“பெரும்பாலும்
மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப்படுவனவற்றையும் கேட்பீராக”
(மநு, அத்தியாயம்
19)
“தகப்பன் அல்லது
கூடப் பிறந்தவர்கள் இவர்கள் இவளை யாருக்கு விவாகம் செய்து கொடுக்கிறார்களோ அவன்
ஜீவிக்கற வரை அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டியது. அவன் இறந்த பின்னும் விபசாரம்
செய்யாமல் சிரார்த்தம் முதலியவை செய்துக் கொண்டிருக்க வேண்டியது.” (மநு, அத்தியாயம்
5)
“கணவன் துராசார
முள்ளவனாயிருந்தாலும் அந்நிய ஸ்திரீ லோலனா யிருந்தாலும் நற்குணமில்லாதவனா
யிருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போல் பூசிக்க
வேண்டும்.” (மநு, அத்தியாயம் 5)
மூவாயிரமாண்டுகளுக்கு முற்பட்டதென கூறப்படுகிறது மநு. பெண் பிறப்பு, பருவமடைதல், கலவி, கைம்பெண், இறப்பென
பெண்ணுடல் தொடர்புடைய அனைத்தையும் தீட்டு- தீட்டென வரையறுக்கும் பெண் வெறுப்பின்
மூல விஷம் மநுவிலிருந்து தொடங்குகிறது.
தி வாட்டர் (2005) திரைப்படம் வெளிவந்தபோது மிகப்பெரிய கண்டனத்தை
பார்ப்பனச் சமூகத்தினரிடமிருந்து எதிர்கொண்டது. பார்ப்பனச் சமூகம் கடந்த
நூற்றாண்டு வரை தம் பெண்களை மிகக் கொடூரமான அடக்கு முறைக்குள் வைத்து
இழிவுப்படுத்திய சமூக யதார்த்தத்தை நவீன உலகுக்குத் தனது திரைக்கதையின் வழி
அறிமுகப் படுத்தியிருப்பார் தீபா மேத்தா. தி வாட்டர் பேசும் யதார்த்தமும் மநு
பார்ப்பனர்களின் உயிரியல் தொடர்ச்சியைக் காக்கப் போராடும் அடி ஊற்றும் ஒன்றென
இதில் விளங்கும். பார்ப்பனப் பரம்பரையைக் காப்பாற்ற பார்ப்பனப் பெண்களுக்கு
வகுக்கும் ஒழுக்கவிதிகள் கட்டுப்பாடுகள் வரையரைகள் மூலம் பார்ப்பனச் சமூகத்தின்
இழிக்கலாச்சார வாழ்வியல் நெறிகள் மநுவின் வரிகளுக்கு இடையில் பரவிக்கிடக்கின்றன, அவை
பெண்களின் புதைகுழிகளாக பெருகிக் கிடக்கின்றன.
பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை நான்கு வர்ணங்களாகப் பிரிக்கும் மநு
அந்நான்கு வர்ணங்களுக்கும் தொழிலை வகுத்திருக்கிறது. பார்ப்பான், சத்திரியன், வைசியன், சூத்திரன்
அதன் பிறகுள்ள அனைவரும் வர்ணமற்ற மக்கள்.
பஞ்சமர்கள் ஆதிகுடிகள் சுதந்திரக்குடிகளாக பௌத்தக்குடிகளாக இருந்ததால்
மநுவின் பட்டியலுக்குள் அடக்கவில்லை.
சூத்திர வர்ணத்தின் தொழில் விவசாயம், மீன்பிடி, கால்நடை
மேய்ப்பு, நெசவு, கட்டுமானத்
தொழில், பண்ட
பாத்திரம் கருவிகள் உற்பத்தி இப்படி வாழ்வுக்குத் தேவையான அனைத்து அடிப்படைத்
தொழில்களும் இதற்குள் அடங்கிவிடும். இதில் ஆணும் பெண்ணும் சரிசமமாக உழைத்தால்தான்
உணவு. அவரவர் வயிற்றுக்கு அவரவர் கைகள் உத்திரவாதம்.
வைசியன் சூத்திரர்கள் உற்பத்தி செய்த பொருட்களை வணிகம் செய்யும் வியாபாரிகள், இவர்கள்
வறுமையில் வாடும் சூழல் உருவாவதில்லை. இவர்களிடம் தேவைக்கு அதிகமாக மூலதனம் பெருகி
நிற்பதால் பெண்கள் ஆண்களைச் சார்ந்து வாழ்ந்தனர். கணவன் இறந்த பின்பு
அச்சொத்துக்கு வாரிசுரிமை பெண்களுக்கு இல்லையென்றாலும் வயிற்றுக்குப்
பிரச்சினையில்லை. விதிவிலக்காக சில தனிநபர்களுக்கு தொழிலில் நசிவு ஏற்படலாம் ஆனால், அச்சமூகத்திற்கு
ஒட்டு மொத்தமான வாழ்வியல் நெருக்கடியில்லை. சத்திரியர்கள் ராஜாக்களாகவும் படை
வீரர்களாகவுமிருப்பதால் அனைவரும் ராஜ உத்தியோகத்திற்கு கீழ் வந்துவிடுகிறார்கள்.
பார்ப்பனர்களின் தொழில் வேதம் படித்தல், வேதம்
ஓதுதல், யாகம்
வளர்த்தல் கருமாதி திதி நாள் நட்சத்திரம் பார்த்தல், பிச்சை
எடுத்தல். தென்னிந்தியாவில்தான் பழமையான கோயில்கள் அதிகமிருக்கிறன்றன. வட
இந்தியாவில் ரிஷிகேஷ், காசி போன்ற ஒருசில இடங்களில்தான் இந்துக்
கோயில்கள் சார்ந்த பார்ப்பனர்களின் வாழ்வாதாரம். அரண்மனையில் ராஜகுருக்களும்
அவர்களின் சீடர்களுமாய் கொஞ்சம்பேர் வாழ்க்கை நடத்த வாய்ப்பிருந்திருக்கும்.
மிகுதி தொண்ணூறு சத பார்ப்பனர்கள் மூன்று வர்ணத்தாருக்கு ஊழியம் செய்து கல்யாணம், கருமாதி, திதியில்
கூலியாக பெற்ற உடை, பண்ட பாத்திரம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின்
தயவால் வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்கள். பிரமன் தலையில் பிறந்து பிச்சை எடுப்பதே
குலத்தொழிலாக வரித்துக்கொண்ட ஆண்கள், இவ்வாண்களை நம்பி படிதாண்டாத இவர்கள் வீட்டுப்
பெண்கள்.
பார்ப்பனர்களுக்குப் பிற சமூகங்களைப் போல் வேர்வை சிந்தும் கடும்
உழைப்பின்மையால் நோய்மையான பூஞ்சை உடல், ஊட்டச்சத்து குறைபாடு, எதிர்ப்புச்
சக்தியற்ற குழந்தைகளின் இளவயது இறப்பு, இதன்வழி இளம் வயது விதவைகளும் பெருகியுள்ளனர்.
நிர்கதியான பெண்களைப் பாலியல் வகையில் அடிமைப்படும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பார்ப்பனப் பெண்கள் பார்ப்பன ஆண்கள் செய்யும் எந்தத் தொழிலையும் செய்ய முடியாது, வீட்டை
விட்டு வெளியே செல்ல முடியாதென பெண்களின் உயிர்வாழும் உரிமையை வாழ்வாதாரத்தை
முடக்கிய பின் அவர்களின் உடல் பாலியல்
சுரண்டலுக்கு தின்னக் கொடுத்து உயிர்வாழும்
காரணியாக மாற்றியது பார்ப்பனியம்.
அதில் வம்சத் துய்மை பற்றிய சிக்கலும்
எழுகிறது. கணவன் இறந்த பிறகும் கூட விபச்சாரம் செய்யக்கூடாதென பெண்களை எச்சரிப்பது
குழப்பமான நிலையை காட்டுகிறது. விபச்சாரம் மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகத்
தொடர்ந்து மநு குறிப்பிடுகிறான். கணவன் கெட்டவனாக ஸ்திரீ லோலனாக நற்குணமில்லாதவனாக
இருந்தாலும் பெண்கள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்கிறது மநு (மநு, 151). இதன் உள்ளர்த்தம் கணவன் தன் மனைவிக்கு உணவளிக்க மறுத்தாலும்
பெண் பட்டினிகிடந்து சாக வேண்டும், வேலைக்கும் செல்லக்கூடாது விபச்சாரமும் செய்யக்
கூடாது என்பது. சமூகத்தில் ரகசியமாக ஈடுபடக்கூடிய செயலும் அதன் பொருளீட்டுதலும்
பாலியல் சார்ந்தே இங்கு பெண்களுக்கு சாத்தியமென்பதும் அதை ஒருபுறம் சமூகத்தில்
மறைமுகமாக அங்கீகரித்தபடி பொதுவெளியில் எதிர்த்தபடி பெண்களுக்கு விபச்சாரம் மட்டும்தான்
ஒரே வாய்ப்பு எனத் தொடர்ந்து சொல்கிறது மநு. பார்ப்பனச் சமூகத்துப் பெண்கள்
சத்திரிய, வைசிய
ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கு அதிகம் உள்ளானதின் ஆவணமாக மநு உள்ளது. பருவமடையும்
முன்னே பெண் களுக்குத் திருமணம் செய்வது கட்டாயமாக்கப்பட்டிருந்ததையும் இங்கு உறவுபடுத்திப்
பார்க்கலாம்.
இதை மட்டும் மநு சொல்லியிருக்கவில்லை. மநு என்னும் வேதகால கொள்ளைக்
கூட்டத்துத் தலைவனின் “பைலா” என்னவெனக் கொஞ்சம் பார்த்துவிடலாம். பிற
மூவர்ணத்தாரும் பட்டினி கிடந்தாலும் பார்ப்பானுக்குத் தானம் கொடுத்துவிட வேண்டும்.
பார்ப்பானுக்குச் சோறு போடாமல் பட்டினி போட்டால் ஏழு தலைமுறைக்கும் சாபம்
பீடிக்கும், வாரிசின்றி
வம்சம் அழியுமென சாபம் கொடுத்து மிரட்டுகிறான். வங்கத்தில் 1943-ல் 30
லட்சம் மக்களை வங்கப் பஞ்சம் கொன்ற கதையை சத்தியஜித் ரேவின் (Distant Thunder1973) திரைப்படத்தில் கேட்கலாம். ஊரே உணவில்லாமல் கொடும்
பஞ்சத்தில் மடிந்து கொண்டிருக்க ஒரு காட்சியில் உணவு கிடைக்காமல் பார்ப்பனனான
கதாநாயகன் கங்காசரண் சக்ரவர்த்தி தானியம் தானம் கேட்கப் பக்கத்து ஊர் வியாபாரியைத்
தேடிப் போகிறான். அவ்வூரில் உணவின்றி
மக்கள் கூட்டம் கூட்டமாகச் செத்துக் கொண்டிருப்பார்கள். ஊர் உறவுகளுக்கு
யாருக்கும் தானியத்தை விலைக்கோ கடனுக்கோ தராமல் குடும்பத்துக்காக மட்டுமே பதுக்கி
வைத்திருப்பான் அவ்வியபாரி. தன்னிடம் தானிய மில்லையென கங்காசரணை துரத்திவிடும்
வியாபாரி அவன் கொஞ்சம் தூரம் சென்றதும் பிராமண சாபம் நினைவுக்கு வர கங்காசரணை
கூப்பிட்டு ஊருக்கு வெளியே ஒளிந்திருக்குமாறு சொல்லி பின்பு ரகசியமாக தானியத்தை
எடுத்துப்போய் தானமாய் கொடுக்கிறான். பால், நெய், பருப்பு, பாதாம்
போன்ற நல்ல உணவுகள் நல்லாடைகள் எல்லாம் பார்ப்பானுக்குச் சொந்தம். பிறர் நல்ல உணவு
உண்ணவோ உடுத்தவோ கூடாதென மநு சொல்வதையும் இன்றைய மாட்டிறைச்சி, உணவு
அரசியலுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.
இதன் பெயர் பகல் கொள்ளை. சத்திரத்தில், மண்டபத்தில், கோயில்
வாசலில் காலாட்டிக் கொண்டிருக்கும் பார்ப்பானுக்கு உழைத்துச் சம்பாரித்த பொருளை
கப்பம் கட்ட சொல்லிக் கட்டாயப்படுத்தும் மநுவை தமிழ் சினிமா காட்டும் கழுத்தில்
கர்சீப் கட்டிக்கொண்டு கத்தியைக் காட்டி மிரட்டும் எந்த பிச்சுவா மணி
பாத்திரத்திலும் பொருத்திப் பார்க்கலாம். இன்று குற்றப் பரம்பரை சட்டமிருந்தால்
காவல்நிலையம் முன்னால் தூங்கி எழுந்து தினமும் கையெழுத்துப் போடவேண்டிய ஆசாமி இந்த
மநு. இதுவரை உலகில் உருவான சமூகத் தலைவர்கள் மதத்தலைவர்கள் தன் சமூகத்துக்கு உழைத்து
மரியாதையுடன் வாழச் சொல்லித் தந்திருக்கிறார்கள் (பொதுக் கண்ணோட்டத்தில்).
பார்ப்பனக் குலத்துக்குத் தலைவனென சொல்லப்படும் மநு தன் குல மக்களை அடுத்தவனிடம்
இருப்பதெல்லாம் உன் பொருள்தான் நீ தாராளமாகப் பிடுங்கிச் சாப்பிடலாமென்று சொல்பவன்
எப்படி ஒட்டு மொத்த மனிதகுலத்துக்கு நீதியைச் சொல்பவனாக இருக்க முடியும். உலகில்
தோன்றிய முதல் வேதகால கார்ப்ரேட் பாசிஸ்ட் இந்த மநு.
பிறப்பால் ஏற்றத்தாழ்வு, உயர்ந்தவர் தாழ்ந்தவர், தீண்டப்படுபவர்
தீண்டப்படாதவர் வர்ணம் அவர்ணம், எஜமான் அடிமை தீட்டு கற்பு பெண் ஒடுக்குமுறை
கற்பிக்கும் மநுவின் பாசிச சிந்தனைகள் வேதகால மரபை பின்பற்றும் சமூகத்துடைய
பிரச்சனைகள். தமிழர்கள் தனித்த சமத்துவ சிந்தனை மரபும் செழுமையான பண்பாடு
உடையவர்களென்று ஆயிரம் சான்றுகள் பகிரப் படுகின்றன. உண்மைதான் என்றாலும் மநுவின்
பாலொடுக்கு முறை, பாலிழிவுக் குரல் மநுவின் காலத்திலோ அல்லது
ஆயிரமாண்டுகள் கழித்து உருவானதென சொல்லப்படும் திருக்குறளிலும் ஒலிக்கிறது.
பிறப்பால் உயர்வு தாழ்வு அநீதி, வாய்மையுடன் வாழுதல், அறமுடமை
பேணல், கல்லாமை
களைதல், பிறர்
பொருள் ஆசை நீங்கி களவாமல் வாழ்தல், புறங்கூறா நேர்மையென திருவள்ளுவர் மநு
திருடனின் சட்டத்தை எதிர்த்துதான் மக்களுக்கு வாழ்வியல் அறத்தைப் போதிக்கிறார்.
ஆனால் பெண்ணுக்கான அறம் என்று வரும்போது அவரிடம் ஆணாதிக்கச் சிந்தனை
வெளிப்படுகிறது.
வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் உள்ள குறள்கள் காட்டும் பெண்கள்:
“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்”
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை”
கற்பை ஏன் பேண வேண்டும் கணவனை ஏன் தொழ வேண்டுமென அன்று மட்டுமல்ல
இன்றும் பெண்களால் கேள்வி எழுப்ப
முடியவில்லை.
பிறனில்
விழையாமை முழுவதும் தமிழர்களின் கூடா ஒழுக்கத்தைப் பற்றிப் பேசுவதன் வழி தமிழ்ச்
சமூகம் பெண்களுக்கு பாலின அடிப்படையில் இழைக்கும் அநீதி, மதிப்பு
வீழ்ச்சியைத் துலக்கமாக அடையாளப்படுத்துகின்றது.
ஆண் தன் மனைவியைத் தொழ வேண்டும், தொண்டூழியம் செய்ய வேண்டும் என அதனால் சொல்ல
முடியவில்லை. அதே போல் கற்பு ஆணுக்கானதாக அதில் குறிக்கப்படவில்லை. பல பெண்களால்
காதலிக்கப்படுதல் ஆணுக்குப் பெருமை என காமத்துப்பால் சொல்கிறது. ஆண் பரத்தையர்
சேருதல் பற்றி பெண் ஊடல்தான் கொள்ளமுடியும் என அழகியலாக மாற்றப்படுகிறது. பிறன்இல்
விழையாமையை ஆணுக்கு மட்டும் வலியுறுத்தாமல் பெண்ணுக்கும் வைத்திருக்கலாம்.
அனைத்திலும் சமத்துவத்தைப் பேண முயலும் வள்ளுவப் பெருந்தகை பெண்கள் பற்றிய
கருத்தில் சிறுந்தகையாளர்களின் குரலைப்
பிரதி செய்கிறார்.
ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இந்நோய்
பொறுக்கலாம் வரைத்து அன்றிப் பெரிதாயின், பொலங்குழாய்
மறுத்து இவ்ஊர் மன்றத்து மடல் ஏறி,
நிறுக்குவென் போல்வல் யான், நீ படு பழியே” (கலித்தொகை: 58)
(யான் ஒறுத்துக்
கூறில் ஒறுப்பது புறத்துப் போதவிட்ட நும்முடைய சுற்றத்தாரை; நின்னையன்று; பின்னை
இக்காமநோய் பொறுக்கலாம் அளவையுடைத்தன்றி மிகுமாயிற் பொன்னாற் செய்த
குழையினையுடையாய்! யான் இங்ஙனம் வருந்துகின்ற நிலைமையைப் போக்கி இவ்வூரின்
மன்றத்தின் கண்ணே மடலையேறி நீ எய்துவதொரு பழியை யான் உனக்கு நிறுத்துவேன் போலே
இராநின்றேன், நீ
அதனை அறி).
அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப்
பெறுகதில் லம்ம யானே பெற்றாங்
கறிகதில் லம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவ னிவனெனப்
பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே. (தொல்கபிலர் - குறுந்தொகை: 14)
தலைவன் தன்னுடைய உருவத்தையும் தலைவியினது உருவத்தையும் எழுதி அமைத்த படத்தைக்
கையில் ஏந்தி, மடன்மாவிலேறி
மறுகிற்செல்வானாதலின், அந்நிலை, இன்னாள்
கணவன் இவன் என்று ஊரினர் அறிதற்கு ஏதுவாயிற்று.
காதலையும் வீரத்தையும் போற்றுபவை சங்க இலக்கியப் பாடல்கள் என்ற
பொதுப்புத்தியை நாம் தொடர்ந்து நமது மறுவாசிப்பு உடைத்து வருகின்றன. மநுவின்
வன்சிந்தனைத் தாக்கத்தால் பெண்களை ஆநிரைபோல் கவர்தல், பொருள்போல்
கவர்தல், அடைய
முயலுதல் பெண் நிராகரிக்கும்போது அவளை அவமதிக்க முயலுதல் போன்ற நிகழ்வுகளைப் பல
பாடல்கள் சுட்டுகின்றன. இவ்விரு பாடல்கள் ஆணின் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணின்
பெயரைச் சொல்லி அவளின் வீதிக்கு வந்து மடலேறி கூவுகிறான் ஒருவன். இருவரின்
உருவத்தையும் வரைந்து கையில் பிடித்தபடி மடலேறுவேன் என மிரட்டுகிறான் ஒருவன். இன்று
இணையத்தில் பெண்ணின் படத்தைப் பதிவேற்றி அவமரியாதை செய்வேனென மிரட்டும் மனநோய்
கூறு சங்க கால நோய்க்கூறெனவும் அது வேதகால மநுவின் எச்சமெனவும் கண்டடையலாம்.
பல சங்கப் பாடல்களில், சைவ வைணவ பக்தி இலக்கியத்தில் பெண்ணுக்கு
கற்புடைமை பரத்தமை இலக்கணம் கற்பிக்கும் மநுவின் பூநூல்கோட்டில் பயணிப்பதை அறிய
இயலும். தம்குலப் பெண்களுக்குத் தீங்கிழைப்பது அநீதியிழைப்பது போதாதென்று
ஆழ்வார்களும் சைவக் குரவர்களும் மாற்றுமதப் பெண்களை வன்புணர வரம் வேண்டி கடவுளிடம்
இஞ்சுகிறார்கள். வாழத் தகுதியற்ற மனிதர்களுக்கான இறைவனின் பெயரால் உருவாக்கப்
பட்ட சமயம் சடங்கு எப்படி பெண்களின் நலனுக்கான தாய் அமையும். இதை உணர ஒருவருக்கு
பகுத்தறிவு அவசியமில்லை மனித நேயமிருந்தாலே சமயங்கள் அடிப்படையிலேயே பெண்களுக்கு
எதிரானவையெனத் துலங்கும். இந்து மதமும் அதன் சமயக் கலாச்சாரமும் அதன் விதிகளும்
பெண் பாலினத்தைக் கீழ்நிலையாக்கும், வன்முறைக் களனாக்கும், அவமதிக்கும்
சீரழிவுக் கலாச்சாரப் பிற்போக்குப் பாடத்தைத்தான் உயர்ந்த நீதிநெறியென போதித்துக்
கொண்டிருக்கின்றன.
திருஞான சம்பந்தரின் இந்த ஒரு பாடல் போதும் பக்தி நெறியின் ஒழுக்கம் பற்றி
அறிய:
“மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவாலவாயாய் அருள்
பெண்ணகத்து எழில் சாக்கியப் பேய்அமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே”
வைணவ, சைவ
மரபை அறுத்து மாற்று மரபென உருவான சித்தர் மரபிலும் மநுவின் பெண் வெறுப்பு விசத்தை
ஆங்காங்கே தூவி தங்கள் ஆண் புழுவுடல் பிறவியை மேன்மையாக்கிச் சித்தி யடையப்
பாடுகிறார்கள்.
“எத்தனை பேர் நட்ட குழி யெத்தனை பேர் தொட்ட முலை
யெத்தனை பேர் பற்றியிழுத்தவிதழ் - நித்தம் நித்தம்
பொய்யடா பேசும் புவியின் மடமாதரை விட்டு
உய்யடா வுய்யடா வுய்.” (பட்டினத்தார்)
பத்தினிப் பெண் கேட்டு தனது பரம்பரையைத் தொடரும் பாரதி நவீன இலக்கியத்தில்
ஆடம்பரமாக பெண்களைப் புனிதப்படுத்தி கையிலொரு சூலத்தையும் கொடுத்து கொஞ்சம்
மெல்லக் கொல்லும் நஞ்சையும் மனித நாவில் தேய்க்கிறார். நவீன சுதந்திர சமத்துவ
உணர்ச்சியில் திரண்டு வரும் மனத்தில் ஒரு துளி நஞ்சை அக்கினிக் குஞ்சுசென
வைத்தாகிவிட்டது. அது அனைத்துத் தமிழ் மனங்களிலும் பெண் என்றவுடன் புகையத்
தொடக்கிவிடுகிறது. புதுமைப் பெண்ணென நோக்கும் போதே அவர்கள் பார்வையிலேயே நாம்
தீக்குளித்தெழ வேண்டியிருக்கிறது.
கற்பு, பத்தினி
என்னும் மநுவின் புதைகுழிக்குள்ளிருந்து எழும் எந்த நவீன கதைகளும் கவிதைகளும் அதன்
கருத்துருவாக்கமும் மூவாயிரமாண்டுக்கு முன் எழுதிய மநு “பைலாவின்” அடுத்தப்
பக்கங்களாகி விடுன்றன. அச்சு ஊடகப் பரப்பின் சலனமுறும் உடலாக உருவாகிய தமிழ்த் திரைமொழிக்குள்ளும்
பெண் குருதி குடிக்கும் கற்பு பத்தினி என்னும் ட்ராகுலாக்கள் பிரமாண்டமாக
உலவுகின்றன. இவை பெண்ணைப் புனிதக் கருத்துருவாக்கச் சட்டகத்துக்குள்
செல்லுலாய்டிலும் தற்போது டிஜிட்டலிலும் சிறைப்பிடித்து வைத்திருக்கின்றன.
செம்மொழித் தமிழன், சமயத் தமிழன், கலகத்
தமிழன், நவீனத்
தமிழன், திரைத்
தமிழனின் மரபு மனநோய் கூறுகளைப் பார்த்தோம். மின்னணு சமூக ஊடகங்கள், கடந்த
காலத்து குட்டிச்சுவர், திண்ணை டீக்கடை பெஞ்சு டாஸ்மாக் அந்த உரையாடல்களுக்கு முகம் உடல் கிடையாது, வெறும் குரல் மட்டுமே. அக்குரல் ஒவ்வொரு
பெண்ணின் யோனி வழியேதான் பிறந்தது. விஞ்ஞான டிஜிட்டல் உலகில் பிரதி உள்ளேயும்
வெளியேயும் நவீன முதிய, குஞ்சு இலக்கியத் தமிழனின் பெண் வெறுப்பு
பெண்ணிழிவு பாலிழிவு மனநோய் வெளிப்பாட்டையும் சற்று பார்க்கலாம்.
“உலக
அழகின்றானுவோ ஐஸ்வரியா ராயை அந்த மைதானத்தை” ”ராதிகா ஆப்தேவை கழுத்துக்குக் கீழ
பாக்க முடியாது” “இந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு எழுத வந்துட்ட இது ஒரு மேடையில்.
வேறொரு மேடையில் இவர் அழகிய கவிஞரும் கூட” “என் கவிதைக்கு வாசித்தது வன்மம் அல்ல.
ஒரு ஆபாச நடனம்.” “ஆல் பர்பஸ் அங்கிள்--------- ஆந்திராவில் கிழவிகளை ரேப் பண்ண
கேசில் கைது செய்ய ஆளைத் தேடுகிறார்களாம்” “ரயிலில் என் எதிரே வடமாநில பிகரையும்
சிரித்து கும்மாளம் போடும் இளைஞர்களையும் பார்த்து செம கடுப்பிலிருக்கேன்”
“பெண்களுடன் டேட்டிங் பண்ணவே முகநூலுக்கு வரேன்” (அதுக்கு டேட்டிங் சைட் இருக்கே)
சராசரித் தமிழனும் பாலிழிவு மரபணு நோய்க்கூறை மிக பெருமையாகவே முன்
வைக்கிறான். ஒரு ஓய்வுபெற்ற பள்ளி முதல்வரின் பதிவும் இதில் ஒன்றாக
அடங்கியிருக்கிறது. அவரின் முகநூல் பக்கம் சென்று பார்த்தேன் பேத்தி பேரனுடன்
கொஞ்சிக் கொண்டிருந்தார்.
“ஆவின்
பாலுக்கும்... அமலா பாலுக்கும் என்ன வித்தியாசம்...?????
ஆவின் பால் பாக்கெட்டின் உள்ளே இருக்கும்..
அமலா பால்...ஜாக்கெட்டின் உள்ளே இருக்கும்..!!!”
“அமலா பால் விலை
உயர்வு! மன்னிக்கவும், ஆவின் பால் விலை உயர்வு!”
“ஜெர்சிபால்
இருக்குங்றான் ஆரோக்கியா பால் இருக்குங்குறான் ஆவின் பால் இருக்குங்குறான். எல்லா
பாலும் இருக்குங்குறான். அமலா பால் மட்டும் இல்லங்கிறான்.. அமலா பால் விஜய்க்கே
கிடைக்கலங்கிறான்..”
“ஆவின் பால்
வாங்க கடைத்தெரு பக்கம் போவாத பயலுவ... நஞ்சி போன அமலா பாலுக்காக வெயிலில் காத்து
கெடக்கானுவ”
“அமலா பாலே
வாங்கிடலாம் போல ஆவின் பால் விக்கும் விலைக்கு”
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைச் சமூகத்தின் தற்செயல் விபத்தாக நாம்
கடக்கப் பழக்கிவிட்ட போதும் சில சம்பவங்கள் அதன் கொடூரத்தைப் பொருத்தும் சமூகச்
சாதி அந்தஸ்த்தை பொருத்தும் நாடு தழுவிய மாநிலம் தழுவிய பொது விவாதங்களைப்
போராட்டங்களை கிளப்பிவிட்டு அடங்கும். அச்சமயத்தில் மட்டும் தன்வீட்டுப் பெண்களின்
பாதுகாப்பு குறித்து அச்சப்படும் இக்கொடுமைகளுக்கு நீதிக் கேட்டு எழும் எல்லா
ஆண்களும் மொழியில் பெண்களைக் குற்றவுணர்வற்று தன் மானமற்று தினம் தினம் ரேப்
செய்யும் நடத்தையியலைக் குறித்து சுயவிசாரணை சுயமதிப்பீட்டுக்கு உட்படுத்திக்
கொள்வதில்லை. பொதுவாக பெண்களும் இவை ஆணின் ரசிக்கத்தக்க இயல்பெனக் கடக்கப் பழகுகிறோம் அல்லது சுட்டிக்காட்டாமல்
தவிர்த்து “குட் கேர்ள்” பிம்பத்தைக் காக்க அவர்களின் வசனத்துக்கு முன்னேயே
சிரிக்க கைகுலுக்கப் பழகுகிறோம்.
பாலிழிவு இழிசிந்தனை மரபை எழுத்தில் பேச்சில் தனது அடையாளமாகச் சூடி மகிழும் கூட்டு உளவியல் அடிமைச் சமூகத்தை மட்டுமே உற்பத்தி செய்யும். மொழி என்பது வெறும் வார்த்தையில்லை அது அறவியல், தனிமனித மனதை ஆளும் அறிவியல். இந்த அறிவியல் அதிகாரமிக்க ஆண்மனதின் கூட்டு மனசாட்சியாக இயங்கும்போது அதிகாரப் படிநிலையில் கீழ்நிறுத்தப்பட்ட பெண்கள் சிறார்கள் மீதான பாலியல் வன்முறைகளை, கொலைகளை உற்பத்தி செய்கிறது. பாகுபாடற்ற தீண்டாமையற்ற பாலிழிவற்ற மொழியை உருவாக்கிப் பேச கற்க கற்பிக்க சிந்திக்க எழுதப் பழகுவதன் வழி கருத்துச் சுதந்திரத்தை சமூக விடுதலையை உறுதிப்படுத்தலாம்.