலையும் இயேசு
கண்டித்ததோடின்றி ஒதுக்கப்படும் அவர்களோடு
கலந்துரையாடினார். காயம்பட்ட யூதனுக்கு மீட்பு சமாரியனிடமிருந்தே வரமுடியும்
என்றார்.
மேல்சாதிப்
புத்தியுடைய சமூக நோயர்களையும்
ஒடுக்கப்பட்ட சாதியினரே விடுவிக்க முடியும் என்று முழங்கிய முதல் கம்யூனிஸ்டு
இயேசு. நாம் அனைவரும் தோழர்கள், நண்பர்கள் என்றார். தோழர் (காம்ரேடு) என்கிற சொல்லை முதன்
முதல் கையாண்டது தோழர். இயேசுவே.
அவரின் சமத்துவமும்
சகோதரத்துவமும் விடுதலை முழக்கமும் முதல் முன்னூறு ஆண்டுகளுக்கு மட்டுமே
நீடித்தது. அதற்குப் பின்பு கிறிஸ்தவம் சாதித்துவமாக மாறியது. சடங்குக் கிறிஸ்தவம்
ஆனது. விடுதலை இயேசு சுருப இயேசுவானார். சுருபத்தை தூக்கித் திரிவது எளிது.
விடுதலை இயேசுவைத் தூக்கித் திரிவது கடினம்.
சாதிக் கிறிஸ்தவம் மனிதரை சக மனிதராகப் பார்க்கத் தடை.யாக
உள்ளது. கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாக ஒன்றிணைவதைத் தடுக்கிறது. எனவேதான்
இந்தியாவின் பல்வேறிடங்களிலும் இயேசுவின் சுருபம் சங்கிகளால் உடைக்கப்பட்ட போது
கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாக ஒன்றிணைய வழியில்லாமல் போனது. சங்கிகளின் சனாதன
சாதிவெறியைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு சாதிக் கிறிஸ்தவனும் இயேசுவைக் காட்டிக்
கொடுக்கிற யூதாசாகிறான். யூதாசிற்கும் சங்கியாக மாறிய சாதிக் கிறிஸ்தவனுக்கும்
வேறுபாடில்லை.
எனவே
கிறிஸ்தவத்தில் புரையோடிப்போன புற்றுநோயான சாதிவெறியின் வெளிப்பாடுதான் இரட்டைக்
கல்லறை. இரட்டை தூம்பா தனிக் கோயில்கள். அகமண முறை. ஊர் வேறு. சேரி வேறு என்ற
பிரிவினை. தனித்தனி திருவிழா. அவர்கள் ஒன்றாக இருப்பார்கள் என்ற இயேசுவின் கடைசி
செபத்தை சாதிக் கிறிஸ்தவர்கள் சாகடித்துவிட்டனர்.
கிறிஸ்தவர்களை ஒன்றுபடுத்த வழியின்றித் தவிக்கிறார் இயேசு.
கிறிஸ்தவத்தில் ஜாதி என்கிற தோழர் நிவேதிதா லூயிஸ்
அவர்களின் நூல் கிறிஸ்தவம் வளர்க்கத் தவறிய சகோதரத்துவத்தை உயர்த்திப்
பிடிக்கிறது. தொலைந்து போன சமத்துவத்தை கிறிஸ்தவர்களின் தெருக்கள் தோறும்
தேடியலைகிறது.
கிறிஸ்தவர்களே ஏன் என்னைக் கைவிட்டீர்கள் என்று நூல்
இயேசுவின் அதே சொற்களால் சாட்டையைச் சொடுக்குகிறது. கிறிஸ்தவர்கள் தங்களின்
பிரச்சினையைத் தாங்களே தீர்த்துக் கொள்ள வழிவகை காணாமல் நீதிமன்றப்
படிக்கட்டுகளில் ஏறியிறங்கி பணத்தையும்
நேரத்தையும் செலவளிப்பதைக் குற்றவாளிக் கூண்டிலேற்றி
விசாரிக்கிறது.
தீர்வு காண வேண்டிய மறைமாவட்ட நிர்வாகம் ஒதுங்கும் போது
தோமையார்புரத்தில் தோமையார் தனக்கான தீர்வை தானே தேடிக் கொள்ள வேண்டியுள்ளதை நூல்
சுட்டிக்காட்டுகிறது.
கிறிஸ்தவர்களின் கோயில்,
மண்டபம் உள்ளிட்ட சொத்துகளை நிர்வாகம் செய்ய வேண்டிய
மறைமாவட்ட அதிகாரத்திலிருப்போரின் தவறான
முடிவுகளால் தனியார்கள் பொதுச் சொத்தை சூறையாடுவதையும் அவர்கள் கிறிஸ்தவத்தில்
மாஃபியா கும்பலாக இருப்பதையும் நூல் ஆதாரங்களோடு முன்வைக்கிறது.
நூலின் தொடக்கத்திலேயே அண்ணல் அம்பேத்கர் அவர்களின்
முக்கியச் சிந்தனையைப் பகிர்ந்துள்ளார்.
" ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளில்
வேதப்பரப்பரையருக்கு அக்கறையில்லை. இன்னமும் அரசியலில் கிறிஸ்தவர்கள் நுழையாமல்
இருப்பது பெரும் பிழை. படித்த கிறிஸ்தவர்கள் கல்வி கற்றிருந்தாலும் படிக்காத
ஒடுக்கப்பட்ட மக்கள் அளவிற்கு ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடவில்லை. உங்களில்
எத்தனை பேர் மாவட்ட நீதிபதிகள்?". (Ganjare
vol III)
அண்ணலின் எச்சரிக்கை சாதிமயப்பட்ட கிறிஸ்தவர்களின்
மண்டையில் இன்றுவரை உறைக்கவேயில்லை. அரசியல்மயமாக வேண்டிய கிறிஸ்தவர்கள்
சாதியமாகியது வரலாற்றுப் பிழை. முதல்
கோணல் முற்றும் கோணல்.
ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து போராடி சட்டமன்றத்திலும்
நாடாளுமன்றத்திலும் தங்களின் பிரதிநிதிகளைப் பெற்றுள்ளனர். கிறிஸ்தவர்கள்
ஒருங்கிணைவதும் இல்லை. உரிமைகளுக்காகப் போராடுவதுமில்லை. மேலொரு வாழ்க்கை உண்டு
என்று தங்கள் மேல் எழும் துன்பங்களை மறக்கின்றனர். மெசியா மீண்டும் வருவார்.
விண்ணகம் நமக்குண்டு என்றெல்லாம் கூறி இவ்வுலக வாழ்வைப் பொருட்டாகக் கருதுவதில்லை.
அடுத்த உலகம் சொர்க்கம் பற்றிய இயற்கை
இகந்த சிந்தனை இவ்வுலகைப் பற்றிய சரியான பார்வையைக் கிறிஸ்தவர்களிடமிருந்து
அகற்றிவிட்டது. ஆன்மீகம் போதும் என்றிருக்கும் கிறிஸ்தவர்கள் கோயில்களும்
சிருவங்களும் நொறுக்கப்படும்போதும்
மணிப்பூர் பற்றியெரியும் போதும் ஆண்டவர் பார்த்துக் கொள்வார் என்று இருக்கின்றனர்.
கருத்தியல் மூளைச் சலவை என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவையில்லை.
அரசியலில் ஒருங்கிணையாமல் கிறிஸ்தவர்களுக்கு எதிர்காலம் இல்லை.
கிறிஸ்தவர்கள் அண்ணலைப் படிக்காவிட்டாலும் திருத்தந்தை
இரண்டாம் ஜான் பால் கூற்றுக்கேனும் செவிமடுத்த இருக்க வேண்டும் என்கிறார் தோழர்
நிவேதிதா.
"மரபாகவும் பழக்கவழக்கமாகவும் ஏற்றத்தாழ்வைப் பேணி
வளர்க்கும் சாதிய அமைப்பு நற்செய்திப் பணிக்குத் தடை. உண்மை ஆன்மீகத்திற்கு முரண்.
கிறிஸ்தவர்கள் சாதியமைப்பை அழித்தொழித்து தோழமை ஒருங்கிணைவை வளர்த்தெடுக்க
வேண்டும்" என்று இந்திய ஆயர்களிடம் 17-
11- 2003 அன்று
வலியுறுத்தியுள்ளார். அய்ரோப்பியரான
திருத்தந்தைக்கு இருக்கும் ஆதங்கமும் சமத்துவ உணர்வும் சாதியொழிப்பின்
முக்கியத்துவமும் இங்கிருக்கும் ஆயர்களுக்குப் புரிவதுமில்லை. புரிந்தாலும் புரியாதது போன்று,
காதில் விழுந்தாலும் விழாதது போன்று இருக்கின்றனர்.
இந்தியக் கிறிஸ்தவம் சாதியக் கிறிஸ்தவம். இந்த நூல் திண்டுக்கல்,
கும்பகோணம், செங்கல்பட்டு ஆகிய மூன்று மறைமாவட்டங்களின் சாதியச்
சிக்கல்கள் சிலவற்றை ஆய்வு செய்கிறது.
திண்டுக்கல்லில் தலித் கிறிஸ்தவர் பகுதியில் உள்ள
தோமையார்புரம் கோயிலில் திருவிழாவைப் பக்கத்துப் பங்கான சிறுநாயக்கன்பட்டி
வன்னியக் கிறிஸ்தவர்கள் காலம் காலமாய் கொண்டாடுவதையும் உண்டியல் காணிக்கை,
வரவுகள் அனைத்தையும் எடுத்துச் செல்வதை வழக்கு தொடுத்து
தோமையார்புரம் தலித் கிறிஸ்தவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆயரின் முடிவை
தலித்துகள் ஏற்றனர். வன்னியர்கள் ஏற்கவில்லை. மறைமாவட்டம் தீர்வு காண முடியாத
நிலையில் இரண்டு தரப்பும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
தூய வளனார் கதீட்ரல் பங்கின் (தலீத்
கிறிஸ்தவப் பங்கு) சகாய மாதா மக்கள் மன்றம் பங்கிற்கும் மறைமாவட்டத்திற்கும்
பயனில்லாமல் தனியாரிடம் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் பஞ்சம்பட்டி பாஸ்கா
நாடகத்தில் இதுவரை தலித் கிறிஸ்தவர்கள் பங்கேற்க அனுமதியில்லை.
கும்பகோணம் தொண்டமான் துறை,
கோட்டப் பாளையம், செங்கல்பட்டு பாப்பா நல்லூர்,
கினான் கண்டிகை புதூர்,
இராவுத்த நல்லூர் கண்டிகை ஆகிய பகுதிகளில் காலம் காலமாய்த்
தலைவிரித்தாடும் சாதிவெறிப் போக்கு கிறிஸ்தவம் சமத்துவத்தைக் கைவிடுவதை
உணர்த்துகிறது.
தொண்டமான்துறையில் சாதிய ஆதிக்கத்தையும் தலித்துகள்
ஒதுக்கப்படுவதையும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்,
தி இந்து நாளிதழ்கள் சாவுக்குப் பிறகும் துரத்தும் தீண்டாமை,
தனிக் கல்லறை, தனித் தூம்பா போன்ற
கிறிஸ்தவத்தின் தீண்டாமையைக்
கட்டுரைகளாக வெளியிட்டுள்ளன.
மதம் மாறினாலும் சாதி இழிவுகளோடு தலித்துகளைத்
தீண்டாதோராகவே வைத்திருப்பது சமூக அநீதி. அரசியல் சதி.
இந்த நூலில் தோழர். நிவேதிதா லூயிஸ் அவர்கள் தனது எழுத்தாக எதையும் முன்வைக்காமல் இரண்டு தரப்பு வாதங்களையும் சமூக அக்கறையுடையோரின் நேர்காணல்களையும் பதிவிடுகிற முறை இதுவரை எழுத்துலகம் கண்டிராத அரிய வகை முயற்சி.
கிறிஸ்தவத்தில் ஜாதி நூல் குறித்த உரையாடல் நிகழ்வுக் குறிப்பு:
23
-06- 2024 அன்று காலை
தோமா அருள்பணி மையத்தில் ஒரு கலந்துரையாடலைத் தமிழ்ப் படிப்பகமும் தனிச் சொல்லும்
முன்னெடுத்தன.
வரலாற்று ஆய்வாளரான தோழர். நிவேதிதா லூயிஸ் "என்
அடையாளம் கிறிஸ்தவம் அல்ல. நான் சாதனத்தை நம்புவளும் அல்ல. நான் மதவாதி அல்ல.
மானுடவாதி. எனக்கு வரலாறு முக்கியமல்ல. நிகழ்கால மனிதர்களே முக்கியம்" என்றும், நிகழ் காலமும் வாழும் மனிதருமே
வரலாறாவதையும் வரலாற்றை
மறுவாசிப்பு செய்ய வேண்டிய தேவையையும் தெளிவுபடுத்தினார் தனது நூலின் வழியாக. புரட்சிகரப்
பொறுமை என்று மாமேதை இலெனின் குறிப்பிடுவார். அத்தகைய பொறுமையோடும் கவனமோடும்
அவர் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆய்வாக இந்த நூல் அமைகிறது. உரை அனைவரையும் கவர்ந்தது.
முரண்பட்டு வாதிட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினரில் சிலரையும்
அவர் பக்குவமாகக் கையாண்டார். குற்றப் பரம்பரையினர் என்ற சொல் நூலில் இருக்கிறது
என்று மேனாள் ஆசிரியர். நிக்கோலாஸ் கூறியபோது ஆதாரம் காட்டுங்கள் என்று
நூலாசிரியர் கேட்டார். ஆனால் அவர் தரவில்லை. ஒரு ஆசிரியராக இருந்தவரையே சாதி
வன்மம் இப்படிப் பொய் கூற வைக்கிறது.
கூட்டத்தை நெறிப்படுத்திய அருள்பணி முனைவர் சோ. பிலிப் சுதாகர் அவர்களை
அவன், இவன், என் வீட்டு வேலைக்காரன் என்றெல்லாம் மனிதநேயமற்ற வகையில்
அவரைப் பேச வைக்கிறது.
அதே போன்று நூலைப் படிக்காமலேயே வழக்கறிஞர். ஆரோக்கியசாமி
தனது பெயரைக் குறிப்பிட்டு, தரக்குறைவாக
எழுதப்பட்டுள்ளது என்றார். அவ்வாறெல்லாம் எழுதவில்லை என்று ஆசிரியர் கூறிய பிறகும்
அவர் வாதம் செய்ததை என்னவென்று சொல்வது?
நூலில் எந்த சாதிப் பெயரையும் குறிப்பிடாமல் பிற்படுத்தப்பட்டோரில் ஆதிக்கம் செய்வோர் என்று கூறுவது அவர்களை ஏன் உறுத்துகிறது? ஏன் சின்னப் பிள்ளைகள் பொம்மைகளை வைத்துக் கொண்டு இது என்னுது இது உன்னுது என்பது போன்று சண்டையிடுகிறார்கள்?
காலம் எவ்வளவோ மாறிவிட்டது. கல்வியிலும் பொருளியல் முன்னேற்றத்திலும் உங்களை
முன்னோக்கி நகர விடாமல் வெறுமனே சாதி வெறியூட்டி உங்களை இன்னும் முன்னேற விடாமல்
தடுப்போர் எவராயிருந்தாலும் அவர்கள் உங்கள் சொந்த சாதியினரே ஆயினும் அவர்களே
உங்கள் எதிர்கால ஏணியை எட்டி உதைப்பவர்கள். அவர்களை அடையாளம் கண்டு கொள்ள
வேண்டும். எதிர்க்க வேண்டும் என்பதே
தோழர். நிவேதிதா அவர்களது உரையின் முக்கியப் பகுதி.
திண்டுக்கல் மண்ணில்தான்
தலித் விடுதலைக்கான முதல் குரல்
ஓங்கி ஒலித்தது என்பதையும் அவர் நினைவுப்படுத்தினார். செருப்பு செப்பனிடும் சூசையின் எனக்கு நீதி
எங்கே? என்ற சமூக நீதியின் குரல்
நீதிமன்றத்தில் ஓங்கி ஒலித்ததையும்
திருச்சபை அவரின் பக்கம் நிற்கத் தவறியதையும்
விளக்கினார். திண்டுக்கல்
தலித்துகள் போராட்டத்தில் ஒரு திருப்புமுனை என்றார்.
வெளிநாட்டுப் பாதிரியார்களும் பரதவப் பாதிரியார்களும்
கட்டிக் கொடுத்த கோயில்களையும் பாஸ்கா மேடைகளையும் இன்றும் பயன்படுத்துகிறோம்.
தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் என்ற வேறுபாடில்லாமல் அனைவருக்கும் கல்வியும் பொருளுதவியும் ஆன்மிக
உதவிகளும் எங்கெங்கோயிருந்து வந்து அவர்கள் செய்ததை மறந்துவிட்டு இன்று நாம் சாதிப் பெருமையடித்துக் கொள்வது உண்ட
வீட்டுக்குச் செய்கிற பச்சைத் துரோகம். கிறிஸ்தவத்தை சாதியச் சிமிழுக்குள்
அடைத்ததின் விளைவு.
உலகியல் வாழ்வியலுக்கு அப்பாற்பட்டவராகக் கடவுளர் சித்தரிக்கப்பட்டாலும் அடுத்த உலகம் என்பது இவ்வுலகின் பிரதிபலிப்பாக உள்ளது. தெய்வங்களிடையிலான போர்கள் உண்மையில் இவ்வுலகப்போரினையே அடிநாதமாகக் கொண்டுள்ளன.சொர்க்கம் என்பது அனைவருக்குமான பொதுவுடைமை தான். சமயம் ஒரு வலி நிவாரணி. இதயமற்ற உலகின் இதயம். ஆன்மாவற்ற உலகின் ஆன்மா. ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமுச்சு. இவற்றைத் தோழர் மார்க்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமயத்திற்கு மூடத்தனமான கருத்து
முதல்வாதச் சிந்தனைகளே விளக்கங்களாகத் தரப்படுகின்றன. பிரிவினைச் சுவர்களையும்
வர்க்க நலன்களையும் பாதுகாக்கவும் நிலவுகிற ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த சமூகத்தைக்
கட்டிக் காப்பாற்றவுமே சமயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அறிவாளிகளையும்
முட்டாள்கள் ஆக்கிவிடும் பகுத்தறிவற்ற போக்குகள் சமயத்தின் பெயரால் ஊக்கம்
பெறுகின்றன. அறிவியல் அணுகுமுறைகள் கைவிடப்பட்டன.
ஆதிக் கிறிஸ்தவம் ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கம். உரோமையப்
பேரரசின் கொத்தடிமைகளாகக் கிறிஸ்தவர்கள் நடத்தப்பட்டதை எதிர்த்துக் கிளர்ச்சியாக
வெடித்த பேரியக்கம் (எங்கெல்ஸ்).
சாதியக் கொடுமைகளால் ஒடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட தலித்துகள்
கிறிஸ்தவ சமயத்திற்கு மாறினர். அராபிய
மூர்களிடமிருந்து போர்த்துக்கீசியர் தங்களைக் காப்பாற்றவே பரதவர் மதம் மாறினர்.
புரட்சியாகவும் சீர்திருத்தமாகவும் உலகெங்கிலும்
மாற்றங்களைக் கொணர முடிந்த கிறிஸ்தவம் இந்தியாவிற்குள் நுழைந்தபோது சாதியக்
கிறிஸ்தவம் ஆனது.
தூம்பா, கல்லறை, கோயில், சப்பரம், பூசை, திருவிழா, வரி வசூல், தேரிழுப்பது, பங்கு நிர்வாகம், அன்பியம், இறை அழைத்தல், திருமணம் என்று யாவற்றிலும் சாதியமே கோலோச்சுகிறது. சிலுவை
முத்தி செய்வது மட்டுமே பொதுவில் உள்ளது.
கௌசானல் கல்லறைப் பிரிவினைச் சுவரை இடித்தார். அந்த மேலான எடுத்துக்காட்டு
கிறிஸ்தவத்தில் பின்பற்றப்படவில்லை. இந்தியக் கிறிஸ்தவர்களை நீண்ட காலத்திற்கு
இயேசு சபை குருக்கள் ஆக்காமலிருந்தது.
எண்பதுகளில் இயேசு சபைக்குள் நடந்த தலித்துகள் போராட்டத்தின் விளைவாகவே 50% இட ஒதுக்கீடு என்பது சாத்தியமானது. ஆனால்
தொண்ணூறுகளில் கழுதை தேய்ந்து
கட்டெறும்பான கதையாகி விட்டது. இன்று இயேசு சபை நிறுவனங்களில் தலித் கிறிஸ்தவ
மாணவர்களுக்கு வெறும் ஐந்து மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படுகிறது.
திருச்சபையில் 40% என்பதும் நடைமுறையில் இல்லை. கேள்வி கேட்கும் இளைஞர்களும்
இல்லை. சமூக சிந்தனை மிகுந்த இளைஞர்கள் அரசியலுக்குச் சென்றுவிட்டனர்.
இன்றையத் தலைமுறைக்கு வரலாறு தெரியாது. அரசியல் தெரியாது.
போராட்டம் தெரியாது. அரசியல் புரியாத இளையோர் எளிதில் கோயில் அலங்காரங்களுக்கும்
திருவிழா வேடிக்கைகளுக்கும் பங்குக் குருக்களின் எடுபிடி வேலைகளுக்கும்
பயன்படுகின்றனர்.
நிவேதிதா அவர்கள் உரைக்குப்பின்
உரையாடல் நடந்தது.
படித்த இளைஞர்கள் பெருமளவு பங்கேற்ற இந்தக்
கருத்தரங்கில், சாதியும்
தீண்டாமையும் கிறிஸ்தவத்தின் சாபக்கேடு என்பது உணரப்பட்டது. கிறிஸ்தவத்தில் சாதி
இல்லை என்பவன் திருடன். பொய்யன். விடுதலைப் போராளி இயேசுவைப் பின்பற்றுவோர்
சாதியின் பெயரால் அணி திரள்வது கிறிஸ்துவைக் கைவிடுவது.
சாதிக்கொரு கல்லறை கிறிஸ்தவத்தில் இருக்கலாமா?
சமத்துவ நாயகன் இயேசுவைக் கைவிட லாமா?
போன்ற கேள்விகளை இளைஞர்கள் எழுப்பினர். சாத்தானை
விட்டுவிடுகிறாயா என்று திருமுழுக்கு நேரத்தில் கேட்கப்படுகிறது. சாதியை விட்டு
விடுகிறாயா என்று கேட்டால் சாதி
இருக்கட்டும். திருமுழுக்கு வேண்டாம் என்று சொல்லக்கூடிய நிலைக்கு
இன்று கிறிஸ்தவர்கள் வந்துள்ளனர்!
பங்கேற்ற இளைஞர்கள் எங்களை சாதியின் பெயரால் பிரிக்காதீர்கள் என்று
கலந்துரையாடல் செய்தனர்.
நூலாசிரியர் நிவேதிதா லூயிஸ் கிறிஸ்தவத்தில் ஜாதியை எதிர்த்து நாம்
போராடாவிட்டால் அழிவது உறுதி என்ற எச்சரிக்கை மணியை எழுப்பி சிந்திக்க வைத்தார்.
நாம் ஒற்றுமையாக இருக்க இனியும் மறுத்தால் நம்மைக் காவிக் கும்பல் எளிதில் வீழ்த்தும் என்றும்
எச்சரித்தார்.
தேவாலய சொத்துகளை
கணக்கெடுக்க வேண்டும் என்கிற நீதிபதி ஜி.
சுவாமிநாதனின் அண்மைய நீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, அரசும் நீதிமன்றமும் உங்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் மாறுவீர்களா என்று
சவால் விடுத்தார்.
இளைஞர்கள் நாங்கள் கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தின் சமத்துவக் கோட்பாட்டை
இடித்துத் தகர்க்கும் சாதி, தீண்டாமையை அடியோடு ஒழிப்போம் என்று சூளுரைத்தனர்.
கிறிஸ்தவத்தில் சாதியப் பாகுபாடுகளைத் திட்டமிட்டு வளர்க்கும் சங்கித்தனமான சாதி
வெறிப் போக்கை கைவிடாதவரை போராட்டம் தொடரும் என்றனர்.
சாதிக் கலப்புகள் பல்வேறு காலக்கட்டங்களில் நடந்தன. இதனால்
தனித்த தூய சாதி என்று எதுவும் கிடையாது. அது வெறுமனே ஊதிப் பெருக்கப்படுகிற
கற்பனைப் பெருமை என்பதை அண்ணல் அம்பேத்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்றும் நடைமுறையில் பல கலப்புகள் நடப்பதை ஆதிக்க சாதிகள்
செரித்துக் கொள்ளமுடியாமல் வன்மத்தைக் கக்குகின்றன. வன்முறையைக் கையிலெடுக்கின்றன.
அப்பாவித் தலித்துகள் எண்ணற்றோர் கொல்லப்படுகின்றனர். சொந்த சாதிப் பெண்களிடம்
தெய்வத்தின் பெயரால் பிறர் சாதி புகுவதில்லை. மணமுடிப்பதில்லை என்று சத்தியம்
வாங்கப்படுகிறது. மானுட இயல்பான காதல் உணர்ச்சிகள் சாதியரக்கக் கால்களில்
மிதிபடுகின்றன. அவரவர் சாதிக்குள் மணமக்கள் மணமேடை தேடி விளம்பரம் செய்வோர் நவீன
ஊடகங்களை சாதிவெறி ஊடகங்களாக்கி கறைப்
படுத்துகின்றனர். சாதிக்குள் மணப் பெண் தேவை விளம்பரம் செய்கிற நாளிதழ்களில்
இளவரசன் படுகொலைகளும் சாதிய மோதல்களும் செய்திகளாகின்றன. வெளிவருகின்றன.
சாணானைக் கண்டாலே தீட்டு எனப்பட்ட சாதி வெறிச் சமூகத்தில் சாதியக் கொடுமைகளை எதிர்த்து நின்று
போராடியவர்கள் நாடார்கள். மார்பு மறைப்பிற்காகவும் தன்மானத்திற்காகவும் தோள்சீலைப்
போராட்டம் நடத்தினார்கள். வணிக உரிமைகள் மறுக்கப்பட்டதால் பொருளாதார
முன்னேற்றத்திற்கான வாயில்கள் இவர்களுக்கு அடைக்கப்பட்டிருந்தன. பனையேறிகள் என்று
கேலி செய்யப்பட்ட சமூக அடக்குமுறைகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டனர். சில்லறைகளாய்ச்
சிதறிக் கிடந்தோர் ஓரணியில் திரண்டு
உரிமைக் குரல் எழுப்பினர். முனைப்போடு
முன்னேறிய நாடார்கள் தங்கள் வங்கியில் ஆதிக்க சாதியினரையும் கணக்குத் தொடங்க
வைத்து சாதித் திமிரின் சங்கை உடைத்தனர். கூட்டு உழைப்பும் கூட்டுச் சிந்தனையும்
கூட்டு முயற்சியும் நமக்கான வேர்கள். எதை வைத்து ஒடுக்கினார்களோ அதையே ஆயதமாக்கி
வென்றனர்.
ஆனாலும் வரலாறுதான் எத்தனை எத்தனை முரண்பாடுகளைச் சந்திக்கிறது. சாதிவெறியும் மதவெறியும் உழைப்பால் முன்னேறிய இவர்களிடமும் புற்றுநோயாக உருவெடுத்துவிட்டது. பொருளியல் தலைமைக்கு முன்னேறி வரமுடிந்த அவர்களிடம் ஏன் அரசியல் தலைமையும் சமூகத் தலைமையும் பிற்போக்காகிவிட்டன என்பது வேதனைக்குரியது.