-->

அண்மை

சியாமல்குமார் பிரமாணிக் கவிதைகள் (வங்கத்திலிருந்து தமிழில் ஞா.சத்தீஸ்வரன்)


விடுதலையின் பாடல்

நின்றுகொண்டிருக்கிறேன்
நின்றுகொண்டேதான் இருக்கிறேன்
எதிரே ஆயிரம் தடைகள்
மனுவின் சட்டங்கள்
இந்தக் கறுத்த உடலிலிருந்து
நெருப்பாய் மாறி
சொட்டுகிறது குருதி
வீதிகளில் வனாந்தரத்தில்
இப்போது மேகத்தின் முதுகில்
நிலா வெளிச்சம்
பார்க்க முடிகிறது என்னால்
முன்னே நீளும் பாதையினூடே
நடந்து செல்கிறது காலம்
எங்கள் மூதாதையர் பாடுகின்றனர்
விடுதலையின் பாடலை.


உதிர்ந்து விழும் இறகு

இன்னும் சொல்லப்படாத பலவும் எஞ்சியிருக்கின்றன
சொல்ல முடியவில்லை என்னால்
எனது கிழிந்த ஆடைகளை
பசியை
வறுமையிலும் ஏழ்மையிலும் பிழைத்துக் கிடப்பதை
ஒவ்வொரு நாளும் கல்லுடைத்துக் கல்லுடைத்து
வேதனையில் கழிகின்றன நாட்கள்
மூச்சுத்திணறலைத் தள்ளிக்கொண்டு வருகிறது இருள்
அதன் மூலைமுடுக்கெல்லாம்
நம்மைப் பற்றிய புனைகதைகள்
அதனைத் தொட்டுப் படைத்தோன் தேடுகிறான்
பெயரறியாத பறவையின் உதிர்ந்த இறகினை.


தேர்ச்சக்கரம்

நாற்புறமும் மலைகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கு
பெருஞ்சூறை வீசுகிறது
அத்துடன்
கடந்துபோன நாட்களின்
அத்தனைப் பேச்சுகளும்
விடிந்ததும் மலையின் முதுகிலேறி
உதிக்கிறது சூரியன்
அங்கே நின்றுகொண்டிருக்கும்
காலக்கிழவன்
சுற்றிக்கொண்டிருக்கிறான்
ஏழு குதிரைகள் இழுக்கும் தேரின் சக்கரங்களை.


நெருப்புப்பறவை பறக்கிறது

எனது நடைவழியெங்கும் துயர் நிறைந்திருக்கிறது
இருந்தாலும் நடந்தே செல்கிறேன் நாளும்
கடலின் உப்புநீரில் கால்களை நனைத்தபடி அள்ளிப் பருகுகிறேன்
நீரில்லை இது நஞ்சு
பூமியின்மேல் தெறித்துவிழுகிறது பகல்
விழிப்புடன் இருந்தாலும்
வாழ்க்கையைத் தொடப்போய்
தோற்றுவிடுகிறேன்
ஒவ்வொரு முறையும்
ஆனாலும் பார்க்கிறேன்
நெருப்புப்பறவை பறக்கிறது
ஓர் ஆதிப் போர்வீரன் எதிரில் வந்து நிற்கிறான்
எனது துயரத்திற்கும்
அவமானத்திற்கும் மிக அருகில்
என்னை நைல் நதியின் பாடலைக் கேட்கச் செய்வதற்காக.


கடும் நெருக்கடி

என் பிள்ளைக்குக் கதை சொல்கிறேன்
நிலவைப் பற்றியல்ல
எங்களது துயரங்களைப் பற்றி
பசியையும் வஞ்சிக்கப்பட்டதையும் பற்றி
இரவின் அந்தகாரம் நீள்கிறது
நெஞ்சின் ஆழத்தில் உடைந்துடைந்து போகிறது
வீட்டுச்சுவரில் சிதறி விழுகிறது பெருமூச்சு
தீண்டப்படாதவன் நான்
ஒரு நாளும் தொடமுடிந்ததில்லை தெய்வத்தை
பிறந்ததிலிருந்து தலைநிமிர்ந்து நிற்பது எதனால்?
சுய அடையாளத்தின் கடும் நெருக்கடிக்குள்
எப்போதும் நாங்கள்.

Author Picture

சியாமல்குமார் பிரமாணிக்

வங்காளத்தில் தற்போது எழுதிவரும் தலித் எழுத்தாளர்களில் முதன்மையானவர். தலித் சாகித்திய அகாதெமி, தலித் சாகித்திய சன்ஸ்தா உள்ளிட்ட பல்வேறு தலித் இலக்கிய அமைப்புகளில் இணைந்து செயலாற்றி வருகிறார். இவரது இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் பங்களிப்பு செலுத்திவருகிறார். இவரது கவிதைகளும் சிறுகதைகளும் ஆங்கிலம், இந்தி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய சிறுகதைகள் கொல்கத்தா பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அனன்ய நந்தனிக் இலக்கிய விருது, சக்திகுமார் சர்க்கார் நினைவு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

Author Picture

ஞா. சத்தீஸ்வரன்

மேற்குவங்கம் விசுவபாரதி நடுவண் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 'தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள்' கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. தமிழ்-வங்காள இலக்கிய மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.'பாங்ளா பாஷாய் தமிழ் ஷேக்கா' நூலை வங்காள மொழியில் எழுதியுள்ளார். வங்காள மொழிபெயர்ப்புக்காக கொல்கத்தா கவிதை சங்கமத்தின் மொழிபெயர்ப்பு விழாவில் 2022-ஆம் ஆண்டிற்கான 'சோனாலி கோஷல் நினைவு விருது' பெற்றுள்ளார். அகதிகள், சீதாயணம் மரிச்ஜாப்பி ஆகிய நூல்களை வங்காளத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஆயிஷா, சுகிர்தராணி கவிதைகள் உள்ளிட்ட நூல்களைக் கவிஞர் சீர்ஷா மண்டலுடன் இணைந்து தமிழிலிருந்து வங்காளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

மின்னஞ்சல் - tamilsathi1996@gmail.com

Post a Comment

முந்தைய பதிவு அடுத்த பதிவு