-->

அண்மை

பொழப்பு - சியாமல்குமார் பிரமாணிக் (வங்கத்திலிருந்து தமிழில் ஞா. சத்தீஸ்வரன்)

பொழப்பு - சியாமல்குமார் பிரமாணிக்

இப்போது தை மாதம். அறுவடைக்காலம். காலைவேளையில், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வானத்தில் வெள்ளைக் கொக்குகள் கூட்டமாகப் பறக்கின்றன; ஆற்றைக் கடந்து, வயல்வெளிகள், வனங்களைத் தாண்டி, சிமுல்பூருக்கு அருகில் உள்ள பெரிய ஏரியை நோக்கி. ஒருவேளை கொக்குகள் தங்கள் இரையைத் தேடி, மீன்களைத் தேடி அந்த ஏரிக்குச் செல்லலாம். தீனநாத் நாள்தோறும் காலையில் பொழுதுவிடிந்ததும் வயலுக்கு அருகில் நின்றபடி அந்தக் கொக்குகள் பறந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருப்பார். அந்தக் கொக்குகளைப்போல தனக்கும் இரண்டு சிறகுகள் இருந்தால், தானும் அந்தக் கொக்குகளுடன் பறந்து சென்றிருக்கலாம் என்று சிந்திப்பார். அப்படி இருந்திருந்தால் இங்கே இப்படி கேன் சௌதுரிக்குப் பண்ணையடிமையாக உழைக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

 “தாயோளி, பன்னிக்குப் பிறந்தவன், ஒரு முழு பிசாசு. இவ்வளவு நிலபுலம் இருந்தாலும் அவன் கையிலிருந்து ஒரு பிடி தானியம், ஏன் ஒத்த பைசா கூட கசியாது.

ஏய் முட்டாப்பயலே, இங்க நின்னுட்டு என்ன செய்ற?”

தீனநாத் வரப்பில் நின்றுகொண்டு கொக்குகள் பறந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ​​நகேன் சௌதுரி கூச்சலிடும் சத்தம் கேட்டது. அறுவடையின்போது தனது பண்ணையின் தினக்கூலியான தீனநாத்ரப்பில் நின்றுகொண்டு பறக்கும் கொக்குகளை வேடிக்கைப் பார்ப்பதைக் கண்டு அவருக்குச் சகிக்கவில்லை. இந்தத் தாயோளி தீநாத் போன்ற கீழ்ச்சாதிப்பயல்கள் வேலை செய்வதிலிருந்து தப்பிப்பதற்காக இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நகேன் சௌதுரிக்குத் தோன்றியது. அவர்கள் மனதிலும் ஆசாபாசம் விருப்புவெறுப்பு இருக்குமென்று அவரால் யோசிக்கக்கூட முடியவில்லை.

“இங்க நின்னு என்னத்த கெடுக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்க?”

 நகேன் சௌதுரி தீனநாத்திடம் கேட்கிறார்.

“கெடுதல் நினைக்கிறேன்னு ஏன் சொல்றீங்க ஆண்டை? நீங்கள் சோறு போடும் எசமான், நான் உங்க அடிமை.”

தீனநாத்தின் பணிவான வார்த்தைகளால் மேலும் கோபமடைந்தார் கேன் சௌதுரி.

“இதையெல்லாம் சொல்லி இனிமெ தப்பிக்க முடியாது. இப்போதுதான் கீழ்ச்சாதி, மேல்சாதி பிராமணர்கள், சூத்திரர்கள் எல்லாரும் சமம். இதெல்லாம் இந்திய அரசியலமைப்பு சட்டத்துலயே எழுதப்பட்டிருக்கு. உங்களுக்கும் எங்களுக்கும் இனி எந்த வித்தியாசமும் இல்லை.

நகேன் சௌதுரியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தீனநாத், “இது என்ன பேச்சு? அரசியலமைப்பில் இதெல்லாமா உள்ளது! சாதியும் மதமும் தெய்வத்தால் படைக்கப்பட்டவை. இதைப் பற்றி யாரும் எதுவும் சொல்ல முடியாது” என்றார் மெதுவாக.

கேன் சௌதுரி தீனநாத்தின் முகத்தைப் பார்த்துச் சொன்னார் – “நீ முந்நூறு ரூபாய் கடன் வாங்கி இரண்டு வருசம் ஆச்சு. வட்டி செலுத்தக் காணோம். இரண்டு நாட்கள் பண்ணையில் வேலை செய்தால் பணம் கொடுங்க, பச்சைப்புள்ளைங்க சாப்பிடாம இருக்காங்கன்னு கெஞ்சுவ. ஏதோ நான் நல்ல மனுசனா இருக்குறதால உனக்குப் பணம் தருகிறேன், ஆனால், கீழ்ச்சாதிப் பயலுகளுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாதுங்குறது எனக்கு இப்பத்தான் புரியுது.”

ஐயா, நான் உங்கப் பண்ணைல வேலை செய்கிறேன். கூலியிலிருந்து புடிச்சிக்கங்க. கடன் அடஞ்சிரும். இவ்வளவு நாளும் நீங்கக் கூலியில புடிச்சிக்கலையா என்ன?”

கேன் சௌதுரிக்கு இப்போது கடுமையான கோபம் வந்தது. “ஏ தேவடியா மகனே, நீ என்னைப் பொய் பேசுறவன்னு சொல்றியா! கடனையும் வாங்கிட்டு இப்ப என்னையே திருடன்னு சொல்றியா!”

இல்ல எசமான், நீங்க என் ஆண்டை”

சொல்லிவிட்டு தீன்நாத் நகேன் சௌதுரியின் வயலில் கதிரறுக்கச் செல்கிறார். இன்னும் பல விவசாயக் கூலிகள் நகேன் சௌதுரியின் வயலில் அறுவடைக்கு வந்திருந்தனர்.

செக்கச் சிவந்த தகிப்புடன் வானத்தில் சூரியன் உதிக்கிறது. இந்தக் குளிர்காலத்திலும் சம்சாரிகளின் உடம்பில் வியர்வை வேர்த்துக் கொட்டுகிறது. அவர்கள் முதுகை வளைத்து குனிந்தபடி நெல்லறுக்கின்றனர்.

சூரியன் தலைக்கு மேலே வருகிறது. கதிரறுத்துக் கொண்டிருந்தவர்கள் மதிய உணவுக்காக அவரவர் வீட்டை நோக்கிச் செல்கின்றனர். தீனநாத் வயல் வரப்பிலேயே உட்கார்ந்திருக்கிறார். அவர் வீட்டுக்குப் போவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரது மகன் ரவி செத்துப்போனான். சரியாகச் சாப்பிடாமல் சத்தில்லாமல் அவனுக்குச் சீக்கு வந்துவிட்டது. மருத்துவச் செலவு செய்யும் அளவுக்குத் தெம்பு எங்கே இருக்கிறது தீனநாத்திடம்! நகேன் சௌதுரியிடம் சென்று அவர் கையைக் காலைப் பிடித்துக் கெஞ்சினார் தீனநாத். நகேன் சௌதுரி அவமானப்படுத்தி மீண்டும் மீண்டும் திட்டி அனுப்பிய பிறகு என்ன நினைத்தாரோ கடைசியாக முந்நூறு ரூபாய் கடனாகக் கொடுத்தார். அந்தப் பணத்துக்குப்போது எவ்வளவு வட்டி ஆகிவிட்டது என்பது யாருக்குத் தெரியும்! தீனநாத்துக்கு இவ்வளவெல்லாம் கணக்குத் தெரியாது. நகேன் சௌதுரி பணம் கொடுக்கும்போது ஒரு காகிதத்தில் எதையோ எழுதி தீனநாத்திடம் கைநாட்டும் வாங்கிக்கொண்டார். படிப்பறிவில்லாத தீனநாத்துக்கு அது எதுவும் விளங்கவில்லை.

தனது பேரன் ஜெயராமை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பது  தீனநாத்துக்குக் கனவாக இருந்தது. நன்றாகப் படித்து அவர்களை அடிமைச் சங்கிலியிலிருந்து அவன் விடுவிப்பான். காலங்காலமாக அவர்களைச் சுரண்டவும் ஒடுக்கவும் நகேன் சௌதுரி போன்றோர் அநியாயமும் அநீதியுமான சுமைகளை அவர்கள் மீது ஏற்றிவைத்துள்ளனர். கீழ்ச்சாதியினரான தங்களுக்கு இழைக்கப்படும் ஆயிரமாயிரம் அநீதிகளை எதிர்த்துநிற்க வேண்டுமென சில சமயங்களில் அவருக்குத் தோன்றும். வாழ்நாள் முழுக்க அவர்களது கருணையினால் வாழ்வதை அவர் வெறுத்தார்.

 திடீரென்று தீனநாத்துக்குக் கடுமையாகத் தலை வலிப்பதுபோல் இருந்தது. தலை சுற்றியது. பார்வை மங்கியது. நேற்று மாலை அவர் சாப்பிடவில்லை. தீனநாத் இந்த வாரம் முழுவதும்கேன் சௌதுரியின் நிலத்தில் வேலை செய்தார். ஆனால் நகேன் சௌதுரி, தீனநாத்துக்குக் கூலி கொடுக்கவில்லை.

பார் தீனநாத், நீ எனக்குக் கடனை அடைத்தாகனும். நீ கடன் வாங்கி இரண்டு வருசம் ஆகிறது. இப்போது அறுவடைக் காலம். நீ எனது நிலத்தில் வேலை செய். இம்முறை எனது கடனை அடைத்துவிடு” என்றார் நகேன் சௌதுரி. “ஐயா, எனது கூலியிலிருந்து கொஞ்சம் பணத்தைப் புடிச்சிக்கங்க. மொத்தக் கூலியையும் புடிச்சுக்கிட்டா நாங்க எப்படி சாப்பிட்றது?” என்று கேட்டான் தீனநாத்.

“எனக்கு அதெல்லாம் தெரியாது. இதெல்லாம் கீழ்ச்சாதிக்காரன் பிரச்சன. வாங்கின கடன இனி வேறு எந்த வகையிலும் நீ திருப்பித்தர மாட்ட.”

உண்மையில், தெற்கு வங்காளத்தின் இந்தத் தொலைதூரப் பகுதியில், ஒரு முறை இந்தக் கனவான்களிடமிருந்து கடன் வாங்கிவிட்டால், தை ஒருபோதும்  திருப்பிக் கொடுத்து கடனை அடைக்க முடியாது. அசல் தொகையைவிட வட்டி பன்மடங்கு கூடிக்கொண்டே போகிறது. படிப்பறிவில்லாத ஏழை மக்கள் இங்கு மிகவும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். வெள்ளாமை செய்ய நிலம் இல்லாத அத்துக்கூலிகளின் கொஞ்சநஞ்ச சம்பளமும் கூட இந்த வட்டி கட்டுவதிலேயே காணாமல் போய்விடுகிறது.

தீனநாத்,கேன் சௌதுரியின் வயல் வரப்பிலிருந்து மெல்லமெல்ல எழுந்து நின்றார். வீட்டை நோக்கி ஒவ்வொரு அடியாக நடந்தார். வீட்டுக்கு வந்ததும், அவர் முற்றத்தில் இருந்த மூங்கில் தூரில் உட்கார்ந்துவிட்டார்.

தீனநாத்தின் மருமகள் நிவாராணி வீட்டு முற்றத்தில் இருந்த கொடிப்பசலைக்கு மூங்கில் குச்சிகளைக் கொண்டு வேலி கட்டிக் கொண்டிருந்தாள். ஜெயராம் பள்ளிக்கூடம் போயிருக்கிறான்.

அப்பா, உங்களுக்கு உடம்பு சரியில்லையா? மதியம் வேலைக்குப் போக வேண்டாம். வீட்டில் கொஞ்சம் போல சோறு இருக்கு, வள்ளக்கீரை இருக்கு, போட்டுக் கொடுக்கிறேன், சாப்பிடுங்க” என்றாள் நிவாராணி.

தீனநாத் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. எப்படியோ உடம்பை இழுத்துக்கொண்டு போய் கை-கால், முகத்தைக் கழுவிவிட்டு, மருமகள் சாப்பிடக் கொடுத்த கொஞ்சம் சோற்றையும் வள்ளக்கீரையையும் சாப்பிட்டு முடித்தார். நிவாராணி அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவரது வயிற்றில் இன்னும் பசி இருக்கிறது. ஆனால், சட்டியில் சோறு இல்லை. தீனநாத் நிவாராணியின் முகத்தைப் பார்த்தார்.

உடம்பு சரியில்லை. பாயை விரித்துப் போடு. படுத்துக்கிறேன்.”

நிவாராணி பாயை விரித்துப் போடுகிறாள். தீனநாத் படுத்துக்கொண்டார். தளர்ந்த, நோயுற்ற தனது உடலை அந்தப் பாயில் கிடத்திக்கொண்டார்.

ன் மாமியார் எங்கே?”

அம்மா காட்டுக்கீரை பறிச்சிட்டு வரப் போயிருக்காங்க”

இப்பகுதியில் உள்ள சதுப்புநிலக் காடுகளில் எத்தனை வகையான காட்டுக் கீரைகள் கிடைக்கின்றன. ராம்பூர் கிராமத்தின் இந்த பாக்திபாராவில் எத்தனை மனிதர்கள் கஷ்ட காலத்தில் தங்கள் வீடுகளில் சோறோ, ரொட்டியோ கிடைக்காதபோது சதுப்பு நிலக் காடுகளின் இலைதழைகளை வேகவைத்து தின்று உயிர் வாழ்கிறார்கள்.

தீனநாத்தின் நெஞ்சுக்குள் ஒரு சோகம் திரண்டு எழுந்தது. அவரது மகன் ரவி உயிருடன் இருந்திருந்தால், குடும்பத்தில் இவ்வளவு துன்பதுயரங்கள் இருந்திருக்காது. குடும்பத்தினர் அனைவரும் உயிர் வாழ்வதற்கான இரண்டு கைப்பிடி அரிசியை அவனே சம்பாதித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும். இந்தக் கிராமத்தில் மக்களுக்கு வேலை ஏது? பருவமழை காலத்தில் விதைக்கும்போதும் குளிர்காலத்தில் வயலில் நெல் அறுவடை செய்யும்போதும் கொஞ்சம் வேலை கிடைக்கும். கிராமத்தில் உள்ள தீனநாத் போன்ற கீழ்ச்சாதி பாக்திகளுக்குச் சொந்தமாக விவசாய நிலமும்கூட இல்லை.

அன்று மதியம் தீனநாத்,கேன் சௌதுரியின் நிலத்தில் பண்ணை வேலைக்குச் செல்ல முடியவில்லை. உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே படுத்துக் கிடந்தார். தீனநாத்தின் பேரன் ஜெயராம் சீக்கிரமே பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பிவிட்டான். பள்ளியிலிருந்து திரும்பியதும், தாத்தா படுக்கையில் கிடப்பதைப் பார்த்து,

தாத்தா, உங்களுக்கு உடம்பு சரியில்லை. வேலைக்குப் போகாமல் இருந்ததே நல்லது. நான் போறேன் வேலைக்கு” என்றான் ஜெயராம்.

இல்லை, இல்லை, அது எப்படி? உனக்குப் பதினாலு வயசுதான் ஆகுது.

“இருந்தால் என்ன, என்னால் நன்றாக வேலை செய்ய முடியும்.

மறுநாள் ஜெயராம், நகென் சௌதுரியின் நிலத்திற்கு விவசாய வேலைக்காகச் சென்றான். நகென் சௌதுரியின் நிலத்திற்குச் சென்றபோது, மற்ற விவசாயக் கூலிகள் முன்னமே வேலைக்கு வந்துவிட்டதைப் பார்த்தான். நகென் சௌதுரி தலையில் குடையுடன் அங்கே நின்றிருந்தார். ஜெயராமைப் பார்த்து,

எல்லாரும் இதைப் பாருங்க. தீனநாத் வேலைக்கு வரவில்லை, ஆகவே மைனர் பேரனை வேலைக்கு அனுப்பி இருக்காரு” என்றார் நகேன் சௌதுரி.

தாத்தாவுக்கு உடம்பு ரொம்ப மோசமா இருக்கு. என்னை வேலைக்கு எடுத்துக்குங்க.”

“இத்துனூண்டு பொடிப்பய. என்ன வேலை செய்வ நீ? திருட்டுப்பசங்கக் கூட்டம். எப்போவும் ஏமாத்தும் சூழ்ச்சி.

மழைக்காலம் முடிந்துவிட்டது. மழைக்கால வெள்ளாமையும் முடிந்துவிட்டது. ராம்பூர் கிராமத்தின் பாக்திகளின் வீடுகள்தோறும் வறுமை. வறுமை துரத்தியதில் பலர் வேலை தேடி நகரத்துக்குச் செல்கின்றனர். தீனநாத்தால் இனி வேலை தேடி வேறு எங்கும் செல்ல முடியாது. போன மழைக்காலத்தில் நோய்வாய்ப்பட்டு படுத்ததுதான், அதிலிருந்து இன்னும் எழுந்திருக்க முடியவில்லை. எழுந்து நிற்கப்போனால் தலை முதல் கால் வரை ஆட்டம் காண்கிறது. பார்வை மங்கிவிட்டது. தீனநாத்தின் நெஞ்சுப் படபடப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர் மனைவி ஷைவ்யா வெள்ளாட்டுப் பாலைச் சூடாக்கிக் குடிக்க வைக்கிறார். ஆனாலும் தீனநாத்துக்குக் குணமடையவில்லை.

ஒருசில நாட்களில் ஜெயராம் பள்ளிக்குப் போக முடிவதில்லை. வேலை தேடி அங்கும் இங்கும் அலைகிறான். ஒரு நாள் ஜெயராம் நகென் சௌதுரியின் வீட்டுக்கே போனான். அன்று சௌதுரி வீட்டில் லட்சுமி பூஜை. புரோகிதர் வந்திருந்தார். ஜெயராம் சௌதுரியின் வீட்டுக்கு வெளியே ஒரு புளியமரத்தின் அருகே நின்று கொண்டிருந்தான். அங்கே அவனைப் போலவே பாக்திபாராவின் இன்னும் பல பிள்ளைகள் லட்சுமி பூஜையின் பிரசாதத்தைப் பெறுவதற்காக அங்கே நின்றிருந்தார்கள். சௌதுரியின் வீட்டிற்குள் அவர்கள் போக முடியாது.

பிராமணப் புரோகிதரிடம் நகென் சௌதுரியின் மனைவி சொல்கிறார்,

நீங்களே பார்க்கிறீர்கள்தானே, எம்புட்டு கீழ்ச்சாதிப் பயபுள்ளைங்க வீட்டுக்கு வெளியே கும்பல் கூடி நிக்கிறாங்க. சடங்கு சம்பிரதாயம், பூஜைன்னு எதையும் நிம்மதியா செய்யவிட மாட்டாங்க. அத்தனையும் தரித்திரம் பிடிச்சக் கூட்டம். எவனாவது எதையாவது தொட்டுட்டா எப்படி தெரியும் சாமி!” அவர் சொன்னது ஜெயராமின் காதிலும் விழுந்தது. அவன் உரத்தக் குரலில் கேட்டான் “எப்படி நாங்க தொடுறதால யாராவது அசுத்தமா ஆவாங்க? சாமி தானே நம்ம எல்லாரையும் படைச்சது. இந்த மதம் நம்மள மனுசனாப் பாக்கக் கற்றுக்கொடுக்கலைனா பின்ன இது என்ன மதம்?”

சௌதுரியின் வீட்டுக்காரி கோபத்தில் வெடித்தார். “பார்த்தீங்களா சாமி இதுங்க ஆணவத்தை! நீ தீனநாத்தின் பேரன் ஜெயராம் தானே? வயித்துல நாலு ஏக்கர் படிப்ப வச்சிட்டு புத்தி சொல்ல வந்துட்ட! கீழ்ச்சாதிக்காரன் பையன் கீழ்ச்சாதிக்காரனாவே இரு. இந்தப்பக்கம் வராதே.”

ஜெயராம் தலை கவிழ்ந்தபடி போய்விட்டான். எதுவும் பேசவில்லை.

குளிர்காலம் வந்துவிட்டது. ராம்பூரின் வயல்களில் நெற்கதிர்கள் அறுவடைக்குத் தயாராகிவிட்டன. ஆனால் இந்த நெல் தீனநாத்தைப் போன்ற கீழ்ச்சாதி பாக்திகளுக்கு அல்ல. ஊரில் உள்ள நிலத்தில் பெரும்பகுதி நகென் சௌதுரி மற்றும் நிவாண் சக்ரவர்த்திக்குச் சொந்தமானது. தீனநாத்தின் உடல்நிலை தற்போது ஓரளவுக்குப் பரவாயில்லாமல் இருக்கிறது. இருந்தாலும் உடம்பில் முன்பு இருந்த தெம்பில்லை. சௌதுரியின் வயலில் நெல் அறுவடை நடக்கிறது. தீனநாத், நகேன் சௌதுரியிடம் சென்று “எசமான் கிட்ட வேலை கெடச்சா நான் பொழச்சிக்குவேன்” என்றார்.

“நீ இந்தக் கெழட்டு உடம்ப வச்சிட்டு இனி என்ன வேலை செய்ய முடியும்? அதைவிட உன் பேரனை அனுப்பிவிடு.”

அவன் பள்ளிக்கூடம் போறான் எசமான்”

அப்போ, நீங்க உசந்த சாதிக்காரங்களுக்குச் சமானம்! பிராமணர், காயஸ்தா வீட்டுப் பிள்ளைகளைப் போல உங்கப் புள்ளைங்களையும் பள்ளிக்கூடம் அனுப்புறீங்களாடா!”

தீனநாத் மௌனமாக இருந்தார். “வேலை கொடுத்தா பொழச்சிக்குவேன் எசமான். வயல் வேலை கொடுக்கலைனாலும் பண்ணையில் மாடுகளை விட்டுப் போரடிக்கச் சொன்னாலும் செய்வேன்.”

ஆனால் நீ அதுக்கும் முழு கூலியும் கேட்பாயே”

“அது எசமான் நீங்கத் தோணுற கூலி கொடுங்க”

தீனநாத், நகென் சௌதுரியின் பண்ணையில் மாடுகளைக் கொண்டு போரடிக்கும் வேலையில் சேர்ந்துகொண்டான். வெட்டிச் சுத்தம் செய்யப்பட்ட வயலுக்கு நடுவில் ஒரு குச்சியை நட்டார். கயிற்றைக் கொண்டு சில மாடுகளை அருகருகே கட்டினார். அதன் பிறகு நகென் சௌதுரியின் வைக்கோலைப் பரப்பினார். மாடுகளை ஓட்டத் தொடங்கினார். மாடுகள் சக்கரத்தைப் போல சுற்றிவருகின்றன. கதிரடிக்கும்போது தப்பிய நெல்மணிகள் இப்போது வைக்கோலில் இருந்து உதிர்கின்றன. அவ்வப்போது மாடுகள் வைக்கோலைத் தின்கிறது. நெல்மணிகளையும் தின்கிறது. தீனநாத் மாடுகளின் சாணத்தைச் சேகரித்து ஓரிடத்தில் குவித்து வைக்கிறார்.

ஒரு கட்டத்தில் போரடிக்கும் வேலை முடிந்துவிடுகிறது. மாலையில் வேலை முடிந்ததும், நகென் சௌதுரியிடம் இருந்து தீனநாத் கொஞ்சம் பணத்தைத் தினக் கூலியாகப் பெறுகிறார். கூலியைத் துணியில் முடிந்துகொண்டு அவர் வீடு திரும்புகிறார். திரும்பும்போது நகென் சௌதுரியின் மாட்டுச்சாணத்தை ஒரு கூடையில் நிரப்பி தலையில் சுமந்துகொண்டார்.

வீட்டிற்குத் திரும்பிய தீனநாத், நகென் சௌதுரியிடம் வேலை செய்ததில் கிடைத்த கூலியைக் கொண்டு இரண்டு நாட்களுக்குக் குடும்பச் செலவுகளைச் சமாளித்துவிடலாம் என்று நினைத்தார். அவர் மனதில் திடீரென்று ஒரு புதிய யோசனை தோன்றியது. நகென் சௌதுரியின் பண்ணையிலிருந்து கொண்டுவந்த மாட்டுச்சாணத்தை, கூடையில் எடுத்துக்கொண்டுபோய் குளத்து நீரில் கரைத்தார். குளத்துத் தண்ணீரில் சாணம் கரைந்துவிட்டது. மூங்கில் கூடையின் அடிப்பகுதியில் செரிக்கப்படாத நெல்லும் உமியும் மட்டும் தங்கியிருந்தது.தைக் கொண்டு தீனநாத்துக்கு அவரது மனைவி ஷைவ்யா உணவு செய்து கொடுத்தார். அவரும் அதைச் சாப்பிட்டார். ஜெயராம் நல்ல அரிசியில் ஆக்கிய சோற்றைச் சாப்பிடவேண்டும். அவன் அம்மா நிவாராணியும். இது தீனநாத்தின் உத்தரவு. இதில் தீனநாத்தின் குடும்பம் சில நாட்களைக் கழித்துவிடும். இதனால் தீனநாத்தின் உடல்நிலை மோசமடைந்தால் அல்லது அவர் இறந்தே போனாலும், யாருக்கு என்ன கவலை? அவருக்கு வயதாகிவிட்டது. அவர் கிழவர்.

அன்றிரவே பசுவின் சாணத்தைக் கரைத்து சுத்தம் செய்து பெறப்பட்ட செரிக்காத நெல்லில் செய்யப்பட்ட உணவைச் சாப்பிட்டு தீனநாத் நோய்வாய்ப்பட்டார். காலையில் மருத்துவர் தீனநாத்தைப் பார்க்க வந்தார். மருத்துவர் தீனநாத்திடம் இரவு என்ன சாப்பிட்டார் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். அவர் ஆச்சரியத்துடன் தீனநாத்தின் முகத்தைப் பார்த்தார்.

“டாக்டர் பாபு, நான் கிழவன், எனக்கு இப்போது வயசாச்சு. இந்த வயசுல சாவது இயல்பு. ஆனால் என் மருமகள் நிவாராணி, பேரன் ஜெயராம் காப்பாற்றப்பட வேண்டும்!” என்றார் தீனநாத்.

காலையில் தீனநாத் தாங்க முடியாத வயிற்று வலியில் திணறிக் கொண்டிருந்தபோது, மரணத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தபோது, வான்வெளியில் பறந்துகொண்டிருந்தன வெள்ளையாய்க் கொக்குகளின் கூட்டம்.

Author Picture

சியாமல்குமார் பிரமாணிக்

வங்காளத்தில் தற்போது எழுதி வரும் தலித் எழுத்தாளர்களில் முதன்மையானவர். தலித் சாகித்ய அகாதெமியின் உறுப்பினர். இவரது இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் பங்களிப்பு செலுத்திவருகிறார். இவரது கவிதைகளும் சிறுகதைகளும் ஆங்கிலம், இந்தி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய சிறுகதைகள் கொல்கத்தா பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு இடங்களில் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அனன்ய நந்தனிக் இலக்கிய விருது, சக்திகுமார் சர்க்கார் நினைவு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

Author Picture

ஞா. சத்தீஸ்வரன்

மேற்குவங்கம் விசுவபாரதி நடுவண் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்து வருகிறார். 'தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள்' கவிதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தமிழ்-வங்காள இலக்கிய மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.'பாங்ளா பாஷாய் தமிழ் ஷேக்கா' நூலை வங்காள மொழியில் எழுதியுள்ளார். 'ஆயிஷா' குறுநாவலின் இணை மொழிபெயர்ப்பாளர். வங்காள மொழிபெயர்ப்புக்காக கொல்கத்தா கவிதை சங்கமத்தின் மொழிபெயர்ப்பு விழாவில் 2022-ஆம் ஆண்டிற்கான 'சோனாலி கோஷல் நினைவு விருது' பெற்றுள்ளார்.

மின்னஞ்சல் - tamilsathi1996@gmail.com

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு