-->

அண்மை

எழுத்தாளர் பிரேமுடன் நேர்காணல் - யாழ் அதியன்


எழுத்தாளர் பிரேமுடன் நேர்காணல்
ஒளிப்படம் - புதுவை இளவேனில்

கேள்வி:

இந்தியச் சூழலில் மார்க்சியத்தைப் பின்நவீனத்துவ அல்லது குளோபல் அறிவு என்பதோடு இணைத்து, தேசியக் கட்டமைப்பாக உருவாக்க வேண்டிய சூழலில், இனம், பால், பண்பாட்டு அடையாளம், சூழலியம் போன்ற எல்லாக் கருத்துக்களோடும் இணைந்த மார்க்சியத்தைக் கட்டமைக்க வேண்டிய சூழலில் இருந்தாக வேண்டும் என்கிறீர்கள். இவ்வாறான பார்வையை இந்தியச் சூழலில் கொண்டுவரும்போது, இங்குள்ள அம்பேத்கரியம், பெரியாரியம், காந்தியம் போன்ற கருத்துருவாக்கங்கள் இருக்கின்றன. அவற்றுடன் எவ்வாறு உறவாடுவது.  அதைப்போலவே பழைய சாதியக் கருத்தாக்கங்களும் இருக்கின்றன.  இவ்வாறான இங்குள்ள சூழலில் மார்க்சியம் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் எவையென்று நீங்கள்  கருதுகிறீர்கள்.? 

பதில்:

இந்திய அரசியலாக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி என்பது அரசியல் கட்சியாக உருவான அளவிற்கு இயக்கமாக வளரவில்லை அல்லது அதற்கான செயல் திட்டம் இல்லை. இதை கம்யூனிஸ்ட் கட்சியின் குறையாக நாம் சொல்ல முடியாது. ஏனென்றால் கம்யூனிஸ்ட் கட்சி என்பது தனியான ஒரு இயந்திரம் இல்லை. அது பலதன்மையான மனிதர்களையும் எல்லைகளையும் உடையது. ஏனென்றால் இந்தியச் சமூகம் சமத்துவத்துக்கும் கம்யூனிசத்துக்கும் எதிரானது. அம்பேத்கர் சொல்லுவது போல் இந்தியப் பண்பாடு என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. கம்யூனிசத்துக்கான எதிர்ப்பு இந்தியச் சமூகத்துக்குள்ளே இருக்கிறது. அதற்குள் உருவாகக் கூடிய கட்சி என்பது தொடக்க கட்டத்தில் கட்சியாக உருவாகி அதன் மூலம் தேசியக் கட்சியாக மாறி தேசிய அரசியலைக் கைப்பற்றல் என்ற திட்டம் இருக்கிறது. ஆனால் அதே சமயம் முற்போக்கு அரசியல் என்று வருகிறபோது சாதிய அடுக்கு நிலையில் இருக்கக் கூடியவர்கள் மாற்றம் விரும்பாதவர்களின் தலைமையும் மாற்றத்தை எதிர்க்கக் கூடிய  சாதியினுடைய மேலாதிக்கமும் ஒருவகையில் சாதிகளின் முரண் பாட்டை முழுமையாக கையாள முடியாதவர்கள் என்ற நிலை மார்க்சியக் கட்சியின் ஒரு பகுதியாக இருந்தது. சோவியத் பெருங்கட்டமைப்பின் ஒரு பகுதியாக செயல்பட்ட அளவிற்கு இந்தியச் சமூகத்தை நோக்கிய ஒன்றாக செயல்படாமல் போனார்கள்.  கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டமைப்பில் சிக்கல் வந்தது என்றுதான் சொல்லமுடியும். அதில் முழுமையான மாற்றத்தை நோக்கிய அடித்தட்டு மக்கள் சேரமுடியாத நிலை இருக்கிறது. சாதிக் கட்டமைப்பினுடைய உள்ளூடிய ஆதிக்கம் படிநிலை நிலவுடமை சார்ந்த மனோ நிலை, புரட்சியற்ற  கம்யூனிஸ்ட் அல்லாத சமூக உளவியல் உடைய இந்தியச் சமூகம், ஜனநாயகம்சமத்துவம்- சுதந்திரச் சார்பில்லாத மன அமைப்பு கொண்ட மனிதர்களுடைய  சமூகமாக இருக்கின்றது. இந்தப் பண்பு இதே சமூகத்தினுடைய பண்புகளை தங்களுடைய  அடையாளமாக சமூக மன அமைப்பாக கொண்டவர்கள் இதனுள் இருந்து  மாற்றத்தை உள்ளிருந்தே தடுக்கிறார்கள், தடுக்கலாம். நேரடியாகச் சொல்கின்ற போது அவர்கள் கட்சியில்  இருக்கிறார்கள். ஆனால் சமயம், பழகுமுறைகள், சடங்குகள், பால்களின் அடிப்படையில், ஆணாதிக்கத்தன்மை, சாதிப் பெருமைகள், நிறம், இனம், சமயம் சார்ந்த  சடங்குகள் தன்மை உடையவர்கள், சுதந்திரத்துக்கு மாற்றான, சுதந்தரத்தில் விருப்பம் இல்லாத அறிவியலுக்குப் புறம்பான இது போல   இந்தியச் சமூகத்தினுடைய  கூறுகள் எல்லாம் இருக்க கூடியவர்கள் இதனுள் சிக்கிகொள்கின்றனர். இந்தச் சிக்கல்கள் என்னவாகின்றது என்றால்  மார்க்ஸிட்டோ, மார்க்சிய கட்சியோ இன்னோரு கட்சியாக மாறுகின்றது அல்லது மாற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இன்னொரு வகையில் அவ்வமைப்பு இந்து சமூகத்தின் சமயம், சாதி தன்மையுடையவர்களிடம் இருந்து அந்நியப்படுகிறது. ஏனென்றால் அது மாறுபட்டது என்பதால்தான். ஆனால் அமைப்பினுடைய நுண்ணரசியல் என்று வரும் போது இந்த அமைப்பினுடைய எதிர்த் தன்மைகள் பிற்போக்குக் கூறுகளுடைய அமைப்பாக மாறுகிறது. மார்க்சிய உளவியல் மற்றும் மாற்று வாழ்வியலை இங்குச் சிந்திக்க வேண்டும். முதலில் கூட்டுவாழக்கை மற்றும் கம்யூன்  உருவாக இந்தியச் சமூகத்தில் வாய்ப்பில்லாமல் போனது. உருவாக முடியவில்லை என்று சொல்லலாம். அதை எப்படி உருவாக்க வேண்டும் என்றால் அதற்கான செயல்திட்டதை உடனடியாக சொல்லிவிட முடியாது. ஆனால் பிடிவாதமான மார்க்சிய உளவியளுடைய ஒரு அமைப்பு இங்கு வந்திருக்க வேண்டும். அப்படி வருகின்ற போது இந்திய சமூகத்தில் ஒரு இயக்கமாகவும் கம்யூனிச பண்பாட்டு செயலாகவும் மாறும். ஆனால் அது வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இன்றைக்கு என்ன செய்ய வேண்டுமென்றால் ஏறக்குறைய 1920 அதற்கு முன்பே மார்க்சியம் இங்கு வருகிறது. கம்யூனிசம் பேசப்படுகிறது, பின் கட்சியாக உருவாவது 1920-21களில் இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியாக  உருவாகின்றது. இரஷ்ப் புரட்சியின் நூற்றாட்டின் பின்ணனியில் இந்தியச் சூழலைப் பார்கிறபோது பல்வேறு சிக்கல்களை கையாளுவதற்கான  திட்டங்கள் இங்கே இல்லை. எனவே இன்று உலகயமாதல் வந்திருக்கிறது அதனால் மார்க்சியத் திட்டம் விளிம்பாயிருக்கிறது.

இந்தியச் சூழலில் உள்ள எல்லாக் கூறுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்வதுதான் மார்க்சியப் பார்வையாக இருக்க முடியும்.  இந்தியச் சமூகக் குடும்ப அமைப்புகள் சாதியமாக இருக்கிறது. அதில் இருந்து வெளியே வருகிற போது மாற்றுகள் இல்லை. மாற்றுகளை யார் உருவாக்க வேண்டும் என்ற கேள்வியில் மாற்றத்தை விரும்புகிறவர்கள்தான் மாற்றை உருவாக்க வேண்டும். அந்த இடத்தில்தான் மார்க்சிஸ்ட்டுகள் எதையும் செய்யவில்லை என்றும் கூறுகின்றோம். நம்மிடம் போதாமை இருக்கிறது என்பதைத்தான் பேசுகின்றோம்.  நான் கட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் ஒரு கம்யூனிஸ்டா இருந்துதான் அதை செய்ய வேண்டும்.

எழுத்தாளர் பிரேமுடன் நேர்காணல்
ஒளிப்படம் - புதுவை இளவேனில்

          இந்தியச் சூழலைப் புரிந்துக்கொண்ட நாம்  எல்லா கூறுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். மார்க்சிசம் என வந்தால் தலித் அரசியலோடு என்ன உறவு என்பதையும் நாம் கவணிக்க வேண்டும். தலித் கட்சி, தலித் இயக்கத்தில் நேரடியாக இருக்கலாம் என்பதைவிட இருக்கனும் என்றுதான் சொல்ல வேண்டும் இப்படியாக இவை செயல்படும். அந்த வகையில் தலித்தியம், பெண்ணியம், சுற்றுச்சூழல் சார்ந்து இருக்கவேண்டும். மாற்றுகள் என்று வருகிற போது அதிலே காந்தியமோ அல்லது காந்தியத் திட்டம் என்பது எந்தச் செயலும் இல்லாத ஒரு ஆவணக் காப்பகமாக இருக்கிறது. ஆனால் இன்னொரு வகையில் காதி, சர்வோதயா என்ற வகையில் உற்பத்திகள் நடக்கின்றன.

 கைத்தொழில், பண்ணைகள் வைத்துள்ளனர். இது ஒரு கம்யூனிஸ்ட் செயல் திட்டமாக இருக்கிறது. இந்த இடத்தில் யார் யாரை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைவிட  எந்தெந்தச் செயல் திட்டத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியம். அதை முதலில் தலைகீழாக்கம் செய்ய வேண்டும். எனவே கட்டுடைதல் என்பது செயல்பாட்டின் அடையாளாம்.

உலகமயமாதலின் கொடூரத்தை எதிர்க்க கூடிய ஒரு மாற்று வாழ்க்கை என்று பார்த்தால் பசுமை மற்றும் சூழலரசியல் என்பதுதான். எனவே தனிமனிதர்களின் பங்கு என்ற அடிப்படையில் காந்தியின் பங்கு என்ன என்று வைத்துக்கொள்ளலாம். உற்பத்தியில் என்னுடைய சக்தி என்ன அதில் நுகர்வதற்கு உரிமை என்ன இருக்கிறது என்பதில் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையில் இருக்க கூடிய இடைவெளி கம்யூனிஸ்ட் செயல் திட்டம். காந்தியம் என்பதை நான் எவ்வாறு பார்கிறேன் என்றால் இந்தியாவில் அதற்கு ஒரு பெயர் காந்தியமாக இருக்கிறது அது ஏற்கனவே விவாதிக்கப்பட்டது. காந்தியம் இயற்கை  மருத்துவம் சார்ந்த உணவு , மேம்பட்ட வாழ்வு மற்றும் மனிதர்கள் தனிமையாவதில் இருந்து தவிர்ப்பது இப்படி காந்தியத்தில் ஒரு செயல்திட்டம் இருக்கிறது. மனிதர்கள் தனிமைப் பட்டுப் போவதில் இருந்து ஒரு கூட்டுத்தன்மை, கூட்டுவாழ்க்கை இருக்கிறது எப்போதும் தனிமையில் இருக்கக் கூடாது என்பதாக காந்திச் சொல்கிறார். ஒரு மனிதர் தனிமையில் இருப்பதும், தனிமைப்பட்டுப்போவதும், ஒரு மனிதர் கைவிடப்பட்டதாக உணர்வதும் இதெல்லாம்தான் ஒரு பெரிய  வன்முறை. எளிமைப்பட்டவர்கள் சேர்ந்து இனைந்து வாழ்தல்  எளிமையிலும் சேர்ந்து வாழ்தல் என்பது ஒரு கூட்டு வாழ்க்கை இது ஒரு கம்யூனிச செயல்திட்டமாகவே நான் சொல்கிறேன். இது காந்தியத்தில் இருந்தால் நான் ஏன் மாற்று வடிவமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எனவே நான் இப்படித்தான் பார்க்கிறேன். எதையும் நாம் பிற்போக்கு என்று சொல்லிவிடக்கூடாது எதுவெல்லாம் வாழ்க்கைத் தொடர்புடையதாக உள்ளதோ அவற்றை எல்லாம் நாம் உறவோடுதான் பார்க்க வேண்டும்.

காந்தியத்தில் எதை எதிர்க்கிறோம் என்றால் அது இந்தியச் சமூகத்தை விளக்கிய முறைகளில் வருணாசிரமம் சாதி கட்டமைப்பாக இருக்கிறது என்பதில்தான், சமூகச் சிந்தனையில் புரிதல் இல்லை. இந்த இடத்தில்தான் விமர்சிக்க வேண்டியிருக்கிறது . நடைமுறையில் என்ன நடந்தது அவருடைய  அரசியல் இந்தியாவில் நிலவுடைமைப் பிற்போக்கு சக்திகளின் இடமாக மாறியது. காந்தியம் என்பது மக்கள் சார்ந்த அரசியலுக்கும் அதற்கு எதிரானவற்றுக்கும் இடையிலான ஊசலாட்டமாக இருக்கிறது. அதில் இருந்து சிலவற்றை எடுத்துக்கொள்வது என்பதுதான் பன்மெய் என்று சொல்வது.

எழுத்தாளர் பிரேமுடன் நேர்காணல்
ஒளிப்படம் - புதுவை இளவேனில்

கேள்வி:

 தமிழகத்தைப் பொறுத்தவரையில் மார்க்சியவாதிகள் பின்நவீனத்துவத்தை ஒரு பகைநிலையில் பார்க்கும் போக்கு உள்ளது. ஆனால் பூக்கோவும் தெரிதாவையும் மார்க்சியத்தின் நீட்சியாக, அடுத்தகட்டமாக இயங்குவதைப் பார்க்க முடிகிறது. இந்தப் பின்நவீன ஒவ்வாமையை எவ்வாறு பார்ப்பது?

பதில்:

1986ல் நிறப்பிரிகையை வைத்து பின்நவீனத்துவப் பார்வையில் மார்க்சியத்தை வாசிப்பதைத்தான் நான் தொடங்கினேன். அதுதான் இன்றுவரை முதல் கட்ட உரையாடல்கள், முரண்பாடுகள் சில சமயங்களில் நான் வெளியே நிற்க கூடிய நிலை உருவாகியது. பின்நவீனத்துவ உரையாடல் தமிழில் குறைவு. அப்படி வந்ததும் கூட இலக்கியப் பின்நவீனத்துவம் என்ற வகையில் வடிவமற்ற தன்மை, பரிசோதனை முயற்சிகள் என்ற அடிப்படையில் இலக்கியம் சார்ந்த உரையாடலின் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் அதன் உண்மையான அரசியல் தன்மையை நான் மிக வலிமையாகவும் உறுதியாகவும் சொன்னேன். பின்நவீனத்துவம் என்பதே பின்மார்க்சியம். மார்க்சியத்தைக் கடந்த அல்லது மார்க்சியம் சார்ந்து இன்றைய உலகத்தை அணுகுதல் என்ற நிலையில்தான் எல்லா உரையாடல்களையும் செய்தேன். புரட்சியை நோக்கிய உளவியல் சிக்கல் கட்டுரையில் இதைப் பற்றிதான் பேசியிருக்கிறேன். மனிதார்த்தப் பொதுமை நோக்கு என்பதில் நான் சொல்ல வந்தது. பொருள்முதல் வாதம் என்பது மொழி மூலம் விளக்கப்படுவதே. மனித உளவியல் என்பது மொழி மூலமாகக் கட்டப்பட்டது. அதிலிருந்து நாம் புரிந்துகொள்ள கூடிய உலகம்  மனிதர்களுக்கு உரியதே தவிர எல்லாவிதமான உண்மைகளைப் பற்றிய அல்லது எல்லாவிதமான பொருண்மை பற்றிய பேசுகிறது என்பது சிக்கலான் ஒன்றுதான்.  

அந்தச் சமயத்தில் மார்க்சிசம் பின்நவீனத்துவ அரசியல்தான் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அதனால்தான் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த எழுத்து பின்நவீத்துவ அரசியல் என்றால் என்ன அதில்தான் பின் காலனியம், அடையாள அரசியல், பெண்ணியம், தலித்  என ஒரே சமயத்தில் பல உரையாடலகள் இருக்கும். எதாவது ஒரு பாலிடிக்ஸ் மட்டும் மையமாக இருக்காது. ஒரு சமூகம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு, சமயம் பால், இனம், சாதி, பிறகு நிறம், தனிமனித உறவு, குடும்பம், குடி,   அறிவியல் தொழில்நுட்பம், இயந்திரங்கள், கருவிகள் இவை எல்லாம் சேர்ந்த ஒன்றுதான். எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. உலகமயமாதல் என்று சொல்லக்கூடியது இந்தியாவில் வரும்போது பொருளாதாரப் பிரச்சனையாக மட்டுமாக இல்லாது இன்னொரு வகையில்  சுற்றுச்சூழல் சார்ந்த தாகவும், வாழிடம் சமந்தப்பட்டதாகவும், இனக்குழு உரிமை சமந்தப்பட்டதாகவும், ஒரு உயிர் வாழ்தல் சிக்கல் சம்மந்தப்பட்டதாகவும் இப்படி ஒரு அமைப்பில் இருகிறபோது வெளியே இருக்கிறவர்கள் எப்படிப் பார்கிறார்கள் என்றால்  இது தங்களின் வாழ்க்கைக்குரிய இன்பமயமாக பார்க்கிறார்கள். இவர்களுடைய இந்தப் பார்வையும், பாதிக்கப்படுவர்களின் பார்வையும் ஒன்றாக இருப்பதில்லை. ஏனென்றால் இந்தியாவைப் பொருத்தவரை சாதி வெறுப்பு, இன வெறுப்பு இருக்கிறது.. பொருளாதாரச் சிக்கலைப் பற்றிப் பேசுகின்றபோது பாலினம் சார்ந்த தெளிவான  உன்மையான அரசியல் என்னவென்று தெரியாமல் இருப்பதென்பது  இந்த இடத்தில் வன்முறையாக இருக்கிறது.  

(எழுத்தாக்கம் – பிரதீப்)

(நேர்காணல் தொடரும்…)

Author Picture

பிரேம்

தமிழில் படைப்பிலக்கியத்திலும் கோட்பாட்டுத்தளத்திலும் இயங்குபவர். மார்க்சியத்துடன் பின்நவீனத்துவ, பின்காலனிய, விளிம்புநிலை அரசியல் கோட்பாடுகளையும் விவாதங்களையும் முன்னெடுத்துச் செல்வதுடன் அவற்றின் செயல்பாடுகளிலும் பங்கெடுத்து வருபவர். 'கிரணம்' படைப்புகள் தொடங்கி இன்றுவரை படைப்பிலக்கியம், கோட்பாட்டாக்கம் என்பவற்றை இணைத்து எழுதிவருபவர். நாவல்கள், சிறிகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் என 30க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகி உள்ளன.

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு