எழுத்தாளர்
ரேவதி, நாமக்கல் மாவட்டத்தைச்
சேர்ந்தவர். அரங்கக்கலைஞராக,
திருநங்கைகளின் வாழ்வை உணர்ச்சிகரமாக நாடக அரங்கில் வெளிப்படுத்திக்கொண்டு வருபவர். பாலியல் சிறுபான்மையினரின் உரிமைக்காகத்
தொடர்ந்து களத்தில் போராடிக்கொண்டிருப்பவர். இவர் எழுதிய 'உணர்வும் உருவமும்' என்ற
புத்தகம் திருநங்கையால் எழுதப்பட்ட முதல் புத்தகமாகும். இவருடைய வாழ்க்கை வரலாறான வெள்ளைமொழி
பல பல்கலைக்கழங்களில் பாடப்புத்தகமாக இருக்கிறது.
உணர்வும்
உருவமும் என்ற இப்புத்தகம், திருநங்கைகளின் வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு
பிரச்சனைகளைப் பதிவுசெய்திருக்கிறது. எழுத்தாளர் ரேவதி பல திருநங்கைகளை நேரில் சந்தித்து
அவர்களின் குழந்தைப் பருவம் முதல் குடும்பத்தாலும் சமூகத்தாலும் நிகழ்த்தப்படும் புறக்கணிப்புகள்
வன்முறைகள் உள்ளிட்ட யாவற்றையும் பதிவு செய்திருக்கிறார்.
திருநங்கைகளின்
வாழ்க்கையில் குழந்தைப் பருவம் என்பது சமூகத்தால் மிக மோசமானதாக மாற்றப்பட்டுள்ளது.
என்னுடைய உணர்வுகள் சரியா? நான் மட்டும்தான் இப்படி இருக்கிறேனா? என்ற அகரீதியான கேள்விகளால் ஏற்படும் பாதிப்புகள்
ஒருபுறம். மற்றொருபுறம் சமூகத்தால் கிண்டல்களும் கேலிகளும் எனத் திருநங்கைகளின் குழந்தைமனம்
என்பது பெரும் பாதிப்பைச் சந்திக்கிறது. பொதுச் சமூகத்தின் குழந்தைப்பருவம் மிக அழகானது,
மகிழ்ச்சிக்குரியது என்ற கருத்து திருநங்கைகளின் குழந்தைப்பருவத்துக்கு நேரெதிரானது.
கேரளாவைச்
சொந்த ஊராகக் கொண்ட திருநங்கை ரோஜா, பள்ளிப் பருவத்தில் அவரை திருநங்கை என்று அறிந்த
தலைமை ஆசிரியர் பாலுறவு கொள்கிறார். அவ் பாலியல் உறவு கிட்டத்தட்ட ஓர் வன்புணர்வே.
ஆனாலும் அத்தகைய உறவுகளை அது வன்முறையாக இருந்தாலும் அதனை அவர்கள் உணர்ந்தாலும் அதை
ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் திருநங்கைகளின் வாழ்க்கையை வைத்திருக்கிறது இச்சமூகம்.
அருணா
என்ற திருநங்கையைக் காட்டி வேதியியல் ஆசிரியர் வகுப்பெடுக்கும்போது கூறிய உதாரணம் பொதுச்சமூகம்
எவ்வளவு மோசமானதாக இருக்கிறது என்பதற்கான உதாரணம்.
"உலோகம்ன்னா, இரும்பு. கனமா இருக்கும். அலோகம்ன்னா
இரும்பு மாதிரி இருக்கும், ஆனா கனம் இருக்காது, அது ஒழுங்கற்ற வடிவம். குறிப்பிட்ட
ஒரு உருவத்தோடு இருக்காது. அதுக்கு எடுத்துக்காட்டு என்னனு கேட்டா, இங்க உட்கார்ந்த்துனு
இருக்கானே அவன்தானு காட்டி, இவன் ஆம்பளமாதிரி இருக்கான் ஆனா, நடவடிக்கை பொம்பள மாதிரி
இருக்குனு சொல்லி கேலி பேசி இருக்கிறார். இதைக் கேட்டு,வகுப்பில் இருந்த மாணவர்கள்
அனைவரும் அருணாவைக் கேவலமாகப் பார்த்துச் சிரித்திருக்கிறார்கள். ஓர் ஆசிரியரே இவ்வாறு
நடந்துகொள்ளும்போது, திருநங்கைகள் சகமாணவர்களால் எந்தளவுக்கு துன்புறுத்தப்பட்டு இருப்பார்கள்?
திருநங்கையாகத்
தங்களுடைய அடையாளத்தை வெளிப்படுத்திய பிறகு அவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் தீவிரமாகின்றன.
பெற்றோர்கள் அவர்களின் உணர்வுகள் மீது கவனம் செலுத்தாமல் அவர்கள்மீது எல்லாவிதமான வன்முறைகளையும்
திணிக்கிறார்கள்.
திருநங்கை
சுதா செந்தில்குமார் மீது அவரின் அப்பாவும் தம்பியும் நிகழ்த்திய வன்முறை என்பது அவரை
அரளிவிதையைக் குடித்துத் தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டியுள்ளது. அவர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டபோது எவரும் வரவில்லை என்பது புறக்கணிப்பின் உச்சம். மேலும் திருநங்கையின்
குடும்பத்தில் அவர்களுக்கு சேரவேண்டிய சொத்தைக் கொடுக்காமல் மறுத்துப் பொருளாதார ரீதியிலும்
நிர்கதியாக்கப்படுகிறார்கள்.
நிர்வாணம்
செய்துகொண்ட திருநங்கை அருணாவை அவரது அப்பா அடித்துத் துன்புறுத்தி மீண்டும் பள்ளிக்கூடத்தில்
சேர்கிறார். சகமாணவர்கள் மத்தியில் நிர்வாணம் செய்துகொண்டது தெரியாமல் இருக்க, இடைவேளையில்
தாமதமாகப் போவதும் வருவதுமாக இருக்கிறார். ஆனால் தேர்வு அறையில் ஆசிரியர் பரிசோதிக்கும்போது
நிர்வாணம் செய்துகொண்டது தெரியவே வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
திருநங்கை
ரோஜாவுக்கு வலிப்பு வந்து மருத்துமனைக்குச் சென்றபோது, அங்கு மருத்துவர்களும் செவிலியர்களும்
அவருக்குச் சிகிச்சை அளிக்காமல் பார்த்தபார்வை நாங்கள் மனிதர்கள் இல்லையா? என்றது போல்
இருந்ததாகப் பதிவுசெய்த்திருக்கிறார்.
பெங்களூரில்
திருநங்கைகளுக்கு
ஓட்டுரிமை இருக்கிறது. ஆனால் திருநங்கைகளுக்கு எவ்வித உதவியும் அரசால் வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில் திருநங்கை ரோஜா மற்றும் அவரது தோழிகள்,அத்தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரிடம்
முறையிடும்போது, அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டிக்கொள்ளுமாறு கூறுகிறார். அவர்களும்
அந்நிலத்தில் பணம் கடனாக வாங்கி குடிசை போடுகிறார்கள். ஒருநாள் வேலைக்குச் சென்று வீடு
திரும்புகையில் குடிசைகள் எறிந்துகிடக்கிறது.அதில் ஒருவர் இறந்தும் உள்ளார். பிறகு
அந்நிலம் வேறொருவருக்குச் சொந்தமான நிலம் என்றும் அவர்தான் தீ வைத்துள்ளார் எனத் தெரிந்தும்
ஏதும் செய்யமுடியாத நிலை.
ரெளவுடிகளின்
பாலியல் அத்துமீறல்கள், வன்முறைகள் எனச் சமூகத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் தாக்கக்கூடிய
நபர்களாகத் திருநங்கைகள் இருக்கிறார்கள். கடைகள் கேட்டு போதுவது, நடனமாடப்
போவது, பாலியல் தொழில்,
அமாம் (குளியல் அறை) நடத்துவது என இத்தகைய தொழில்களைச் செய்ய திருநங்கைகளை நிர்பந்திக்கிறது
இச்சமூகம்.
"பீடி கம்பனிகளுக்கும், சோப்புக்
கம்பனிகளுக்கும் விளம்பரம்
செய்ய அழைக்கும்போது தாங்களாகவே பாட்டுக்கட்டிப் பாடிகிட்டு ’டேப்ப’ கையாலத் தட்டிக்கிட்டு
ஆர்மோனியம் வாசிக்க தெருத்தெருவாய்ப் போவோம்" என்பதைத் திருநங்கை சாந்தி அம்மா
பதிவு செய்திருக்கிறார். சம்பளமாகப் பதினைந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய் மட்டும்தான்.
"பத்து ரூபாய் கொடுத்தாலும் ஆடனும் அந்த வருமானத்தில்தான் சாப்பாடு, துணிமணி,
பவுடர்,போக்குவரத்து எல்லாத்தையும் சமாளிக்கனும்". திருவிழாக்களில் கரகம் வைத்து
ஆடுவது பிடிக்கும் என்பதால் அதைச் சக திருநங்கையிடம் கற்றுக்கொண்டு திருவிழாக்களில்
சாமி வேஷம் போட்டு நடனமாடி இருக்கிறார்.
"ஊர்த்
திருவிழாக்களில் நடனம் ஆட எங்களை அழைப்பார்கள். அப்பொழுது எங்களைப் பரிசோதனைச் செய்கிறோம்
என ஆண்கள் மோசமாக எங்களின் உடல் அங்கங்களைத் தொட்டுப் பார்ப்பார்கள்.
ஊரில் விழா நடக்கும்போது உடைமாற்ற இடம்கூடக் கொடுக்காமல் எங்களை உடைமாற்றவைப்பது, அப்பொழுது
எல்லோரும் எங்களை வேடிக்கை பார்ப்பது என மோசமாக நடந்துகொள்வார்கள். மேலும், ஆபாசமாக
நடனமாட வைப்பதும், அவர்கள்தரும் சொற்ப பணத்துக்காகப் பலமணி நேரம் எங்களை நடனமாட சொல்லி
துன்புறுத்தியும் இருக்கிறார்கள். அதிலும் நடனமாடும் பெண்களைவிட மிகக் குறைவான பணத்தைக்
கொடுப்பார்கள்" என்றும் திருநங்கை ரஜினி கூறுகிறார்.
திருநங்கைகள்
பாலியல் தொழிலில் ஈடுபடும்போது எப்பொழுதும் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறார்கள். குறிப்பாக
ரெளடிகளிடம் சிக்கிக்கொண்டால் அவர்கள் எல்லாவகையிலும் துன்புறுத்தித் தூக்கிவீசப்படுகிறார்கள்.
இதைத்தாண்டி,
பொதுச்சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைகளுக்குச் சென்றாலும் திருநங்கை என்று தெரிந்தவுடன்
அவர்கள் மீது நிகழும் பாலியல் அத்துமீறலுக்கு அளவே இல்லை. திருநங்கை சுந்தரி கணினிமையத்தில்
வேலைக்கும் செல்லும் போது அங்கு இருக்கும் ஊழியர் ஒருவரால் பலவந்தமாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்படுகிறார்.
பொதுச்
சமூகத்தில் காதல் என்பது எளியதாகப் பெறக்கூடியதாக
இருக்கிறது. ஆனால் திருநங்கைகளின் உடல்கள் வன்முறையால் மட்டுமே தீண்டப்படுவதாக இருக்கிறதே
தவிர காதலால் தீண்டபடுவதே இல்லை. இந்நிலையில் காதல் என்ற ஒன்றைப் பெறுவதற்காகவும் அதைத்
தக்கவைப்பதற்காகவும் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி எல்லாவற்றையும்விடப் பெரியது. மேலும்,
ஆண்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு பல திருநங்கைகளைப் பொருளாதார ரீதியிலும், உடல் ரீதியிலும்
சுரண்டுகிறார்கள். இதில் விதிவிலக்காகத் திருநங்கை ரதி மற்றும் ராஜம் வாழ்க்கை இருக்கிறது.
இருவரும் கணவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையைப் பார்க்கலாம்.
திருநங்கைகள்
குழந்தைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில், மற்றவர்களின் குழந்தையைத் தன் குழந்தையாக
எண்ணி கவனிப்பதும் வளர்த்தெடுப்பதும் பொதுச் சமூக கற்பிதங்களை உடைத்திருக்கிறது.
கோபால்
அம்மா தன்னுடைய முன்னாள் காதலனின் குழந்தைகளைத் தன் குழந்தைகளாகப் பாவித்துப் படிக்கவைத்துத்
திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும் ராஜம் அம்மா தன்னுடைய அண்ணனின் நோயுற்ற குழந்தையைக்
காப்பாற்றி அப்பெண்ணுக்குப் பருவம் அடைந்த சடங்கைச் சிறப்பாகச் செய்து முடித்தேன் என்பதை
மகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார்.
சமூகத்தாலும்
குடும்பத்தாலும் புறக்கணிக்கப்படும் திருநங்கைகளை, திருநங்கைச்சமூகம் அவர்களைக் குடும்பமாக
ஏற்றுக்கொள்வது மிக முக்கியமானது. பெற்ற குடும்ப உறவுகள் கைவிடும்போது, தாயாக, தங்கையாக,
மகளாக, மருமகளாக ஒவ்வொரு திருநங்கைகளும் உறவுமுறையில் குடும்பமாக இணைத்துக்கொள்ளப்படுவது
திருநங்கைகளின் கலாச்சாரத்தில் சிறப்பான ஒன்று. பொதுச்சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள்
போல ஜாமாத் முறையில் இருப்பது இல்லை. குறிப்பாகச் சாதி சார்ந்தோ மதம் சார்ந்தோ எந்தவொரு
வேற்றுமைகளும் ஜாமாத்தில் இல்லை.
சமூகத்திற்காகவும்
தனக்குப் பிடித்தவர்களுக்குகாகவும் உயிருக்கே ஆபத்தான கொடூரமான வலியைத் தரக்கூடிய நிர்வாணம்
செய்துகொள்கிறார்கள். அதில் தாயம்மா நிர்வாணம், மருத்துவர் மூலம் செய்துகொள்ளும் நிர்வாணம்
என இருவகை உண்டு. சக திருநங்கையால் செய்துகொள்ளும்
நிர்வாணம் என்பது மயக்கமருந்து ஏதும் செழுத்தப்படாமல் பிறப்புறுப்பை வெட்டி எடுப்பதாக
இருக்கிறது. எனவே தாயம்மா நிர்வாணம் செய்துகொள்வது என்பது பெரிதும் மதிக்கப்படுகிறது.
நிர்வாணம் செய்தவர்கள் குணமானபிறகு பால் ஊற்றும் விழா மற்றும் மாதா பூஜை அவர்களின்
குருவால் ஏற்பாடு செய்யப்பட்டு முறையாக வீட்டுக்குள் அழைக்கப்படுகிறார்கள்.
மூத்த
திருநங்கைகள், தங்களுக்கு ஏற்பட்ட வன்முறைகள் புதியதாக வரும் இளம் திருநங்கைகளுக்கு
ஏற்படக்கூடாது எனப் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். திருநங்கைகளுக்குக் கல்வியின்
அவசியத்தை வலியுறுத்தி அதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றார்கள். சுயதொழில் தொடங்க உதவி,
கல்விநிலையங்களின் பாதுகாப்பு என உரிமைகளை அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்துப்
போராடுகிறார்கள். குறிப்பாகத் திருநங்கைகளுக்கான அமைப்பை உருவாக்கி, சமூகத்தால் புறக்கணிக்கப்படுவர்களுக்கு
நல்வழியை ஏற்படுத்த போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தொகுப்பாக,
உணர்வும் உருவமும் என்ற இப்புத்தகத்தின் வாயிலாகத் திருநங்கைகளின் வாழ்வில் சந்திக்க
நேரிடும் வன்முறைகளையும் போராட்டங்களையும் பதிவுசெய்வதாக இருந்தாலும், மற்றொருபுறம்
இச்சமூகம் எவ்வளவு மோசமான பாசிசத் தன்மையுடன் இருக்கிறது என்பதற்கான ஆவணமாக விளங்குகிறது.
அழகு, ரசனை என்று கற்பித்த இலக்கிய வகைமைகளுக்கு மாற்றாக எதிர் அழகியலை உருவாக்கியுள்ளது
இப்புத்தகம்.
வரலாற்றின்
ஒருகட்டத்தில், தனியுடைமையை நிலைநிறுத்த ஆண்- பெண் என்ற உற்பத்தி உறவுகள் மட்டும் புனிதமாக
மாற்றப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, சமூகத்தால் ஆணுக்குச் சாதகமான ஆண்மை- பெண்மை என்ற
கருத்தாக்கங்களின் மூலம் இருமையற்ற உறவுகள்
தடைசெய்யப்பட்டு இழிவுக்குள்ளானதாக மாற்றப்பட்டிருக்கிறது.
பால்-
பாலினம்- பாலியல் ஒருங்கிணைவு பற்றிய புரிதலற்று இருக்கிறது இச்சமூகம். இயற்கையான உடல்களின்
மீது கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தாக்கங்கள்தான் அனைத்துக்குமான அடிப்படைப் பிரச்சனையாக
உள்ளது. சமூகம்
உண்டாக்கிய கருத்தாக்கங்களை
உடைத்தெரிவதே மனித குல விடுதலையின் அடிப்படைச் சாரம். அந்த வகையில் உணர்வும் உருவமும்
முக்கியமான நூலாக அமைகிறது.
(உணர்வும் உருவமும் – தொகுப்பாசிரியர் ரேவதி, அடையாளம் வெளியீடு,திருச்சி, 2005)