கேள்வி:
மற்ற எழுத்துக்களில் இருந்து பெண் எழுத்தை எவ்வாறு பிரித்துப் பார்ப்பது என்று கூர்மைப் படுத்தியிருக்கிறீர்கள். போலித்தன்மையுடன் வெறும் விளம்பரத்திற்காக மட்டும் எழுதுவதிலிருந்து பெண் எழுத்து அரசியலும் அழகியலும் கலந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறீர்கள். இந்தப் போக்கு 2000க்குப் பிறகு எப்படித் தொடர்கிறது. போலித்தனமாக விளம்பரத்திற்காக பேமஸ் (Famous) ஆகவேண்டும் என்பதற்காக எழுதப்படும் பெண் எழுத்துக்கள் பெண்ணிய அரசியலைக் கூர்மைப் படுத்துவதற்குப் பதிலாக ஆணாதிக்கத்திற்கு வலுசேர்ப்பதாகவும் நீர்த்துப்போவதாகவும் ஆகிவிடாதா? இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்:
நீர்த்து போகும்நிலை என்றே நான் அதைப் பார்க்கிறேன். எல்லா அரசியல் கட்சிகளிலும் முஸ்லீம்கள் இருவர், தலித்துக்கள் இருவர் என வைத்துக் கொள்கிறார்கள். அதுமாதிரி இலக்கியக் குழுவிலும் அவரவர்களுக்கு இரண்டு பெண்களைச் சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள். அதுவும் அவர்கள் சொன்னபடி கேட்கும் பெண்களாக இருக்க வேண்டும். ‘நீ ரொம்ப நல்லா எழுதற’ என்று அந்தப் பெண்ணை மட்டுமே பாராட்டுவார்கள். பொதுவாகப் பேச மாட்டார்கள். இந்தப் போக்கெல்லாம் கொஞ்ச நாட்களில் உதிர்ந்துதான் போகும். என்னைப் பொறுத்தவரையில் எது ஆழமாக இருக்கிறதோ அதுதான் நிற்கும். நான் தலித்துக்களின் நிலை குறித்துக் கவிதை எழுதுகிறேன் என்றால் அந்த வலியை உணராமல் எழுதவே முடியாது. எழுதக்கூடாது. அப்போது நான் என்ன செய்ய வேண்டும். அப்போது அதை நான் உணர வேண்டும். அதைப்போல எல்லாப் பெண்களும் தன் நிலையை உணர வேண்டிய தேவை இருக்கிறது.
முகநூல் வந்தபின், கவிதையே இல்லாததெல்லாம் கவிதை, காதலே இல்லாததெல்லாம் காதல்கவிதை என்ற நிலை இருக்கிறது. இவையெல்லாம், சாலையில் செல்லும்போது பேருந்து வழியாக எச்சில் துப்புவதைப்போல அவ்வளவு கேவலமாக இருக்கின்றன. இயற்கைக் கழிவுகள்கூட உந்துதல் இருந்தால்தான் போகிறோம். எச்சில் துப்புவதற்கு எதுவுமே வேண்டாம்.
கேள்வி:
தமிழ் நவீன எழுத்துகளில் 'பறத்தல் அதன் சுதந்திரம்' பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது. தொடர்ந்து மாலதி மைத்ரி, குட்டிரேவதி, சுகிர்தராணி என்று பலரின் தொகுப்புகள் வந்தன. அந்தச் சமயத்தில் ஆண் எழுத்தாளர்களிடமிருந்து பெரிய எதிர்ப்பு வந்தது. அந்தச் சூழல் குறித்துச் சொல்லுங்கள்.
பதில்:
ஒரு குடும்பத்தில் 5,6 ஆண்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். அந்தக் குடும்பத்தில் உள்ள ஒரு பெண், நான் காதல் செய்கிறேன் எனச் சொன்னால் எல்லா ஆண்களும் ஆளுக்கு ஒரு பக்கம் ரகளை செய்வார்கள் இல்லையா. அதைப்போல எழுத்துலகில் ஆண்கள் எல்லோரும் தாங்கள்தான் பெண்களைக் காப்பாற்றப்போகிறவர்களாகவும் தாங்கள்தான் அவர்களுக்குப் பொறுப்புபோலவும் நினைத்துக்கொண்டு கூத்தாடினார்கள். அப்படி எதுவும் கிடையாது. இவர்கள் எதுவும் செய்யப்போவதில்லை என்ற நிலையில் இருந்து நாங்கள் செயல்பட்டோம்.
இப்போது எழுதப்படும் பெண்களின் கவிதைகள் இன்னும் கொஞ்சம் பரிசீலிக்கப்படவேண்டிய நிலையில் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை வயதானதால் அவ்வாறு நான் சொல்கிறேனா என்றும் எனக்குத் தெரியவில்லை. கவிதைகளில் பெண்குரலே இல்லாமல் இயற்கையின் குரலே இருந்தாலும் அதில் ஒரு நேர்மையும் ஆழமும் இருக்க வேண்டும்.
பொதுவாகவே புதுக்கவிதைகள் ரொம்ப டிரான்ஸ்பிரண்டாக ஆகிவிட்டன. பால் அடுத்த பக்கத்தைக் காட்டாது. ஆனால் நிறைய தண்ணீர் ஊற்றினால் காட்டும். அப்படிப் புதுக்கவிதைகள் ஆகிவிட்டன என்று தோன்றுகிறது.
கேள்வி:
ஒரு ஆண் பெண்ணியம் பேசுவதற்கும் பெண் பெண்ணியம் பேசுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. ஒரு பெண் முகநூலில் ஒரு பதிவோ/ கவிதையோ பதிவிட்ட உடனேயே பல ஆண்கள் அதற்கு விருப்பக்குறிகளை இடுவது, வாழ்த்துக்களைத் தெரிவிப்பது என்ற நிலை இருக்கிறது. இதில் பெண் எழுத்தின் அரசியல் இல்லை. பெண்ணை எப்படி வழக்கமான பார்வையில் அணுகுவது என்ற ஆணாதிக்கப் போக்கே இருக்கிறது. இந்தப் பண்பு பெண்ணிய அரசிலுக்குப் பதிலாக மீண்டும் வழக்கமான ஆணாதிக்கப் போக்கின் பகுதியாக நீர்த்துப் போகிறது. இது பெண்விடுதலைக்கு ஊறாக அமைகிறது. இதைத்தான் நீங்கள் சொல்வதாகப் புரிந்துகொள்கிறேன். சரியா. இதை விளக்குங்கள்.
பதில்:
ஆம். இன்று பொதுவாகவே இது ஒரு குழப்பமான காலமாக இருக்கின்றது. பொதுப் பிரச்சினைக்குப் போராடுவதாக அல்லது அதில் பங்கெடுப்பதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அவரவர்கள் தனித்தனியாக ஏதோ செய்துகொண்டிருப்பதுபோல் இருக்கிறது சூழல்.
ஆனால் மிகப்பெரிய பாய்ச்சல் இன்று இந்திய அளவில் நிகழ்ந்திருக்கிறது இன்னொரு புறம். தலித் பெண் எழுத்தாளர்கள், தலித் எழுத்தாளர்களின் பாய்ச்சல் மிகப்பெரியது. அதிகாரம், அரசியல், கலை, கல்வி, பண்பாடு, கண்டுபிடிப்பு என்று எல்லாவற்றிலும் தலித்துக்களையும் பெண்களையும் ஒதுக்கிவிட்டு இனிமேல் ஒரு செயலும் செய்ய முடியாது என்ற அளவிற்கு நன்கு உருவாகியுள்ளனர். இந்தப் போக்கைக் கலைப்பதற்கும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. தலித் எழுத்தை தலித்தாக உள்ளவர்தான் எழுதவேண்டுமா? மற்றவர் எழுதலாமா எழுதக்கூடாதா? மற்றவர் எழுதினால் அதை ஏற்கலாமா கூடாதா? இப்படி வாதங்கள் வருகின்றன. வரட்டும் அப்புறம்தான் தெளிவு வரும்.
கேள்வி:
மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி எனப் பலரும் 2000க்குப் பிறகு தீவிரமாக எழுத வருகிறார்கள். பெண் எழுத்து பல தளங்களில் இணைந்து விரிவுடையதாக அமைகிறது. அதாவது பிற விளிம்புநிலை அரசியல்களை (intersectionality) உள்ளடக்கி இயங்கும் தன்மை மிக முக்கியமானது. இந்தப் போக்கு இப்போதும் தொடர்கிறதா. அல்லது இன்றைய போக்குகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்.
பதில்:
ஜா.தீபா, எஸ்.கயல், அனார், பொன்முகலி போன்ற பல பெண்கள் எழுதும் கவிதைகள் சிறப்பாக உள்ளன. அவர்களின் கவிதைகள் பிரபலம், பரபரப்புகளுக்கானதாக இன்றி ஆத்மார்த்தமானதாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. புலனம் மற்றும் முகநூலில் வரக்கூடிய கவிதைகளை கவிதையாகவே எடுத்துக்கொள்ள முடியாது. அவை இலக்கியமும் இல்லை ஒன்றும் இல்லை. வெறும் நான்கு வார்த்தைகளாக ஜனரஞ்சக சினிமாவில் வருவதைப்போல இருக்கின்றன. அதற்குமேல் ஒன்றும் இல்லை அதில். எப்போதும் இந்த முரண் இருக்கும். சுஜாதா ஒருபக்கம் எனில் ந. பிச்சமூர்த்தி இன்னொரு பக்கம் இருக்கும். இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கும்.
கேள்வி:
பெண் எழுத்து ஆண்மையத்தைத் தகர்க்கும் அறம்சார்ந்த நிலையில், தலித் பெண் எழுத்து, கருப்பின எழுத்து, மாற்றுத்திறனாளர் எழுத்து, திருநங்கைகளின் விடுதலை, மனவளர்ச்சி பாதிப்படைந்தவர்களின்நிலை என்று பலநிலைகளில் விரிவடையும் தன்மைகள் எவ்வாறு இருக்கின்றன. அதற்கான சாத்தியங்கள் குறித்துச் சொல்லுங்கள்?
பதில்:
நகரும் என்றே நான் நினைக்கிறேன். என்னவென்றால் நான் வயலில் வேலைசெய்கிறேன் என்றால் எனக்குக் கவிதை எழுதவெல்லாம் நேரம் இருக்காது. எனக்கு ஆட்டிசம் குழந்தை இருந்தால் நான் கவிதை எழுதிக்கொண்டிருக்க முடியாது. அந்தக் குழந்தைக்காகப் பாடுபடுவதே சரியாக இருக்கும். பாதி ஆண்கள் இப்படியான குழந்தை பிறந்துவிட்டால் பெண்ணைக் காரணம் காட்டி, பழியைப் போட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக்கொள்கிறார்கள். இந்தப் பெண் அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண் குழந்தையாக இருந்தால் இன்னும் சிக்கல். அந்தப் பெண் சம்பாதிப்பாளா? இந்தப் பெண்குழந்தையைப் பார்ப்பாளா? என்ன செய்யமுடியும். இப்படியான அம்மாக்களை, குழந்தைகளைக் குறித்து நாம்தான் எழுத வேண்டும்.
நான் ஒரு நூலைச் செய்திருக்கிறேன் இது குறித்து. 18, 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. மூளை வளர்ச்சியற்ற பெண் குழந்தைகளின் நிலை மிகவும் சிக்கலானது. தீட்டு, கருப்பப் பை நீக்கம் இப்படிப் பல சிக்கல்கள். படுத்த நிலைமுதல் உட்கார்ந்த நிலைவரை உள்ள மூளைவளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகளுக்காக மாதமாதம் உதவித்தொகைக்காகப் போராட்டம் செய்திருக்கிறேன். யாரும் உணர்வதில்லை. ரயிலில் காலைத்தூக்கி ஏறிக்கொண்டு எளிதாகப் போய்விடுகிறோம். கால் இல்லாதவர்களைப் பற்றி உணர்வதே இல்லை. இந்த மோசமான வாழ்க்கையைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை.
கேள்வி:
உண்மையாக மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், பெண்ணியம் என்ற தளத்தில் செயல்படுபவர்கள் வேறு. ஆனால் இவற்றின்பேரில் போலித்தனமாக இயங்குபவர்கள் வழக்கமான ஆணாதிக்கத்துடன் இருக்கிறார்கள். இது குறித்துச் சொல்லுங்கள்.
பதில்:
உண்மையில் எல்லா கோட்பாடுகளிலும் ஆழ்ந்து உண்மையாகச் செயல்படுபவர்கள் ஒருபக்கம் இருக்கிறார்கள். இன்னொருபக்கம் மேலோட்டமாக; எல்லாமே வியாபாரம். எது விற்குமோ அதை விற்பார்கள். பெரியார், அம்பேத்கர், பௌத்தம், அமேசான் எல்லாம் ஒன்றுதான். மேலோட்டமானவர்களுக்கு வியாபாரம்தான். இன்று பெரியாரியத்தை, காந்தியத்தைக் கேள்வி கேட்கிறார்கள் சிலர். காந்தியத்தைக் கேள்வி கேட்பதற்குச் சில நியாயங்கள் இருக்கின்றன. பெரியாரியத்தைக் கேள்வி கேட்பவர்கள் வெறும் படிப்பறிவை வைத்துத்தான் கேட்கிறார்கள். வாழ்க்கை, சமூக அனுபவ அறிவைக் கொண்டு அவர்கள் கேட்பதாக நான் நினைக்கவில்லை. சிறுவயதில் எங்கள் வீட்டில் தாகூர் படம் மாட்டியிருக்கும். தாகூர் படம் தாடியும் மீசையுமா இருக்கும். வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் வந்தால், ‘ஏண்டி ராமசாமி நாயக்கர் படத்தை வைத்துள்ளீர்கள்’ என்று கேட்பார்கள். அவர்களுக்குத் தாடிதான் தெரியுமே ஒழிய பெரியாரும் தெரியாது தாகூரும் தெரியாது. தாடி வைத்தவரெல்லாம் பெரியாரும் ஆகமுடியாது, தாகூரும் ஆகமுடியாது. இப்படித்தான் அதைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
………………
கேள்வி:
அம்பேத்கருடைய Pali Dictionary (பாலி அகராதி) மற்றும் கட்டுரைகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளீர்கள். இந்தியிலிருந்து பல படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவருகிறீர்கள். இந்த மொழிபெயர்ப்பு அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்.
பதில்:
1930 முதல் 1960 வரை என் அம்மா இந்தி வகுப்பு எடுத்தார்கள். சிறு வயது முதலே நானும் இந்தி கேட்பதும் பேசுவதும் உண்டு. சரஸ்வதி ராம்நாத் எங்கள் அம்மாவின் முதல் மாணவி. தன் மாமியாரோடு வந்து படிப்பார். ஒருமுறை, பிரேம்சந்த்தின் கதையை மொழிபெயர்த்துத் தன்பேரில் போட்டுக்கொண்டார். பத்திரிக்கையிலும் வந்துவிட்டது. என் அம்மா பார்த்துவிட்டுக் கண்டித்தார். மொழிபெயர்ப்பு என்பது திருட்டாகக் கூடாது. இன்னாருடையது என்று பெயரைக் குறிப்பிட வேண்டும் எனச் சொன்னார். எங்கள் அம்மாவின் இந்தக் கண்டிப்பு என்னைப் பாதித்தது. பின்பு இவ்வாறு சரியாகச் செயல்படாதவர்களைப் புறக்கணிக்கவும் செய்தார். இது எனக்குப் பயமாக இருந்தது. அம்மா இருந்தபோதிருந்தே நான் மொழிபெயர்ப்பைத் தொடங்கிவிட்டேன். ஆனால் எனது அம்மா இறந்தபிறகுதான் நிறைய மொழிபெயர்ப்புகளைச் செய்யத் தொடங்கினேன்.
மொழிபெயர்ப்பில் நான் இறங்கும்போது என் காதில் ஒரு மணி அடித்துக்கொண்டே இருக்கும். ‘நீ திருடுகிறாயா, மொழிபெயர்க்கிறாயா’ என்று. கூடியவரையில் அந்த எழுத்துக்கு நேர்மையாக இருக்கவேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு.
ரவிக்குமார், ஸ்டாலின் ராஜாங்கம். ஜே. பாலசுப்ரமணியம் முதலியவர்களின் மொழிபெயர்ப்புகளைப் படித்தேன். தோசைக்கல் காய்ந்தபிறகு தோசை ஊற்றுவதுபோல் நூலைக் குறித்த அனுபவம் வந்தபின்புதான் மொழிபெயர்ப்புக்குள் செல்வேன். அம்பேத்கரை மொழிபெயர்க்கும்போதுகூட நிறைய விடயங்களைத் தேடிப்படித்து எல்லாவற்றையும் உள்வாங்கி அந்த வெதுவெதுப்பு வந்தபின்புதான் மொழிபெயர்க்கத் தொடங்கினேன்.
பாலி அகராதி மொழிபெயர்ப்பு ஒரு விளையாட்டாகத் தொடங்கியதுதான். போகப்போக அம்பேத்கரும் என்னை விழுங்கிவிட்டார், பாலியும் என்னை விழுங்கிவிட்டது. பின்பு முடித்துவிட்டேன். பின்பு கொரோனா வந்தது. யாரும் வெளியிடுவதற்கு ஆட்கள் இல்லை. அளவு மாற்றும்போது சிக்கல் வந்தது. தமிழ், பாலி எழுத்துக்கள் மாறிவிடுகின்றன. அதைச் சரி செய்ய வேண்டும். அது ஒன்றும் கடினமில்லை செய்து வெளியிட வேண்டும்.
கேள்வி:
அம்பேத்கரின் கட்டுரைகள் மற்றும் Pali Dictionary (பாலி அகராதி) மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் அவரின் பன்முக ஆய்வுமுறை குறித்துச் சொல்லுங்கள்.
பதில்:
நாம் எல்லோரையும் ஒரு அச்சுக்குள் போட்டு வார்த்து வைத்துவிடுகிறோம். அப்புறம் அந்த அச்சைத் திறப்பதே இல்லை. அவர் 14 மொழிகள் அறிந்தவர், பொருளாதார வல்லுநர், சட்ட வல்லுநர், சாதிய விடுதலை – சமூக விடுதலை - அரசியல் விடுதலை எனப் பல தளங்களில் செயலாற்றியிருக்கிறார். அப்புறம் வயலின் வாசிப்பாளராகவும் இருந்திருக்கிறார். பொருளாதார வல்லுநர், சாதி, அரசியல் போன்ற துறைகளில் பல விதமான மாற்றங்கள் கொண்டு வந்தவர், சட்டங்களை இயற்றியவர். எல்லாவற்றிக்கும் மேலாக அவர் ஒரு தனி இராணுவப்படை ஒன்றை வைத்து நடத்திவந்தவர். இது பலருக்கும் தெரியாது. சமத்துவ இராணுவ அணி என்று அதற்குப் பெயர். மஹத் (1927) நிகழ்வை ஒட்டி இதைச் செய்தார். இதில் மற்ற சாதிக்காரர்களும் இருந்தார்கள். மேலும் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் எனப் பலரும் இருந்தனர். தலித் மக்களுக்குப் பாதுகாப்பாக அது செயல்பட்டது. போராட்டத்தில் யாரேனும் அடித்தால் இவர்கள் திருப்பி அடிப்பார்கள். இப்படிப் பல முக்கியமான வேலைகளைச் செய்திருக்கிறார். இதையெல்லாம் நாம் சொல்லவே இல்லை.
கேள்வி:
பெண் எழுத்தினுடைய போக்குகளை 30, 40 ஆண்டுக்கும் மேலாகப் பார்த்துவருகிறீர்கள். அன்றுள்ள சூழல் வேறு. இன்று சூழல் மாறி இருக்கிறது. இன்றுள்ள நிலைமைகளைப் பெண் எழுத்தாளர்கள் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள். இன்னும் வெளிப்படுத்தவேண்டியவைகள் குறித்துச் சொல்லுங்கள்.
பதில்:
முன்பு இருந்த பெண்களுக்குக் குடும்பம் மட்டுமே சிக்கலாக இருந்தது. இப்போது எல்லாமுமே எல்லா இடத்திலும் சிக்கலாக இருக்கிறது. சமூகத்தின் நிலை அந்த அளவிற்குப் பெண்களுக்கு எதிராக இருப்பதைப் பார்க்கமுடிகிறது. விவாகரத்தான பெண்களை அவ்வளவு இழிவாகச் சமூகம் பார்க்கிறது. ஒற்றைப் பெற்றோராக இருந்து ஒரு பெண் குழந்தைகளை வளர்ப்பது எவ்வளவு கடினம். ஐடி நிறுவனங்களில் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் அதிகம். வேலைசெய்யும் இடங்களில் வேலைப்பளு மட்டுமல்ல, பாலியல் தொல்லைகளும் நடக்கின்றன. இவற்றையெல்லாம் சொல்லவேண்டியிருக்கிறது. ஆட்டிசம், மனநிலை பாதிப்புக்குள்ளான பெண்களின் நிலை குறித்தெல்லாம் பேசவேண்டும். தூய்மைப்பணியில் ஈடுபடும் பெண்களின் நிலையை நாம் உணர மறுக்கிறோம். இவை குறித்தெல்லாம் நாம் பேசியாக வேண்டும். இப்படி இன்னும் நிறைய நாம் பேசவேண்டியிருக்கிறது. யாரேனும் ஒருவர் இப்படியானவைகளைத் தொட்டால் உடனே எல்லாரும் அதைப் போய் மொய்த்துக்கொண்டு போலியாக எதையாவது செய்யத் தொடங்கிவிடுகிறார்கள். உண்மையாக யாரும் சொல்வதில்லை.
கேள்வி:
பொதுவாகவே ராஜம்கிருஷ்ணன் போன்ற பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை ஆண்கள்தான் அதிகம் ஆய்வு செய்திருக்கிறார்கள். பெண்கள் ஆய்வு செய்வதற்கும் ஆண்கள் ஆய்வு செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறதா.
பதில்:
பொதுவாகவே பெண்கள் ஆய்வு மேற்கொள்ளவே முடியாத நிலையில் சமூகச் சூழல் உள்ளது. குடும்பத்தை விட்டு வெளியில் செல்ல முடியாத சூழல் உள்ளது. ராஜம் கிருஷ்ணனுக்குக் குழந்தைகள் இல்லை. கணவர் உதவியாக இருந்தார். கள ஆய்வு மேற்கொண்டு நிறைய எழுதினார். அப்படி ஆய்வு செய்வதற்கோ, குடும்பச் சுமையின்றி இயங்க முடியாத நிலையில் பெண்கள் இருக்கிறார்கள். 2 மணிநேரம்கூட குடும்பத்தைவிட்டு சிந்திக்க, எழுதமுடியாத சூழலில்தான் பெண்களின் நிலைமை இன்று இருக்கிறது.
தலித் எழுத்தும், பெண் எழுத்தும் புலம்பல்கள் என்கிறார்கள். பாத்திரத்தில் உள்ளதை வெளியேற்றினால்தானே வேறொன்றை ஊற்றமுடியும். மனதில் உள்ள புலம்பல்களை எழுதத்தான் வேண்டும். வீட்டைவிட்டு வெளியே வராமல் எழுதும் நிலை இருந்தால், வீட்டில் உள்ள ரகளைகளைத்தான் எழுத முடியும். வெளியே வந்தால் மற்றது வரும். முதலில் தன்னைக் காலி செய்து கொள்ளட்டும் எல்லோரும். பிறகு மற்றதை எழுதுவார்கள் இல்லையா. எனவே இவர்கள் இப்படித்தான் என்று முன்முடிவுகொள்வது தவறானது. ஓம்பிரகாஷ் வால்மீகியின் கவிதைகள் எப்படி இருக்கின்றன தெரியுமா? லீலாதர் மண்டலோய் மலைவாழ் மக்களை எழுதியிருக்கிறார். இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தை தொடக்கத்தில் தத்தித்தான் நடக்கும். பிறகு நன்றாக நடக்கும்போது விமர்சனம் செய், ஓங்கியடி; திருப்பியடித்தால் வாங்கிக்கொள். இப்படித்தான் இருக்க வேண்டும். அடக்குமுறைக்கு எந்த இடமும் கிடையாது. பெண்கள் சமமென்று பலரும் பழகுவது சந்தோசமாக இருக்கிறது. முன்பெல்லாம் ஆண்களுக்கு எப்போதும் எந்தப் பெண்ணைப்பார்த்தாலும் காமம் இருக்கும். இப்போதெல்லாம் காமம் இல்லாத பார்வை பல ஆண்களிடம் இருக்கிறது. தொடுதல் என்பதும் இயல்பாக இருக்கிறது. எங்கள் வீட்டில் எந்தச் சிக்கலும் இல்லை. எங்கள் வீட்டுச்சூழல் வேறு. நிலைமை மாறி இருக்கிறது. ஆனாலும் வேறுபல சிக்கல்கள் இருக்கின்றன.
கேள்வி:
பெண்கள், தலித்துக்கள் எழுத்து மூலம் தம்மை வெளிப்படுத்திக்கொள்வது ஏற்கமுடியாததாக இருக்கிறது பலரால். உடனிருக்கும் நண்பர்கள்கூட ஏற்பதில்லை. பாலியல் ரீதியாகப் பார்க்கும் வடிவம் மாறியிருக்கேயொழிய அந்தக் கண்ணோட்டம் அப்படியேதான் இருக்கிறது. வெளிப்படையாக இல்லையென்றாலும் உள்ளீடாக இருக்கிறது. ஒருவரின் எழுத்தைப் பார்த்தே இவர் இப்படித்தான், இன்ன சாதிதான் என்று நினைத்து ஒடுக்கும் நிலை இருக்கிறது. நம்மை எழுதவிடாமல் செய்யும்நிலை இப்படியாகக் கல்விப்புலம் உட்பட நிகழ்கிறது. இதை எப்படிப் பார்ப்பது?
பதில்:
நீங்கள் சொல்வது உண்மைதான். பாலியல்ரீதியான துன்பம் இல்லையென்று சொல்லமாட்டேன். நேரடியாகக் காமம் கண்களில் தெரிவதில்லை. முன்புபோல் மிட்டாய்க்கடையை வாயைப் பிளந்துகொண்டு பார்க்கும் பார்வை இப்போது இல்லை. ஆனால் மனதிற்குள் பெரும்பாலான பல ஆண்களுக்குப் பெண்கள் மேல் ஒரு வெறுப்பு, கோவம் வந்திருக்கிறது. பெண்களின் வளர்ச்சிமேல் கோபம், எரிச்சல் இருக்கிறது. இதன் உச்சமாக என்ன நினைக்கிறார்களென்றால் பெண்ணுடலைப் பயன்படுத்திவிட்டால் அவர்களை அடக்கிவிடலாம் என நினைக்கிறார்கள். அது முடியாது. பெண்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. இன்னும் சொல்வதெனில் உலகம் முழுதும் இவ்வளவு ஆண்கள் இருக்கிறார்கள். ஒற்றைப் பெற்றோர் என்றால் யார் அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள்வது. பெண்தான். அந்தக் காலத்தின் இளம் விதவையும் இந்தக் காலத்தின் ஒற்றைப் பெற்றோரும் ஒன்றுதான். நாம் இருவரும் பெற்ற பிள்ளைதானே என்று எந்த ஆணாவது தூக்கிக்கொண்டு போகிறானா இல்லையே. பெண்குழந்தையுடன் இருக்கும் ஒரு விதவையை இரண்டாம் திருமணம் ஒரு ஆண் செய்து கொண்டால் நிலைமை இன்னும் மிக மோசமாக இருக்கிறது. எனவே ஆண்கள் எல்லோரின்மீதும் கோபம் வரத்தான் செய்யும். இளம் விதவையும் ஒற்றைப் பெற்றோரின் பெண்ணும் பிறந்த வீட்டைத்தான் சார்ந்திருக்கிறார்கள். ஆண் இன்னொரு திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறான். இந்தப் பெண்கள் எல்லாம் என்ன செய்வார்கள். முரண்பாடுகள் வந்து விலகிவிட்டால் பெண்கள் நிலைதான் துயரமாகிறது. அவளுக்கு ஒரு குழந்தை இருந்தால் இன்னும் நிலைமை துயரமானது. வளர்ந்தபின் குழந்தை மனதில் அந்த ஆண்தான் நல்லவன், அம்மாதான் பொல்லாதவள் என்ற அளவுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்து மூளைச்சலவை செய்து எண்ணத்தை மாற்றிவிடுகிறான். இப்படியாக ஆண்கள் மிக மோசமாக நடந்துகொள்கிறார்கள். இந்த ஆண்கள் எல்லாம் மனிதர்களே இல்லை.
கேள்வி:
குடும்ப அமைப்பே அவ்வாறுதான் இருக்கிறது. குழந்தைவளர்ப்பு, வீட்டில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ளவேண்டும், எல்லாம் பெண்கள்தான் செய்ய வேண்டும், குழந்தை சரியில்லை எனவும் தவறு செய்தால்கூட நீதான் காரணம் எனக் குற்றம் சாட்டுவார்கள். இதுதான் குடும்ப அமைப்பின் ஆணாதிக்கமாக இருக்கிறது.
பதில்:
ஆம் சரிதான். பெரிய வேலையில், வெளிநாடுகளில்கூட ஆண் இருப்பான். குழந்தை படிக்கவில்லையென்றால் நீதான் காரணமெனச் சொல்வான். உனக்கும்தானே பொறுப்பிருக்கிறது. அதை இந்த ஆண்கள் கண்டுகொள்வதே இல்லை. குழந்தையை வளர்ப்பது என்பது இன்றைக்குக் கடினமான செயல். அந்தக் காலம்போல் இல்லை.
கேள்வி:
கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போனாலும் ஒரே சம்பளம் வாங்கினாலும் வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பில் ஒரு சிறு வேலையைக்கூட ஆண்கள் செய்வதில்லை. முழுப் பொறுப்பு பெண்ணுடையதே. ஆதிக்கம் செய்வது மட்டுமே ஆண்களின் வேலையாக இருக்கிறது.
பதில்:
ஆம் மோசமான சூழல்தான் இது. ஆண்கள் தான் எந்த வேலையைச் செய்யக்கூடாது எனத் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை அவர்கள் அறிந்துகொள்வதே இல்லை. அதுதான் சிக்கல் இங்கே.
கேள்வி:
இந்த இடத்தில் பெரியார் கூறியது நினைவுக்கு வருகிறது. பெண்கள் எல்லாரும் கருப்பையை அறுத்தெறியுங்கள் என்று சொன்னார். இந்தச் சிக்கல்கள் எல்லாம் பெண்களுக்குத் தெரியும். குழந்தை பிறந்துவிட்டால் நான்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆண் வேலைக்குப் போவான். நான் வேலைக்குப் போனாலும் நான்தான் குழந்தையைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று பெண்கள் இருக்கிறார்கள். இந்தவகையில் பெண்கள் ஆணாதிக்கத்தை ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் எந்தப் பெண்களும் இவ்வளவு மோசமான நிலையை எதிர்க்க முன்வருவதில்லை.
பதில்:
இந்த மோசமான நிலையை மாற்றவேண்டுமென்றால் பெண்களாகிய நாம் குழந்தை பெற்றுக்கொள்ளாமல்தான் இருக்க வேண்டும். என்னவெல்லாம் நம்மைத் துன்புறுத்துகிறதோ அதில் இருந்தெல்லாம் நாம் விலக வேண்டும். எதுவெல்லாம் தடையாக இருக்கிறதோ அதிலிருந்து வெளியேற வேண்டும். ஆனால், இந்தப் பெண்கள் எல்லாம் நான் கல்யாணத்துக்கு முன் கவிதை எழுதினேன், நடனம் ஆடினேன், பாட்டுப்பாடினேன் என்று சொல்வார்கள். எந்த ஆம்பிளையாவது நான் கல்யாணத்துக்கு முன்பு கவிதை எழுதிக்கொண்டிருந்தேன் எனச் சொல்கிறானா இல்லையே. அவன் வேலையை அவன் தொடர்கிறானா இல்லையா. அப்போது பெண்களும் விடக்கூடாது. நான் இப்படித்தான் இருப்பேன் எனச் சொல்ல வேண்டியதுதானே. கட்டிவைத்த நாய்போல் வீட்டிற்குள்ளேயே சுற்றி வருவது, பிள்ளை பெற்றுக் கொள்வது, காரில் போவதில் சந்தோசம் அடைவது என்பது பெண்களின் தவறான செயல். அதற்காக வெளியே வரச்சொல்கிறாயா எனக் கேட்பார்கள் சிலர். உனக்கென்று ஒரு இடத்தை பறித்துக்கொள். உனக்கென்று மூச்சு விடுவதற்குக்கூட இடம் வேண்டாமா என்ன. திருமணம் ஆகிவிட்டாலே தன்னைப்பற்றி யோசிக்கவே முடியாமல், தனக்காக இல்லாமல் மற்றவர்களுக்காகவே வாழவேண்டுமென்று இருப்பதுதான் மோசமான நிலை.
இன்னும் மோசமான நிலை என்னவென்றால், ஒரு ஆண் வேறுமதத்தில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால், அந்தப் பெண் ஆணின் மதத்திற்கு மாற வேண்டும். ஏன் இந்த நிலை. ஆண் மாறுவானா மாறமாட்டான். இந்தப் பெண்ணை அவள் நிலையில் இருக்கவும் விடமாட்டான். ஒரு பெண் எங்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு பர்தா அணிந்துகொண்டு வந்திருந்தாள். யாரென்று விசாரித்தபோது அவள் சொன்னாள். நான் முசுலீமைக் கல்யாணம் செய்துகொண்டேன் என்றாள். இதுதான் நிலை.
கேள்வி:
நவீன கவிதைகள் என்று காட்டிக்கொள்வதற்காகச் சிலர் சில குறிச்சொற்களைப் பயன்படுத்தி வணிகம் செய்வதுபோல் சிலர் தங்களை முற்போக்காளர்கள் எனக் காட்டிக் கொள்வதற்காக சில குறிச்சொற்களைப் பயன்படுத்தி முற்போக்குவாதி, பெண்ணியவாதி என்ற போர்வையில் தன்னைக் காட்டிக்கொண்டு அதையே பெண்களை கவர்வதற்கும், பாலியல்ரீதியாகச் சுரண்டுவதற்கும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தன்னை முற்போக்கு உலகின் பகுதியாளர் என்றும் காட்டிக் கொள்கிறார்கள். இப்படியான போக்கு இருக்கிறது. அப்படி எனில் இலக்கியம் என்பது எது, எப்படி இருக்க வேண்டும். இலக்கியவாதி என்பவர் எப்படி தனிப்பட்ட வாழ்வில் இருக்க வேண்டும்?
பதில்:
எழுத்து வேறு நான் வேறு அல்ல. அப்படி இருக்க முடியாது. எனக்குள் இருப்பதைத்தான் எழுத முடியும். எல்லாரும் எழுதுவது உண்மையாக, நேர்மையாக இருக்க வேண்டும். எழுதுவது வாழ்வாக இருக்க வேண்டும். அதுதான் சரியான இலக்கியம். இல்லையேல் என்னதான் வேசம் போட்டாலும் அவர்களின் ஒருவார்த்தை போதும் அவர் யார், எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று நமக்குத் தெரிந்துவிடும். நேர்மையும் உண்மையும் மிக முக்கியம் எழுத்திலும் வாழ்விலும். எவ்வளவு வேசம் போட்டாலும் நீண்டநாள் நிற்காது. ஆனால் இன்னொன்று, தகர டப்பாவில் கல்லைப்போட்டு ஆட்டினால்தான் சத்தம் அதிகமாக வருகிறது என நினைக்கிறார்கள் சிலர். நேர்மையாக, அமைதியாக இருந்தால் யாரும் கண்டுகொள்வதில்லை. விளம்பர உலகம்தான் எல்லாம். எழுத்தும் விளம்பரம், வியாபாரம்தான் இன்று. கொய்யா பழம், மாம்பழம் சீசன்போல அப்போது புதிதாக என்னவருகிறதோ அதை எழுதுவார்கள், விற்பார்கள்.
(முற்றும்)
கிருஷாங்கினியின் படைப்புகள்





