-->

அண்மை

சியாமல்குமார் பிரமாணிக் கவிதைகள் தமிழில்: ஞா.சத்தீஸ்வரன்


1. இன்னொரு மகாகாவியம் எழுதப்படும்
மரங்களின் கொப்புக் கிளைகளைப் பற்றிக்கொண்டு நிற்கிறேன்
சுற்றிலும் பசி அவமானம்
பேதாபேதங்களின் எல்லைக்கோடுகள்
கனவுப்பறவைகள் தொலைவில் சென்றுவிட்டன
எங்கள் பால்யத்தையும் இழந்துவிட்டோம்
பருவங்களைத் தொட்டுப் பார்க்கிறேன்
உடைந்த இதயத்துடன்
நதியில் நீச்சலடிக்கிறேன்
வானத்தைப் பார்க்கிறேன்
பாடல் பாடுகிறேன்
காற்று வீசிக்கொண்டே இருக்கிறது
நான் துயரத்தின் சொற்களைத் தேடுகிறேன்
மற்றுமொரு மகாகாவியம் எழுதுவதற்காக.

2. நீ இங்கேதான் இருந்தாய்
இங்கே ஒரு நாள் இருந்தது எங்கள் நெல்வயல்
விடிந்தால் நடந்துசெல்வோம் அதனிடம்
தலைசாய்ந்த நெற்பயிர்கள் அணைத்துக்கொள்ளும் என்னை
மிகுந்த காதலுடன்
வாழ்வின் துயரக்கோடுகளை அழித்துவிடும்
என்னை அழைத்துச் சொல்லும் -
“வா அருகில் வா
நான் இருக்கிறேன்.”
இன்று எல்லாம் நினைவுகள்
எல்லை தாண்டி நான் செல்லும்போதெல்லாம்
அது என்னிடம் சொல்கிறது -
“நீ இங்கேதான் இருந்தாய்.”

3. நமது பிள்ளைகளின் யுத்தம்
வீதியில் நமது பிள்ளைகளின் யுத்த விளையாட்டு
தொடர்ந்துகொண்டே இருக்கிறது
முன்னேறிச் செல்கிறேன் நேராக
கொலையாளியைப் பழிதீர்க்க
ஆழ்ந்த பெருமூச்சுடன்
அடக்குமுறையாளனின் கைகளை உடைக்கிறேன்
பனிக்காலத்தின் குளிர்க்காற்று வீசிக்கொண்டிருக்கிறது
நடுக்கும் குளிரில் பார்க்கிறேன்
அப்பா நின்றுகொண்டிருக்கிறார்
கையில் கிழிந்த போர்வையுடன்
அவர் கண்களிரண்டும் நனைந்திருக்கின்றன.

4. முதுகுத்தண்டை நேராக வைத்து
எனது இருப்பிலிருந்து பிறப்பெடுக்கிறது ஓர் எழுதுகோல்
எங்களது வேதனைகளைப் பற்றி எழுதுவதற்காக
தீண்டப்படாதவர்களின் வாழ்க்கைத் துயரங்களை எழுதுவதற்காக!
நெஞ்சின் ஆழத்தில் பெரும்பாறை
மண்
நெருப்பு
நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் பாய்கிறது
எங்களது துயரங்களின் சொற்கள்
கவிதையின் தடைசெய்யப்பட்ட மொழி
சப்புக்கொட்டி ருசிக்கிறது அதன் சுவையை
கடும் மணம்
இப்போது நான் தலைநிமிர்ந்து நடந்து செல்கிறேன்
முதுகுத்தண்டை நேராக வைத்து.

5. இதற்குப் பெயர்தான் வாழ்க்கை
இங்கே முதிய கருவேலமரங்களின் வனம்
பிறந்ததிலிருந்து கனத்த பெருமூச்சு
ஆகாயத்தில் நட்சத்திரங்களின் நெருப்பு எரிகிறது
இங்கே சிதறடிக்கப்பட்டது எங்கள் நாகரிகத்தின் தொல்வரலாறு

விடியும்போது மூதாதையர்கள் நடந்துபோய்விடுகின்றனர்
வயலைக் கடந்து
வனத்தைக் கடந்து
நதியைக் கடந்து
கைப்பிடியளவு நெல்மணிகளைக் கொண்டுவருவதற்காக
சிறகுகளில் இரத்தக் காயங்களுடன் பறந்து வருகிறது பருந்து

சுற்றிலும் இவ்வளவு வேதனைகள் அவமானங்கள்
நெஞ்சாங்கூட்டை உலுக்குகின்றன
இருந்தும் பொறுக்கி எடுத்துக்கொண்டேன் சில கனவுகளை
புகலிடமற்ற வேரில்
துயரவீட்டின் குடும்பத்தில்

விழிகளுக்குள் மேகத்தின் நிழல்
மழையின் பாடல்
இதற்குப் பெயர்தான் வாழ்க்கை.

6. எங்கேயும் போக அனுமதி இல்லை
எங்களுக்கு எங்கேயும் போக அனுமதியில்லை
ஒரே இடத்தில் நின்றுகொண்டே இருப்பதைத்தவிர
சுற்றிலும் முள்கம்பி வேலிகள்
இருந்தாலும் இந்தக் கால்களிரண்டும் முன்னேறிச் செல்ல விரும்புகின்றன
இந்தக் கைகள் இரண்டும் கைப்பற்றத் துடிக்கின்றன விடுதலையை
எனது இதயம்
வானம் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறது.

7. நீ விருட்சமாகி நிற்கும்போது
வீடெங்கும் நிறைந்திருக்கும் அந்தகாரத்தின் நடுவில்
தேய்ந்து கொண்டிருக்கும் நிலவு மூழ்கிவிடுகிறது
ஆயிரம் மாற்றங்களுக்கு நடுவிலும்
வேதனையின் குரல்களைக் கேட்க முடிகிறது
இரவு முழுக்க
ஒரு கவிதை எழுதப்படுகிறது
மண்ணின் கவிதை
வனத்தின் கவிதை
மீண்டும் நாம் சந்தித்துக்கொள்வோம்
நீ விருட்சமாகி நிற்கும்போது.
Author Picture

சியாமல்குமார் பிரமாணிக்

வங்காளத்தில் தற்போது எழுதிவரும் தலித் எழுத்தாளர்களில் முதன்மையானவர். தலித் சாகித்திய அகாதெமி, தலித் சாகித்திய சன்ஸ்தா உள்ளிட்ட பல்வேறு தலித் இலக்கிய அமைப்புகளில் இணைந்து செயலாற்றி வருகிறார். இவரது இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் பங்களிப்பு செலுத்திவருகிறார். இவரது கவிதைகளும் சிறுகதைகளும் ஆங்கிலம், இந்தி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய சிறுகதைகள் கொல்கத்தா பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அனன்ய நந்தனிக் இலக்கிய விருது, சக்திகுமார் சர்க்கார் நினைவு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

Author Picture

ஞா. சத்தீஸ்வரன்

மேற்குவங்கம் விசுவபாரதி நடுவண் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 'தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள்' கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. தமிழ்-வங்காள இலக்கிய மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.'பாங்ளா பாஷாய் தமிழ் ஷேக்கா' நூலை வங்காள மொழியில் எழுதியுள்ளார். வங்காள மொழிபெயர்ப்புக்காக கொல்கத்தா கவிதை சங்கமத்தின் மொழிபெயர்ப்பு விழாவில் 2022-ஆம் ஆண்டிற்கான 'சோனாலி கோஷல் நினைவு விருது' பெற்றுள்ளார். அகதிகள், சீதாயணம் மரிச்ஜாப்பி ஆகிய நூல்களை வங்காளத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஆயிஷா, சுகிர்தராணி கவிதைகள் உள்ளிட்ட நூல்களைக் கவிஞர் சீர்ஷா மண்டலுடன் இணைந்து தமிழிலிருந்து வங்காளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

மின்னஞ்சல் - tamilsathi1996@gmail.com

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு